கா்நாடகத்தில் குளங்களை வெட்டிய இடையர்!





குளங்களை வெட்டிய கிராமத்து மனிதர்!

கர்நாடகாவைச் சேர்ந்த இடையரான காமெகௌடா, மாண்டியா மாவட்டத்திலுள்ள தாசனதோடி கிராமத்தை பசுமையாக்க 14 குளங்களை வெட்டியுள்ளார். அரசின் உதவியின்றி தன் சொந்த சேமிப்பான 15 லட்சத்தை செலவழித்து குளங்களை கட்டி நீர்வளம் பெருக்கியுள்ளார் காமெகௌடா.

நாற்பதாண்டுகளுக்கு முன்பு குண்டினபேட்டா மலைப்பகுதி மழைபொய்க்க பசுமை இழந்து புற்கள் வெயிலில் பொசுங்கிப்போக இடையரான காமெகௌடா வாழ்வாதாரம் குலைந்து தவித்துப்போனார். மலையை நம்பி வாழ்ந்த விலங்குகளும் பறவைகளும் உணவின்றி தவிக்க காமெகௌடா அரசுக்கு மனுபோடாமல் கையிருப்பை கரைத்து குளம் வெட்டத்தொடங்கினார். பதினான்கு குளங்களில் நீர்தேக்கத்தினால் மலையே பசுமை சூழ்ந்து அழகாகியுள்ளதோடு, நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. "கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் வெளியில் செல்லவேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். கண்களை மூடியிருந்தாலும் இப்பகுதியை தெள்ளத்தெளிவாக என்னால் அடையாளம் காணமுடியும். தினசரி இக்குளங்களை காண்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது." என்கிறார் காமெகௌடா