அகதிகளுக்கு உதவிய பிரேசில் நாடு!



Venezuelan children play in a refugee shelter in Boa Vista, Roraima state, Brazil, August 26, 2018.





வெனிசுலா நாடு கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதனால் அங்கு வாழ முடியாமல் வெளியேறும் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்காக கருணை அடிப்படையில் பல்வேறு நாடுகள் அகதிகளை தங்க வைத்து வருகின்றன. பிரேசில் நாடு, ஒரே நாளில் 21 ஆயிரம் வெனிசுலா அகதி மக்களை தன் நாட்டில் தங்க வைத்து சாதனை  செய்துள்ளது. இதற்கு முன்பு 263 பேர்களை மட்டுமே தன் நாட்டில் வாழ அனுமதித்திருந்தது.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் பல்வேறு அறிக்கைகள் அடிப்படையில் பிரேசில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெனிசுலாவில் போராட்டக்கார ர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் மீது நிக்கோலஸ் மதுரோ அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கு மக்கள் சாப்பிடவும் வழியின்றி தவித்து வருகின்றனர். காரணம், பணவீக்கம். நோய்களுக்கு சிகிச்சை தரும் அமைப்புகளும் செயலிழந்து விட்டதால், மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அகதிகள் மறுவாழ்வு நடவடிக்கையில் மைல்கல் என ஐ.நா அமைப்பு பிரேசில் நாட்டைப் பாராட்டியுள்ளது. இதற்கு மனித உரிமை கண்காணிப்பகம் நிறைய முயற்சிகளைச் செய்துள்ளது. இந்த நேரத்தில் இந்திய அரசு உள்நாட்டில் தன் மக்களையே பாகுபாடு செய்யும் விதமாக குடியுரிமை மசோதாவை கொண்டு வந்துள்ளது. இதனை எதிர்த்து அமைதி வழியில் போராடும் மக்களையும் சுட்டுக்கொல்ல உத்தரவிடுகிறது? உண்மையில் அரசுக்காக மக்களா, மக்களுக்கா அரசா என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது. அமைதி வழியில் போராடும் மக்களை சுட்டுக்கொல்வது அரசு பயங்கரவாதம்தானே? இதில் இவர்கள் பிறரை பயங்கரவாதி என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறதே?

இந்தியா, இன்னும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் மனநிலையில்தான் இருக்கிறது. அவர்களிடம் பெற்ற கொடூரம் நிகழ்த்தும் அறிவை கைவிடாத வரையில் இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்வது கேலிக்கூத்தாகவே இருக்கும்.

நன்றி - ஹெச்ஆர்டபிள்யூ.ஆர்க்