சாதி குலம் தெரியாத ராயலசீமா ரௌடியின் கதை! சீமா சிங்கம் - பாலைய்யா, சிம்ரன், ரீமாசென்

 










சீமா சிங்கம்
பாலகிருஷ்ணா, சிம்ரன், ரீமாசென், ரகுவரன், சரண்ராஜ் 
ஜி. ராம் பிரசாத்
வசனம் - பாருச்சி பிரதர்ஸ் 
கதை - சின்னி கிருஷ்ணா





தனஞ்ஜெய ராவ் என்பவரின் மகனை அவரது நண்பர் சந்திரசேகர் தனது பதவியுயர்வுக்காக காப்பாற்றத் தவறுகிறார். இதன் விளைவாக தீவிரவாதிகள் தனஞ்ஜெய ராவின் மகனை சுட்டுக்கொல்கிறார்கள். மகன் கொல்லப்படுவதைப் பார்க்கும் தனஞ்ஜெய ராவின் மனைவி நோய்வாய்ப்படுகிறார். இதனால் கோபம் கொள்ளும் தனஞ்ஜெய ராவ், சந்திரசேகரின் மகனையும் இதேபோல கொன்று புத்திரசோகத்தில் தவிக்க வைப்பேன் என்று சொல்லி பழிக்குப்பழி வாங்க நினைக்கிறார். ஆனால் அவருக்கு அவரது மனைவியைக் கவனித்துப் பார்ப்பதே கடினமாக இருக்க அந்த வேலையை அவுட்சோர்ஸிங் செய்கிறார். அப்போதுதானே பாலைய்யா திரையில் வரமுடியும். பாலைய்யா தனஞ்ஜெய ராவின் கோரிக்கையை தீர்த்து வைத்தாரா என்பதே மீதிக்கதை. 

 முதல் காட்சியில் கடிதம் ஒன்று பறந்து வருகிறது. கிராபிக்ஸ் ப்ரோ.. ஏழைப்பெண்ணின் இடத்தை அபகரித்துதான் போலீஸ் நிலையம் உருவாகி இருக்கிறது. அதை அடித்து உதைத்து தட்டிக்கேட்கிறார் துர்கா பிரசாத். அவர்தான் அங்கே லோக்கல் ரௌடி.  ஏழைப்பெண்ணின் வீட்டை அபகரிக்க பார்க்கும் போலீஸ் படையை அடித்து உதைத்து திருத்துகிறார். அப்புறம் என்ன பாட்டைப் போடுகிறோம். என்பிகேவின் டான்ஸை ரசிக்கிறோம் கொண்டாடுகிறோம். 

பிறகுதான் இவரைப் பற்றி கேள்விப்பட்டு தனஞ்ஜெய ராவ் உதவி கோரி வருகிறார். அவரின் சோகம் சரியாக இருந்தாலும், தனது மகனுக்காக மீண்டும் இன்னொருவரின் மகனை கொல்வது எப்படி சரி என நினைக்கும்போது... பாலைய்யா யோசிப்பதில்லை. முதலில் ஆக்சன் அப்புறம் தான் யோசனை என வேலையில் இறங்கி விடுகிறார். அவர் உண்மையில் சந்திரசேகரின் மகனைக் கண்டுபிடித்து கொன்றாரா, அதனால் தனஞ்ஜெய ராவின் மனைவி துக்கம் மீண்டு எழுந்தாரா, உண்மையில் அப்பா, அம்மா இல்லாமல் வாழ்வதாக கூறும் துர்கா பிரசாத் யார் என்பதுதான் கதை. 

ஆஹா

ஒருவரின் மகன் இறந்ததற்காக இன்னொருவரின் மகனைக் கொல்வதா என நாம் நினைப்பதையேதான் துர்கா பிரசாத்தும் நினைக்கிறார். பிறகுதான் அவர் அதைநோக்கி சென்று காரியங்களை செயல்படுத்தினார் என்பது தெரிய வருகிறது. தனஞ்ஜெய ராவின் மனைவி தொடர்பான காட்சிகள், இறுதிக்காட்சியில் அவர் பேசும் வசனம் சிறப்பாக உள்ளது. 

கை விளங்காமல் போய்விட திருமணம் செய்யும் பெண்ணை எப்படி காப்பாற்றுவது என மனதிற்குள் மருகுவது, திருமணத்தை நிறுத்திவிட பேசுவது என பாலைய்யாவுக்கான உணர்ச்சிகரமான காட்சிகள் சிறப்பாக உள்ளன. சிம்ரன் படத்தில் கவர்ச்சிக்கு மட்டுமல்ல நடிக்கவும் இடமுள்ளது. 

ஐயையோ 

கோவிலில் எம்.பி தன் ஆட்களோடு மக்களை தீ வைத்து கொளுத்துவதாக சொல்லுகிறார். பாலைய்யா ஹெலிகாப்டரில் வந்திறங்கி சண்டை போடுகிறார். மக்களை கொளுத்துவதாக சொன்ன வில்லன் திடீரென அம்மன் சிலையை சிதைத்து அழிப்பேன் என்று சொல்லுவது எதற்காக, அதற்காக எதற்கு புஜத்தில் பாலைய்யா கடப்பாரை குத்து வாங்கவேண்டும்?

ஊரில் பெண்களை வல்லுறவு செய்பவன் இருக்கிறான் என்றால் அந்த ஊரில் உள்ள நேர்மையான ஆட்கள் அதைத் தடுக்க ஏதும் செய்யாமல் இருப்பது எப்படி? அதுவும் அவர்களுக்காக உழைத்து தன் வலது கையை இழந்துவிட்ட துர்கா பிரசாத்தின் மனைவியை மானப்பங்கப்படுத்தும்போது கூட மக்கள் அனைவரும் அமைதியாக நின்று எக்ஸ் வீடியோஸ் பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என்ன ஊரோ என்னமோ?

அடுத்து காதல் காட்சி என சாருலதா (ரீமாசென்)வை பாம்பு இடுப்பில் கடிக்க, அதை இடுப்புச்சதையைக் கடித்து விஷம் எடுக்கிறார் ஐபிஎஸ் படித்த துர்காபிரசாத்.... அடேங்கப்பா என வியக்க வைக்கும் காட்சி. பின்னே மணிசர்மா போட்டுவைத்த சூப்பர் பாடல்களை எப்படித்தான் பயன்படுத்துவதாம்? 

சாதி, குலம் பற்றி ஹேமா (சிம்ரன்) குடும்பமே பேச அதை மறுத்துப் பேசும் ஒரே குரலாக சிம்ரன் ஒருவரே இருக்கிறார். இதைப்பற்றி மறுத்துப் பேச இன்னொரு பாத்திரத்தை வைத்திருக்கலாம். 

ராயலசீமா சிங்கம் - குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டுவிட்டது

கோமாளிமேடை டீம் 





கருத்துகள்