ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர்!






பிஸினஸ் குரு!



முகேஷ் அம்பானி தெற்கு ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக சீனர்களையும் மிஞ்சி வளர்ந்து நிற்கிறார். பெட்ரோல் பங்கில் வேலை செய்து பட்டு துணிகளை இறக்குமதி செய்து, மசாலா பொருட்களை வெளிநாட்டுக்கு விற்று அரசியல்வாதிகளை லைசென்ஸ் ராஜ் கடந்து வசீகரித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடங்கிய திருபாய் அம்பானியின் பெயரை காப்பாற்றியதோடு இன்று ரிலையன்ஸ் என்ற பெயர் ஒலிக்காத திசைகளே கிடையாது.

500 ரூபாய்க்கு சிடிஎம்ஏ போன்களை அறிமுகம் செய்வது, சல்லீசு விலையில் ஜியோ டேட்டா பிளான்கள், தொடங்குவதற்கு முன்னால் அங்கீகாரம் பெற்ற ஜியோ பல்கலைக்கழகம் என முகேஷ் அதிகம் பேசாவிட்டாலும் அவரின் செல்வாக்கு உலகையே அவர் குறித்து பேசவைத்துக் கொண்டிருக்கிறது. தந்தை இறப்புக்கு பிறகு ஏற்பட்ட வணிக பாகப்பிரிவினை இரு சகோதரர்களை பிரித்தாலும் தாய் கோகிலாபென் இருவரையும் இணைக்கும் பாலமாக இருக்கிறார்.

சீவிண்ட் எனும் ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ள  பதினான்கு மாடி சொகுசு வீட்டில் முகேஷூம், அனிலும் வசித்து வருகின்றனர். திருபாய் அம்பானி பெட்ரோல் பங்கிலும் ஆபீஸ் கிளர்க்குமாக பணிசெய்தவர் மெல்ல தொடர்புகளை விரிவுபடுத்தி பாலிஸ்டர் துணிகளை விற்பனை செய்யத்தொடங்கினார் பின்னர் 1950 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடங்கியபோது ஸ்டான்ஃபோர்டு பல்கலையில் எம்பிஏ படித்துக்கொண்டிருந்தார் முகேஷ். "தனக்கு கிடைத்த தொடர்புகளை பிசினசிற்கு பயன்படுத்திக்கொள்ள திருபாய் தயங்கியதே இல்லை" என்கிறார் திருபாயின் சுயசரிதை நூலை எழுதிய ஹமிஷ் மெக்டொனால்ட். நேருவின் காலத்திலிருந்து சயின்டிஃபிக் சோஷியலிச அரசையும் சாத்தியமாக அனைத்து வழிகளிலும் சமாளித்து பிஸினஸை வளர்த்த திருபாய் அம்பானி, 1977 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் பங்குகளை பங்குச்சந்தையில் வெளியிட்டார். முன்னாள் பத்திரிகை ஆசிரியரான அருண்ஷோரி, திருபாய் அரசு அமைப்பில் செய்த முறைகேடுகளை கட்டுரைகளாக எழுதி தள்ளி வந்தார். தொண்ணூறுகளுக்கு பிறகு தாராளமயமாக்கல் ரிலையன்ஸ் பெட்ரோகெமிக்கல், எண்ணெய் சுத்திகரிப்பு துறைகளில் இறங்க உதவியது. ஆனால் 2005 ஆம் ஆண்டு சகோதரர்களுக்குள் பிரிவினை தலைதூக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷூக்கும், ஆற்றல் மற்றும் டெலிகாம் துறைகள் அனிலுக்கும் கைமாற பிராண்ட்நேம் சந்தேகமே வேண்டாம் ரிலையன்ஸ்தான்.

ரிலையன்ஸ் டெலிகாமை கடனிலிருந்து மீட்டு ஜியோவாக்கி களத்தில் இறங்கியுள்ள முகேஷின் திட்டங்களைக் கண்டு போட்டியாளர்களே பதறுகிறார்கள். தொலைக்காட்சி, செய்தித்தாள் என அனைத்திலும் முகேஷ் ஈடுபாடு காட்டுவதற்கு வழிகாட்டி உதவுவது அவரின் தோழரான மனோஜ் மோடி. நவீன இந்தியாவின் தவிர்க்கமுடியாத தொழில்முகமாக உருவாகி உள்ளார் முகேஷ் அம்பானி

உலகின் மொத்தவளமும் குறிப்பிட்ட சில தொழிலதிபர்களிடம் தேங்குவது முதலாளித்துவ கொள்கையின் விபரீத விளைவு. முகேஷ் அம்பானி, ஜாக் மா ஆகியோரின் உழைப்பில் அவர்களது நிறுவனம் வளர்ந்தது என்றாலும் தொழில்துறை கொள்கைகளை தனக்கு சாதகமாக வளைக்க இவர்கள் விளையாடிய விளையாட்டுகளால் சந்தையில் ஆரோக்கியமான போட்டி என்பதே இல்லாமல் போனது. பிஸினஸ் என்பது இருதரப்பிற்குமான லாபத்தை உள்ளடக்கியது எனும்போது, முகேஷ் அம்பானி பெற்ற லாபத்தில் மக்கள் அடைந்த பயன்களின் அளவு என்ன? என்ற கேள்வியை நெஞ்சுக்கு நீதியாக கேட்டுக்கொள்வது எதிர்வரும் சவால்களை சமாளிக்க உதவும். 

- விக்டர் காமெஸி