தமிழர்களின் ஆவலாதி! - கடிதங்கள்















19.1.2013
பிரிய முருகுவிற்கு,

தங்களது 9.1.13 தேதியிட்ட கடிதங்கள் கிடைத்தன. சென்னை புத்தகத்திருவிழா சென்றிருந்ததால் தொடர்ச்சியாக கடிதங்கள் எழுத முடியவில்லை. நீங்கள் புத்தகத் திருவிழா வரவில்லை என்பது எனது வருத்தம். எப்போதும்போல அங்கு போட்டித்தேர்வுகளுக்கான அரங்குகள் நிரம்பி வழிந்தன. சினிமா பிரபலங்கள் உள்ளே நுழைந்ததால் புத்தகத் திருவிழாவில் நெரிசல் அதிகம். புத்தகங்களை படிப்பதை விட போட்டோ எடுத்து ஃபேஸ்புக் வரலாற்றில் தங்களை பதிவு செய்ய தமிழர்களுக்கு ஆவலாதி அதிகம்தான்.

கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டில் சிறந்த நூல்கள் என்றால் அது பெருமாள் முருகன் மற்றும் பூமணி எழுதியதாகவே இருக்க முடியும். வங்க நாவல்கள் சிலவற்றை வாங்கினேன். த.நா.குமாரசாமி மொழிபெயர்ப்பில் வங்க சிறுகதைகளை படித்த திலிருந்து வங்க இலக்கியம்மேல் பேரார்வம் பீறிடுகிறது. காமிக்ஸும் சிலது வாங்கினேன். முத்து காமிக்ஸும் பிரீமியமாக நூறு, நானூறு, அறுநூறு என விலையை தீர்மானித்திருந்தார்கள். என் மனநிலையை சமநிலைப்படுத்த நூல்களை தவிர வேறு வழியில்லை.

சாகித்திய அகாடமியில் எந்த நூல்களும் வாங்கவில்லை. நிறைய தள்ளுபடிகள் இருந்ததை கடைசியாகத்தான் பார்த்தேன். கையில் பஸ்ஸூக்குத்தான் காசு இருந்தது. இன்றைய தினம் கழிந்தது என நினைத்துக்கொண்டேன்.
நன்றி! சந்திப்போம்.