அதிகரிக்கும் ப்ரீலான்ஸர்கள்!









பகுதிநேர வேலைகள் போதும்! –- ச.அன்பரசு

காலையில் அரக்க பரக்க எழுந்து அலாரத்தை நிறுத்திவிட்டு குளித்து முடித்து பறக்கும் ரயில் பிடித்து அலுவலகம் சென்று வேலைபார்த்து திரும்புவது பழைய கதை. இந்த திகுதிகு அவசரத்தை ஜென் இசட் இளசுகள் இம்மியளவும் விரும்பவில்லை. வாழ்க்கையை ரசனையாக அனுபவிக்க வேலையை பகுதிநேரமாக்கி கொண்டால் போதும் என்று ரிலாக்சாக வாழ்கின்றனர்.

இது அமெரிக்காவைப் பற்றிய செய்தி அல்ல; இந்தியாவில்  1.5 கோடிப்பேர்களாக ப்ரீலான்ஸ் பணியாளர்கள் அதிகரித்துள்ளனர். இது அமெரிக்காவை விட(5.3 கோடி) அதிகம் என்கிறது Kellyocg வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஆய்வறிக்கை. பகுதிநேரப் பணியில் இளைஞர்கள் தினசரி டைம்டேபிள் போட்டு பல்வேறு வேலைகளை செய்வதோடு கணிசமான காசுடன் அனுபவங்களையும் சம்பாதித்து வருகின்றனர். இதில் தனியார் நிறுவனங்களுக்கு 20% செலவு குறைகிறது. இந்திய அரசு ஸ்வச் பாரத், டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு பகுதிநேர ஊழியர்களையே நம்பிக்கையோடு நியமித்துள்ளது.

“கடந்த மூன்று ஆண்டுகளாக இன்டர்நெட் ஸ்டார்ட்அப்கள் உருவானபின்பு பகுதிநேர பணியாளர்கள் அதிகரித்துள்ளனர். இது நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் திறமையான ஆட்கள் கிடைக்க உதவுகிறது” என்கிறார் கெல்லிஓசிஜி நிறுவன அதிகாரியான பத்மநாபன். டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்ட டெக் நிறுவனங்கள் பெருமளவு பகுதிநேர பணியாளர்களை தம் திட்டங்களுக்கு தேர்ந்தெடுத்து வருகின்றன. ஒருவகையில் இவர்கள் கூலி பணியாளர்கள்தான். நிரந்தர பணியாளருக்காக ஓய்வூதியம் உள்ளிட்ட எதையும் தரவேண்டியதில்லை என்பது நிறுவனங்களுக்கு பெரிய லாபம்தானே! டேலன்ட்எக்ஸ்சேஞ்ச், எர்னஸ்ட் அண்ட் யங் ஆகிய இணையதளங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பகுதிநேர பணியாளர்களை தேர்ந்தெடுத்து தரும் பணியை செய்துவருகின்றன. “நான் எட்டு ஆண்டுகளாக ஃப்ரீலான்சராக செய்திக்கட்டுரைகளை எழுதிவருகிறேன். முழுநேரவேலையை விட இதில் அதிகம் சம்பாதிக்கலாம். முழுநேர வேலைவாய்ப்புகளை மறுத்ததற்கு இதிலுள்ள சுதந்திரம் முக்கியக் காரணம்” என்கிறார் டெல்லி பத்திரிகையாளரான ஃபைஸல்கான்.

வேலை நிறுவனங்களோடு நேரடி தொடர்பு இல்லையென்பதால் வேலைக்கு கிடைக்கும் சம்பளத்தை சரியான நேரத்தில் கிடைக்கும் என  உறுதியாக மதிப்பிட முடியாது. நிரந்தர வேலை இல்லை என்பதால் பல்வேறு மனிதர்களின் தொடர்பும் அறிமுகமும் புதிய வேலைகளை பெற்றுத்தரும். கட்டுப்பாடுகள் இல்லாத பகுதிநேர வேலைகள் இப்போது சூடுபிடித்து வருகின்றன.


நன்றி: ஃபினான்ஸியல் எக்ஸ்பிரஸ்