தன்னைக் காதலிப்பவனை மணக்க நினைப்பவளின் வாழ்க்கையில் வரும் காதலே தெரியாத நல்ல ஆன்மா! மதுமாசம்

 











மதுமாசம்
சுமந்த், ஸ்னேகா, பார்வதி மெல்டன்

இயக்குநர் - சந்திர சித்தார்த்தா







தலைப்பில் தான் சொல்லிவிட்டோமே அதுதான் விஷயம்.  சஞ்சய், ஹம்சா என இருவர்  திருமணம் ஒன்றில் சந்திக்கிறார்கள். அங்கு வரதட்சணை சார்ந்து ஏற்படும் பிரச்னையை சஞ்சய் கல்யாண மாப்பிள்ளையிடம் பேசி தீர்க்கிறான். அதுவே ஹம்சாவுக்கு நல்ல அபிப்ராயத்தை தருகிறது. பிறகு நகருக்கு வந்தால், சஞ்சயின் வீட்டில் தான் ஹம்சா வாடகைக்கு தங்கும்படி சூழல் அமைகிறது. 

சஞ்சய்யைப் பொறுத்தவரை சிகரெட் பிடிப்பது, மது அனைத்து அளவாட்டு உந்தி. ஆனால் ஹம்சாவுக்கு இதெல்லாம் ஆகாது. காலையில் எழுந்து கோலம்போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதுதான் அவள் வழக்கம். அவளுக்கு சஞ்சய் முரட்டுத்தனமாக நடந்துகொண்டாலும்,  பிறருக்கு உதவி செய்யும் பழக்கம் பிடித்திருக்கிறது. அவளுக்கு மெல்ல சஞ்சய் மீது ஆர்வம் வருகிறது. கூடவே இருக்கும் தோழியும் உசுப்பேற்றுகிறாள். 

திருமணம் பற்றி சஞ்சயிடம் ஒருநாள் தைரியமாக சொல்லுகிறாள். சஞ்சய் அதைப்பற்றி கவலை கொள்வதில்லை. அவனுக்கு சொத்துக்களோடு மாமா பெண் கிராமத்தில் இருக்கிறாள். ஆனால் அவனுக்கு ஹம்சா பற்றி பெரிய கருத்தேதும் இல்லை.  திருமண நிச்சயம் நடக்கிறது. அப்போது, தான் விரும்புவது போலவே சஞ்சய் தன்னை விரும்புகிறானா என்று கேட்கும்போது, காதல் எல்லாம் கிடையாது. மாமா பெண்ணோடு ஒப்பிடும்போது நீ ஓகே தான் என பதில் சொல்லுகிறான். இதனால், மனதுடையும் ஹம்சா, நிச்சயத்தை நிறுத்துகிறாள். என்னை மனமார விரும்புபவனை மட்டுமே கல்யாணம் செய்துகொள்வேன் என்று சொல்லுகிறாள். 

இந்த நிலையில் காதல் என்றால் என்ன என்று சஞ்சய் தெரிந்துகொண்டானா, ஹம்சா தனது கொள்கையை மாற்றிக்கொண்டாளா, காதலைத் தேடி அதைக் கண்டுகொண்டாளா  என்பதுதான் படத்தின் முக்கியமான காட்சி. 

படம் முழுக்க ஸ்னேகாவுக்கானது. தன் கூடவே இருந்தவர்கள் எப்படி சுயநலமாக தன்னை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள் என்பதை அவள் உணரும்போது அனைத்தும் அவளது கையைவிட்டு நழுவிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கை, ஆசை, எதிர்பார்ப்பு என அனைத்தும்தான். இந்த நிலையில், வேலை மட்டுமே கையில் மிஞ்சுகிறது. டிவி வேலையை செய்தபடி ஹாஸ்டலில் தங்குகிறாள். இந்த சூழலில் அவள் மனதில் முடிவெடுக்கிறாள். இனி அன்பு செலுத்துவது என்பதே அவசியம் இல்லை. அதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என விரக்தியாகிறாள். 

அப்போதும் அவள் சஞ்சய்க்கு காவல்நிலையத்தில் உதவி செய்கிறாள். பெற்றோரே சஞ்சய்யை வழக்கொன்றில் நம்பாதபோது ஹம்சா எப்படி நம்பினாள் என சஞ்சய் உணரும்போது, கதை மாறுகிறது. இந்த வகையில் சஞ்சய் மெல்ல காதலை உணரத் தொடங்குகிறான். ஹம்சா காதல், அன்பு எல்லாம் போலி என்ற நிலையில் இருக்கிறாள். இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே இறுதிக்காட்சி.

படத்தில் பார்வதி மெல்டன்,  மாயா என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். சுதந்திரமாக இருக்கும் பெண்ணாக காட்சிபடுத்தினாலும் கௌரவமான முறையில் அவரை காட்சிபடுத்தி இருக்கிறார்கள். உடையில் கவர்ச்சி என்றாலும் மனத்தளவில் தனது கருத்தை நிறுவன முதலாளியிடம் கூறும் இடம் முக்கியமானது. 

சுமந்த், இறுதிக்காட்சியில் வாய்ஸ் மெயில் வழியாக பேசும் வசனமும் சிறப்பாக உள்ளது. படத்தில் நகைச்சுவை பகுதிகள் எடுபடவே இல்லை. மிமிக்ரி செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர் காட்சிகள் நன்றாக இருந்தாலும் படத்தோடு ஒட்டி வரவில்லை. 

காதலே சுவாசம்

கோமாளிமேடை டீம் 






கருத்துகள்