எஸ்.ராவின் தடம்பிறழாத உரை அற்புதம்!








3.4.2016

அன்புத்தோழர் முருகுவிற்கு,

வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நான் பல்வேறு அறிவியல் செய்திகளை தேடிப்பிடித்து எழுதி வருகிறேன். எதிர்காலத்தில் வேலைப்பளு கூடும் என எதிர்பார்க்கிறேன். 

முகிலினி நூலின் வெளியீட்டு விழாவில் எஸ்.ரா பேசிய உரையைக் கேட்டேன். நூல் குறித்த தடம் மாறாத பிறழாத உரை. இப்படிப்பேச ஜெ., எஸ்.ரா மட்டுமே நம்மிடையே உள்ளனர். தீராநதி, உயிர்மை தவிர வேறு எதுவும் படிக்கவில்லை. கைம்மண் அளவு எனும் நாஞ்சில் நாடனின் நூல் சூரியன் பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது. பணிகள் நிறைவடைந்து விட்டன.

வெயில் இங்கே ஏழு மணிக்கே காய்ச்ச தொடங்கி உடலை வியர்வையால் புழுங்க வைக்கிறது. இது மனநிலையில் ஏற்படுத்தும் உக்கிரத்தை எப்படி கூறுவது? விகடனில் தமயந்தி எழுதிய சிறுகதை தலித் மனிதர்களின் வாழ்க்கையை பேசினாலும் துண்டு துண்டாக உடைந்து கிடக்கிறது. நாம்தான் புரிந்துகொள்ளவேண்டும். மற்றபடி ஜெ.வின் முகங்களின் தேசம் வாசிக்கிறீர்களா?

நன்றி! சந்திப்போம்.