குழந்தைகளைக் கொல்லும் இந்திய மாவட்டம்!




Too weak to cry: A doctor checks Jnanesh, who is seven but weighs only 10kg, at the recent medical camp for malnourished children at Jawhar in Palghar.
தி வீக்




மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம், வேதனையான விஷயங்களுக்கு முதன்மை பெற்றுள்ளது. ஆம் இங்கு ஏறத்தாழ 2016-18 காலக்கட்டத்தில் மட்டும் 1, 100 குழந்தைகள் இறந்துபோயுள்ளனர். காரணம் வறுமை, வேலைவாய்ப்பின்மையால் ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறைதான்.

ஏழு வயதான ஜானேஷ் என்ற சிறுவனின் எடை பத்து கிலோ. தன் தாய் தலைவருடினால் மட்டுமே கண்திறந்து பார்க்கிறான். புன்னகைக்க மட்டுமல்ல அழக்கூட உடலில் சத்தில்லை. அவனுக்கு தர ஊட்டச்சத்தான சோறு தாயிடம் இல்லை. என்ன செய்ய முடியும்?

இங்குள்ள ஐந்து பழங்குடி கிராமங்களில் குழந்தைகள் தினத்தன்று செய்த ஆய்வில் மருத்துவர்களே அதிர்ந்து போனார்கள். அங்கு வந்த பெரும்பாலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்குறைபாடு இருந்தது.

பால்கர் மாவட்டம் எங்கோ தூரதேசத்தில் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். மும்பையிலிருந்து நூறு கி.மீ தொலைவில்தான் இருக்கிறது. அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு விரைவில் அமைக்கப்படவிருக்கும் புல்லட் ரயில் இந்த ஊரின் பாதையில்தான் அமையவிருக்கிறது. இதற்கான மதிப்பீடு 2 லட்சம் கோடி ரூபாய்கள். மும்பை தன் வருமானத்தில் 15 ஆயிரம் கோடிக்கும் குறைவாகத்தான் மக்களின் பொதுநலனுக்காக செலவழிக்கிறது.

பால்கர் மாவட்டத்தின் விவசாயிகளின் பெரும்பாலானோரின் உற்பத்திப்பொருள்  கோதுமை, ராகிதான். இவையும் மழைப்பொழிவு குறைந்தால் கஷ்டம். இங்கு வேலைவாய்ப்புகளும் குறைவு. இங்குள்ள ஆட்கள் மும்பையில் ஏதாவது வேலைவாய்ப்புகள் கிடைக்குமா என்று அலைகின்றனர்.

2006ஆம் ஆண்டில் இங்கு 718 குழந்தைகள் உணவின்று ஊட்டச்சத்தின்றி இறந்துபோனார்கள். உடனே செய்தியை மறைக்க முயன்ற மாநில அரசு, அதிகாரிகளை அனுப்பி சில திட்டங்களை உருவாக்குவது போல நாடகமாடினர். ஆனால் எதுவும் பயன்தரவில்லை. இன்றுவரை குழந்தைகள் ஆண்டுதோறும் இறந்துகொண்டே இருக்கிறார்கள் தப்பி பிழைக்கும் ஜானேஷ் போன்றோர் பிழைத்து விடத்தான் நாம் பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அரசும் ஆண்டவனும் மனது வைக்க வேண்டுமே?

நன்றி - தி வீக் இதழ் - விஷ்ணு வி.நாயர்