கடவுள் பாதி சாத்தான் மீதி -ப்ளீச் அனிமேஷன்

Bleach(1-41 Episodes) 

Image result for bleach anime




இச்சிகோ குரசாகி ஸ்கூல் மாணவன். தாய் ஒரு விபத்தில் இறந்துவிட அதற்கு காரணம் தான்தான் என்ற குற்றவுணர்வு அவனை விரக்தியில் தள்ளுகிறது. தாய் இறப்புக்கு காரணமான இச்சிகோவை தந்தை, சகோதரிகள் உட்பட யாரும் எதுவும் சொல்லாமல் இருப்பதுவும் பெரும் மனச்சோர்வை தர விதியே என பள்ளி சென்று வந்து கொண்டிருக்கிறான். அப்போது நேரும் விபத்தில் ருக்கியா என்ற ஆவியுலக பெண்ணை சந்திக்கிறான். கண்ணுக்கு தெரியாத ஹாலோ என்ற விநோத ஜீவன்களோடு மோதும் முயற்சியில் ருக்கியா காயமுறுகிறாள். அப்போது அவளின் சக்தியை இச்சிகோ பெற்று மக்களை கொல்லும் விலங்குகளை வாள்முனையில் தீர்த்து கட்டுகிறான். ஆனால் அதன்பிறகு அவன் வாழ்க்கையே மாறுகிறது. ருக்கியாவை தேடி ஆவிச்சங்க அதிகாரிகள் வர பிரச்னை தீவிரமாகிறது. ருக்கியாவை அவர்கள் கூட்டிச்செல்ல அதனை இச்சிகோ தடுத்தானா, அவனுக்குள் இருக்கும் சக்தி கடன்வாங்கியதுதானா? அவன் வாழ்வின் சோகத்திற்கு காரணம் என்ன என்பதே ப்ளீச் அனிமே கதை. 

2004 ஆம் ஆண்டு டோக்கியோ டிவியில் வெளியான அனிமே கதை இது. 

இச்சிகோ, ருக்கியா, ஒரு தலைக்காதலி ஓரிஹிமே, முரடன் சாட், விவேகி இஷிதா, பழிக்குப்பழி கான்ஞ்சு, தொப்பி குரு ஹரகுரா என அத்தனை கேரக்டர்களும் செம கச்சிதம். சீரியசான கதை. டவுட்டே வேண்டாம். ஆனால் இடையிடையே வரும் ஓரிஹிமே டைம் லூசு காமெடிகள் எரிச்சல். எல்லை மீறும் ஆபாச டயலாக், சில காட்சிகள், பீறிடும் ரத்தம் என வேற லெவல் அனிமே என்பதால் வயது வந்தோர் மட்டும் பார்ப்பது நன்று. 


Image result for bleach anime



இச்சிகோ - ருக்கியா இடையிலான உறவு என்பது பள்ளி நண்பருக்கு வித்தியாசமாக தெரியும்போது அவளும் இச்சிகோவை எதிர்கொள்ள தடுமாறும் காட்சி நன்றாக படமாக்கியிருக்கிறார்கள். இதோடு அண்ணனை இழந்த ஓரிஹிமேயின் காதல் பதற்றங்கள் தனி. ஒருகட்டத்தில் வெகுளியான தேவதையாக மாறிவிடுகிறாள் ஓரிஹிமே. கதையோட்டத்தில் ஓரிஹிமே பெரும்பாலும் லூசுப்பொண்ணு வேலைதான் செய்கிறாள். இஷிதா வேறுவகை. சோல் ரீப்பர்களுக்கு எதிரான குழுவை சேர்ந்தவன். நிர்ப்பந்தம் பொருட்டு இச்சிகோவுடன் இணைகிறான். ஆனால் இச்சிகோவை தலைவன் என கூறினால் டென்ஷனாகி வில்லில் அம்பு பூட்டுவது இஷிதாவின் அமர்க்கள ஸ்டைல். 

தாத்தாவிற்கு கொடுத்த வாக்கிற்காக பலரிடம் அடிவாங்கி இச்சிகோவின் நண்பராகிறார். இவரின் பவர் ஒன் பன்ச் மேன். ஒரே அடியில்  ஹாலோக்களை வீழ்த்தி மெல்ல தன்னுடைய ஆன்ம பலத்தை உணரும் முரட்டு ஹீரோ. 


அத்தனை பேரும் இணைந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட ருக்கியாவை மீட்க ஆவியுலகிற்கு செல்கிறார்கள். அங்கு அமெச்சூர் சிறுவர்களை வேட்டையாட பெரும் கூட்டமே ஸான்பாகோ வாட்களுடன் நிற்க என்ன செய்தார்கள் என்பதே முக்கிய திருப்புமுனை. 


இச்சிகோ தன் மனதில் பேசும் ஒற்றைக்கண் மனிதர், தன்னுடன் வைத்திருக்கும் ஹாலோ முகமூடி, கேப்டன் அய்சன் மரணம் ஆகியவை அடுத்த எபிசோட்களை பார்க்க வைப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்துகின்றன. 


இதே சீரிஸ் படமாகவும் வெளிவந்துள்ளது. 

-கோமாளிமேடை டீம்