”சர்ஜிகல் ஸ்ட்ரைக்குகளை நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை”



I Don’t Think Lessons Are Taught By Exaggerated Surgical Strikes: P Chidambaram
Outlook\SURESH K. PANDEY



ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக பணியாற்றிய ப.சிதம்பரம், எங்கிருந்தாலும் தன் எழுத்தில் கவனிக்க வைக்கும் திறன் கொண்டவர்.

தமிழில்:ச.அன்பரசு

புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா எப்படி எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டும்? உதாரணத்துக்கு நீங்கள் உள்துறை அமைச்சராக இருந்தால் எப்படி செயல்பட்டிருப்பீர்கள்?

புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருப்பேன். இரண்டாவதாக, வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர். அவர் பாகிஸ்தானி ஆள் கிடையாது. ஜெய்ஸ் இ முகமது அமைப்பில் இணைந்து பணியாற்றியவர். உள்நாட்டிலுள்ள மக்களின் மனங்களை வெல்லாமல் காஷ்மீரின் தீவிரவாதத்தை  நம்மால் அழிக்க முடியாது.

இந்த தாக்குதல்  இந்தியா பாகிஸ்தானை போர்முனையில் சந்திக்கவேண்டும் என்கிற குரல்களை அதிகப்படுத்தியுள்ளது. வலிமையான தலைவர் அதனை ஆதரிப்பார் என நினைக்கிறீர்களா?

நிச்சயம் வலிமையான தலைவர், தன் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார். அதாவது, போர் தேவை என்று குரல்களை அவர் ஆதரிக்க மாட்டார். நாட்டு எல்லையில் தீவிரவாதிகளை தடுப்பது, அதற்கான முயற்சிகள் என்பது அவசியம் தேவை. ஆனால் உள்நாட்டில் அதேயளவு தீவிரத்தை காட்ட முடியாது. காஷ்மீரி ஒருவர் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டுவிட்டார் என்ற காரணத்திற்காக பிற காஷ்மீர் இளைஞர்களை குறிவைத்து தாக்குகிறார்கள். இது காஷ்மீர் மக்களுக்கு என்ன செய்தியை சொல்லும்? இந்தியர்களாக பிற பகுதி மக்கள் நம்மை நினைக்கவில்லை என்றுதானே? மீண்டும் நான் சொல்கிறேன். அன்பினால் அவர்களின் இதயங்களை வெல்வதே இங்கு முக்கியம். துப்பாக்கியால் பேசுவதல்ல.

சர்ஜிகல் ஸ்ட்ரைக் முயற்சிகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

ராணுவரீதியிலான தாக்குதல்களை பாஜக அரசு தன் சாதனைகளாக கூறுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்திலும் இதுபோன்ற தாக்குதல்களை ராணுவம் நடத்தியுள்ளது. எல்லைகளை காக்கும் பணியில் இதுவும் ஒரு பகுதி. இதில் விளம்பரம் தேட காங்கிரஸ் முயன்றதில்லை. சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்பது பாக்கிற்கு பாடம் கற்றுத்தந்திருக்கிறது என்றால், பதன்கோட், உரி, புல்வாமா தாக்குதல்களிலிருந்து நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள் என்று கூறுங்களேன்.


தேர்தல் நேரத்தில் இப்படியொரு தாக்குதல் என்பது எப்படி பார்க்கிறீர்கள்?

நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும்போது அரசியல் கட்சிகள் பேதமின்றி நாட்டைக் காக்க ஒன்று திரள்வோம். அதில் எந்த சந்தேகமுமில்லை. இதனை தேர்தலில் பயன்படுத்த பாஜக அரசு முயல்கிறது. ஆனால் தேர்தலில் இத்தாக்குதல் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த போவதில்லை. இந்த தீவிரவாத தாக்குதல் கூட பாஜகவின் காஷ்மீர் அணுகுமுறையால் ஏற்பட்ட விளைவுதான். அது மாறினாலே மாற்றங்கள் நடக்கும்.

நன்றி: அவுட்லுக்(சதீஸ் பத்மநாபன்)