சென்னை சீக்ரெட்ஸ்! நானா, நீயா?






சென்னை சீக்ரெட்ஸ்- 14-


அதிகாரச்சண்டைகளின் தொடக்கம்!

நகர்மன்றத் திட்டத்தை முன்மொழிந்த கிழக்கிந்திய கம்பெனியின் போர்டு தலைவர் சர் ஜோசையா சைல்ட், "நகர்மன்ற அமைப்பு இந்தியர்களும், ஆங்கிலேயர்களும் கலந்ததாக இருக்க வலியுறுத்தி கம்பெனிக்கு கடிதம் எழுதினார். மேயர், நகர்மன்ற உறுப்பினர், வழக்கு விசாரணை நடுவர், கிளார்க் போன்ற பதவிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதில், ‘‘இந்தியர்களுக்கு அதிகாரம் உண்டு என்றாலும், நகர்மன்றம் ஆங்கிலேயரின் அதிகாரத்தின் கீழ்தான் செயல்படும்’’ என்ற சைல்டின் வாக்குறுதி கம்பெனிக்கு தெம்பு தந்தது.

சைல்டின் சீர்திருத்தத்தால் நகர்மன்றக் கட்டடம், சிறைக் கூடம், சிறைக்காவலர்கள் நியமனம், உள்ளூர் குழந்தைகளுக்கு ஆங்கில மொழியை கற்பிக்கும் பள்ளிகள் தொடங்க வரிகள் வசூலிக்கலாம் என்ற சூழல் உருவானது. மாநகராட்சி உறுப்பினர்கள் 12 பேரில் ஆங்கிேலயர்கள் மூன்றுக்கு மிகாமலும், ஏழு உறுப்பினர்கள் முகலாயர்களாகவும், இந்துகளுக்காகவும் கலந்து இருப்பது விதியானது. ஆங்கிலத்தில் பராமரிக்கப்பட்ட நகர்மன்றத்தின் பதிவேடுகளை பராமரிக்கும் கிளர்க்குக்கு அவருக்கு போர்த்துகீசிய மொழியும், உள்ளூர் மொழியும் தெரிந்திருக்க வேண்டும் என ஆங்கிலேயர் விரும்பினர.

நகர்மன்ற உறுப்பினர்களின் உடை கரும்சிவப்பு நிறபட்டுத் துணியில் இருக்க வேண்டும். பன்னிரெண்டு உறுப்பினர்களுக்கும் குடைகள் பிடிக்கப்பட வேண்டும். வழக்கு விசாரணை நடுவர்கள் கருப்புநிற பட்டு கவுன்கள் அணிய வேண்டும் என பல்வேறு விதிகளை சர் சைல்டின் எழுதியிருந்தார். நீதி,காவல், நிர்வாகம் அனைத்துக்கும் பொறுப்பு நகர்மன்றம்தான்.

நகர்மன்ற உறுப்பினர்களில் சிலர் கம்பெனியின் நிர்வாகக் குழுவிலும் இடம்பெற்று தன்னிச்சையாக செயல்படுவதாகக் கவர்னர் எலிஹு யேல் புகார் சொன்னார். மேயர் நீதிமன்றம் சொன்ன தீர்ப்பிற்கு மேல்முறையீடு இல்லை என்பதை கவர்னர் எதிர்த்தார். கடற்படை நீதிமன்ற நீதிபதியிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றார். பவர் பாலிடிக்ஸ் உச்சம் பெற, கவர்னர் யேலும் நகர்மன்றத்தின் வரி வசூலிக்கும் அதிகாரத்தை குறைக்க முயற்சித்தார்.