ஏஐ புரட்சி என்ன செய்யும்?




நன்றி: தினமலர் பட்டம்







ஏஐ புரட்சிக்கு ரெடியா?

செய்தி: அண்மையில் டெலாய்ட்(Deloitte) என்ற ஆய்வு நிறுவனம் செய்த ஆய்வில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் உலகளவில் பயன்படுத்தும் அளவு 42 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை தொழில்துறை, பொழுதுபோக்கு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
தொழில்நுட்பத்தின் அடிப்படை என்ன? செய்யும் வேலைகளின் எளிமை. அதேதான். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால் மனிதவளத்துறை முதல் தொழில்துறை வரை வேலைநேரமும் செலவும் பெருமளவு குறைகிறது.


Image result for ai
Redmondmag.com




மனிதவளத்துறை 

மனிதவளத்துறையில் செயற்கை நுண்ணறிவு என்பது புதுமையாக இருக்கலாம். பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு இணையாக செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

ரோபாட்டிக்ஸ் புரோசஸ் ஆட்டோமேஷன்(Robotics Process Automation RPA) எனும் முறையை மனிதவளத்துறையில் பயன்படுத்துகின்றனர். ஊழியர்களுக்கான சம்பளம், தகவல் மேலாண்மை, கடிதம் எழுதுவது ஆகியவற்றில் இவை உதவுகின்றன. நடப்பு முதல் எதிர்காலம் வரை வியாபார நிலைகளைக் கணித்து வளர்ச்சி எப்படியிருக்கும் என்பது வரை செயற்கை நுண்ணறிவு அல்காரிதம்கள் கணக்கிடும் திறன் கொண்டவை.
டெலாய்ட் நிறுவனத்தின் அறிக்கையில்(2018: deloitte)Global Human Capital Trends Report) இன்னும் ஐந்து ஆண்டுகளில் மனிதவளத்துறை இயக்குநரின் 50 சதவீத பணிகளைச் செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்கள் செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வளர்ச்சியில் நவீனக் கல்வி!

கல்வியும் கரும்பலகையிலிருந்து நகர்ந்து ஸ்மார்ட் வகுப்புகளுக்கு மாறியிருக்கின்றன. இதில் முக்கியமாக, ஆட்டிசம் குழந்தைகளின் கல்விக்கு உதவும் நாவோ(Nao) எனும் ஹியூமனாய்டு ரோபட்டைக் குறிப்பிடலாம்.

லண்டனைச் சேர்ந்த செஞ்சுரி டெக்(Century Tech), பிளிப்பார்(Blippar) ஆகிய நிறுவனங்கள் பாடநூல்களைத் தாண்டி பாடங்களை 3டி வடிவில் கற்கவும், ஆசிரியர்களின் பணிச்சுமைகளை குறைக்கவும் உதவுகின்றன. மெஷின் லேர்னிங், விர்ச்சுவல் ரியாலிட்டி ஆகிய நுட்பங்களும் இனி பயன்படும் வாய்ப்பு உள்ளது.

பதில் சொல்லும் சாட்பாட்

உங்களுக்கு தொழில்நுட்பம் குறித்த சந்தேகம். குறிப்பிட்ட எண்ணுக்கு அழைக்கிறீர்கள். அங்கு பதில் சொல்வது சாட்பாட் எனும் செயற்கை நுண்ணறிவு அல்காரிதமாகவே இருக்கும். போனில் சாட்பாட்டுடன் பேசுவது, போனை டிவியில் இணைத்து பாடல்களைத் தேடுவது என எழுத்தை கைவிட்டு ஒலிக்கு உலகம் மாறியுள்ளது. நாம் மொழியைக் கற்கத் தொடங்குவதன் முன்னர் ஒலியைத்தானே தகவல் தொடர்புக்கு பயன்படுத்தினோம்?

சாட்பாட்களை உங்களுக்கு ஏற்றபடி சரியாக பயன்படுத்தினால் வேலைகளை எளிதாக முடிக்கலாம். இதில் வீடுகளிலுள்ள பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை இணைத்துவிட்டால் முடிந்தது. ஒரே ஒரு ஆப் கட்டளை மூலம் அச்சாதனங்களை இணையம் மூலமே இயக்கலாம். இது வசதிதானே?  எதிர்காலத்தில் விர்ச்சுவல் ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் எடுப்பார். அவர் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கலாம். இணையம் , ஆசிரியரையும் மாணவரையும் அனைவரையும் ஒன்றாக இணைக்கும்.

தொழில்துறை மாற்றம்

ஜெர்மனியிலுள்ள டெய்ம்லர் நிறுவனத்தின் ஸ்டட்கார்ட் தொழிற்சாலையில் , பென்ஸ் கார்களைத் தயாரிப்பது முழுவதும் ரோபோக்களே.  கார்களின் தரத்தை சோதிப்பது மட்டுமே மனிதர்களின் பணி. வெறும் ஓரிடத்தில் மட்டுமே பல்வேறு இடங்களில் சுற்றிச் சுழன்று வேலை செய்யுமளவு மெஷின்கள் செயற்கை நுண்ணறிவினால் பலம் பெற்றுள்ளன என்பதை அறியவேண்டியது அவசியம்.

மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கு ரோபோக்களுக்கு(da Vinci Si Robo) பயிற்சியளித்து வருகின்றனர். சிறப்பு அங்காடிகளில் பொருட்களை வாங்க வழிகாட்டும் உதவியாளர் முதற்கொண்டு பாதுகாப்பு காவலர் ரோபோ வரை விரைவில் வெளிவரக்கூடும். செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புகள் இழப்பு என்ற பொருளில் அறிவியல் வளர்ச்சியைத் தடுப்பதும், மறுப்பதும் நாட்டின் வளர்ச்சியையே பின்னுக்குத் தள்ளும் என்பதையும் மறக்க கூடாது. 

நன்றி:DC

(மேலே உள்ள கட்டுரை இடப்பற்றாக்குறையினால் பாதி வெட்டப்பட்டு வெளியானது. எழுத்தில் முழு கட்டுரையும் வெளியிடப்படுகிறது)