சீனாவின் மாசுபாட்டை உலகிற்கு கூறும் போராளி!


சூழலுக்கு சகோதரன்!

சீனாவின் பெய்ஜிங்கைச் சேர்ந்த பிரதர்நட், அரசுக்கு சங்கடங்களை அள்ளித்தரும் போராளி. நிகழ்த்துகலை கலைஞரான இவர், சூப்பர் மார்க்கெட்டில் ஷெல்ஃப் முழுக்க நோங்ஃபு ஸ்பிரிங் என்ற குடிநீர் பிராண்டின் பாட்டில்களை அடுக்கி வைத்து பிரபலமானார். எப்படி? பிராண்ட் என்பது பாட்டில்தான். ஆனால் உள்ளே நிரப்பிய குடிநீர் ஷாங்ஸி என்ற பகுதியிலுள்ள ஷியாவோஹாட்டு எனுமிடத்திலிருந்து எடுத்த பல்வேறு கனிமங்கள் நிறைந்த மாசுபட்ட குடிக்க தகுதியற்ற தன்மை கொண்டது.

புற்றுநோய் மற்றும் தோல்நோய்களால் அவதிப்பட்ட மக்களின் புகார்களை அரசு ஒதுக்கித்தள்ள, பிரதர்நட் பெய்ஜிங்கில் நடத்திய 798 கலைக்கண்காட்சியில் குடிநீர் பாட்டில் அணிவரிசை சீன அரசுக்கு தேள் கொட்டியதுபோல் இருந்தது. உடனே போலீஸ் அக்கண்காட்சியை மூடி பாட்டில்களை கைப்பற்றியது. உடனே வண்டியில் ஆயிரம் கலப்பட குடிநீர்பாட்டில்களை அள்ளிப்போட்டுக்கொண்டு நகர் முழுக்க சுற்றிவந்து சூழல் பிரசாரம் செய்துவருகிறார் பிரதர்நட். 2015 ஆம் ஆண்டு காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்தபோது அதனை உலகிற்கு கூற மாசுபட்ட தூசுக்கள் மூலம் கற்களை உருவாக்கி விழிப்புணர்வு செய்தவர் பிரதர்நட்.