காவரி ஆற்று வெள்ளம் போல அலைபுரளும் காமம்! கடிதங்கள்

 




எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ்






அன்புத்தோழர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு,  வணக்கம். 

நலமாக இருக்கிறீர்களா? வேலை இப்போது முழுக்க இணையம் சார்ந்து மாறிவிட்டது. சமாளித்து செய்து வருகிறேன். கரமுண்டார் வூடு நாவல் படித்துக்கொண்டிருக்கிறேன். கள்ளர்களுக்கும் பள்ளர்களுக்குமான பல்லாண்டு கால உறவை நாவல் பேசுகிறது. கள்ளர்களின் ஆவேசமும், கட்டற்ற காம உறவுகளும் பள்ளர்களுக்குள் உருவாக்கும் மோதல், பிரிவினை பற்றியதே நாவல். இதனை பேச்சு மொழியில் எழுதியுள்ளார் தஞ்சை ப்ரகாஷ். 

தஞ்சையில் வாழும் கள்ளர், பள்ளர் மக்களை இயக்குவதும், செயலின்மையை ஏற்படுத்துவதுமாக காமமே உள்ளது. காவிரி ஆற்றில் கட்டப்பட்ட பழமையான கரமுண்டார் வூடு அங்கு வரும் வெள்ள நீரின் தன்மைக்கு ஏற்ப தன்னை சமாளித்துக்கொண்டதா இல்லையா என்பது கூட குறியீடுதான். அடுத்து அங்கு அந்த வீட்டை தலைமை ஏற்க வரும் ஒருவனுக்காக பல்வேறு வகையிலும் காத்திருப்பது கதையை வாசிக்க வைக்கும் இடம். வயதான காலத்திலும் கரமுண்டார் ஆண் வாரிசுக்காக மனைவியின் பின்னாடியே சுற்றுவதும், உமா, உடலின் பொறுமலை சகிக்க முடியாமல் கலியனைத் தேடிப்போவதும், காத்தாயம்மா பத்தாயக்கட்டுக்குள் தன்னை இருத்தியபடி காமத்தை கட்டுப்படுத்துவதுமாக ஆற்றின் நீர்ப்பெருக்கு போல காமம் அனைவரது உடலிலும் அலையாடிக்கொண்டே இருக்கிறது. 

ஏறத்தாழ காமத்தை முக்கியமான பாத்திரம் என்று கூட கூறலாம். ப்ரகாஷின் கதைகளில் பொதுவான பெண் பாத்திரங்கள் வலுவானவர்கள். அவர்கள்தான் மௌனமாக இருந்து பேச வேண்டிய இடத்தில் பேசி கதையை நகர்த்துகிறார்கள். லா.ச.ரா எழுதிய பாற்கடல் நூலை படித்துக் கொண்டிருக்கிறேன். போனில்தான் படித்து வருகிறேன். இது அவரின் குடும்பத்தின் கதைகளைப் பற்றியது. 

ஆபீசில் எப்போதும் கூப்பிடுவார்கள் என்று தெரியவில்லை. விரைவில் அழைத்து விடுவார்கள் என்று தோன்றுகிறது,. இப்போது போலவே படிப்பதை தொடர்ச்சியாக செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். நேருவின் பேச்சுகளை மெல்லத்தான் மொழிபெயர்க்க முடிகிறது. அதனை வலைத்தளத்தில் வெளியிட்டு பிறகு நூலாக்க முடிவு செய்துள்ளேன். 

சந்திப்போம். 

நன்றி

ச.அன்பரசு

20.1.2021


  

கருத்துகள்