பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வது அவசியமா?

 

 

 

 Credit Card, Charge Card, Money, Bank Account, Bank

 


பணம் - கையாளப் பழகுவோம் 3


முதலீடும் துணிச்சலும்


வங்கியில் முதலீடு செய்வது, அதற்கான அதிக வட்டியை எதிர்பார்ப்பது ஆகியவற்றிலும் ஆபத்துகள் உண்டு. முதலீடு மூலம் கிடைக்கும் நிதி பயன்களை நினைத்து செய்யும் அனைத்து நிதி முதலீடுகளிலும் பல்வேறு அபாயங்கள் உண்டு. எனவே, திட்டத்தை ஆராயாமல் செயல்பட்டால், முதலீடு செய்த பணம் கைவிட்டுப் போகும் அபாயம் உண்டு.


நிதிப்பயன்களை குறைவாக வரையறுத்துக்கொண்டால், நீங்கள் செய்யும் செயல்களில் ஆபத்துகளும் குறையும். நிதி சார்ந்த முதலீடுகளில் முக்கியமான விதி இதுதான். அதிக பணத்தை எதிர்பார்த்து முதலீடுகளை தேர்ந்தெடுத்தால் அதில் பெருமளவு இழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரும் திட்டங்களை நம்பி உடனே அதிகளவு பணத்தை முதலீடு செய்யாதீர்கள். மேலும், திட்டம் பற்றி நிறுவனங்கள் தரும் திட்ட அறிக்கையை முழுமையாக படித்து நிபந்தனைகளை நன்றாக யோசித்துவிட்டு நிதி முதலீடுகளைச் செய்யுங்கள்.


நீங்கள் பணம் கட்டி வரும் நிறுவனம் உங்கள் முதலீட்டுத்தொகையை தர மறுத்துவிட்டால், திட்டம் தொடர்பாக ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் ரிசர்வ் வங்கி அதற்கென தனி இணையதளத்தை பார்வையிட வலியுறுத்துகிறது. வலைத்தள முகவரி www.sachet.rbi.org.in


இதில் உங்கள் பிரச்னை, புகார்களை பதிவு செய்யமுடியும்.


பல்வேறு திட்டங்களில் முதலீடு!


நமது முன்னோர் சொல்லும் முதுமொழி ஒன்றுண்டு. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே என்பதுதான் அது.


எனவே, பணத்தை வங்கியில் பிக்சட் டெபாசிட், தங்கம், மியூசுவல் பண்ட், அசையாசொத்து(நிலம்), ஈக்குவிட்டி(பங்குச்சந்தை) என பிரித்து முதலீடு செய்வது நல்லது.


ஏன் பல்துறை முதலீடு?


ஒரே திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால், அந்த நிறுவனம் இழப்பைச் சந்தித்தால் நீங்கள் சேமித்துள்ள அத்தனை பணமும் அத்தோடு போய்விடும். பல்வேறு திட்டங்களில் துறைகளில் முதலீடு செய்தால், ஒரு துறையில் திட்டத்தில் இழப்பு ஏற்பட்டால் கூட அதனை எளிதாக ஈடுகட்டி விட முடியும். எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்வது என்பதை நிதி வல்லுநர்களோடு ஆலோசித்து முடிவு செய்துகொள்வது உங்களின் எதிர்காலத்திற்கு நல்லது.


கா.சி.வின்சென்ட்


கருத்துகள்