பெண்களுக்கு நீதிமறுக்கப்படுவது கோபத்தை தருகிறது!








இந்தியாவில் ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் பெண்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தல்களை சந்திக்கிறார்கள் என்கிறது ஆய்வுத்தகவல். கடந்த ஆறு ஆண்டுகளாக பெண்கள் சந்திக்கும் வல்லுறவு, தாக்குதல், படுகொலைகள் என அனைத்தையும் ஆவணப்படுத்தி வருகிறார் பத்திரிகையாளர் பிரியங்கா துபே.

தற்போது மீடூ இயக்கம் வேகமாக பிரபலம் அடைந்து வருகிறது. அதைப்பற்றிய தங்கள் கருத்து?

மீடூ இந்தியாவில் பரவியபோது நான் எனது நூலை எழுதி முடித்திருந்தேன். பத்திரிகையாளராக அதன் நகர்வை தற்போது கவனித்து வருகிறேன். இது மேல்தட்டு வர்க்கத்தில் நிகழும் பாலியல் அத்துமீறல்களை கவனப்படுத்துகிறது. இது அனைத்து பெண்களுக்கான நீதியைப் பெற்றுத்தர கருவியாக உதவுமா என்று தெரியவில்லை. இணையத்தில் வைரலானாலும் பெண்களுக்கான நீதியைப் பெற்றுத்தர நாளாகலாம். 





பெண்கள் பற்றிய ஆய்வுக்காக வேறுபாடுகள் நிறைந்த நகரங்களுக்கு கிராமங்களுக்கு சென்றிருப்பீர்கள். பத்திரிகையாளராக, பெண்ணாக உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

விரக்தியும் நம்பிக்கையும் ஒருசேர மனதில் உருவானது உண்டு. தொடக்கத்தில் களப்பணியின்போது நீதிமறுக்கப்பட்ட நிகழ்வுகளை கேட்கும்போது என்னால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாது. ஆனால் பத்திரிகையாளராக செய்திகளை கேட்கும்போது எதிர்வினை செய்வதைவிட அதனை பதிவு செய்வதில் கவனமாக இருக்க கற்றுக்கொண்டுள்ளேன். 

செய்திகளைக்கேட்டு உணர்ச்சிவசப்படாமல் நெகிழ்வாக இருப்பது இன்று சாத்தியமாகி உள்ளது. இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் அனைத்தும் டெல்லி ஊடகங்களில் வெளித்தெரிவதில்லை. இங்கு என்னை வெளிநபராகவே உணர்கிறேன். டெல்லி ஊடகங்களின் முக்கியத்துவம் வேறுவகையானது.


நூலுக்கான தகவல்களை திரட்டியதில் எது கடினமான பகுதியாக உணர்ந்தீர்கள். செய்தி திரட்டலில் விரக்தியாக உணர்ந்த தருணம் எது?

புகைப்படங்கள், சாட்சிகளின் குரல்களை திரும்பத்திரும்ப கேட்பது என என் மனநலனை சமநிலையில் வைப்பது போராட்டமாக இருந்தது. தகவல்களை திரட்டி தனியாக உட்கார்ந்து எழுதியபோது கடுமையான வெறுமையை மனதில் உணர்ந்தேன். சிலமுறை நூலை முடிக்க முடியுமா என்று கூட பயந்தேன். அதோடு நூலுக்காக அதிகநேரம் செலவழித்ததால் நண்பர்களுடன் செலவழிக்கும் நேரம் குறைந்தது. தனிப்பட்ட உறவுகளுக்கான நேரத்தை ஒதுக்குவதில் தடுமாறினேன். மனதில் விரக்தி எண்ணங்கள் நிறைய தோன்றும். பத்திரிகையாளராக பெற்ற பயிற்சி என்னை மனச்சோர்விலிருந்து மீட்டது. அதையும் மீறி சோதனையான கணங்கள் நேர்வதுண்டு. 

அப்படிதோன்றும்போது கஃபேயில் எனக்கு பிடித்த எழுத்தாளரான நிர்மல் வர்மாவின் புத்தகத்தை வாசிப்பேன். அதுவே என்னை மன அழுத்தங்களிலிருந்து மீட்டது. 

நன்றி - சோமல் கோசல், லிவ் மின்ட்