காலச்சுவடு 200ஆவது இதழில் உள்ள சிறுகதைகள் பற்றி...! கடிதங்கள்

 









இனிய தோழர் முருகுவிற்கு, நலமா?

காலச்சுவடு 200 ஆவது இதழ் வாசித்தேன். அரவிந்தன் அனுபவங்களைப் படித்தேன். ஸ்ரீராமின் கால வியூகம் குரு சிஷ்ய கதையில்  இது மற்றொரு கதை. எழுத்தாளர் மனம் செல்கிற பாதையைக் காட்டுவதாகவே உள்ளது. ஆசை, அகங்காரம் என பல விஷயங்களையும் , உறவு தந்திரங்களையும் வகுக்கிற வியூகம் இது. 

போக்கிடம் - கே.என். செந்தில் எழுதியது.  சசி, மதி, லட்சுமணன், ஆறுமுகம் உள்ளிட்டோரின் வாழ்க்கை பந்தாடப்படும் சூழ்நிலை  மற்றும் சிக்கல்கள் பற்றிய கதை இது. 

எங்கு கெட்டவார்த்தை பேசப்படவேண்டுமோ அங்கு கடும் வெறுப்புடன் வார்த்தைகளை பாத்திரங்கள் பேசுகிறார்கள். ஜே.பி. சாணக்யாவின் பெருமைக்குரிய கடிகாரம் நெடுங்கதையாக அமைந்திருக்கிறது. ஏமாற்றுகிறவன் புத்திசாலியா, ஏமாறுகிறவன் புத்திசாலியா என்பதை பேசி, நேசிக்கிற விஷயங்களாலேயே ஒருவன் வேட்டையாடப்பட்டால் எப்படியிருக்கும் என்பதை அங்குலம் அங்குலமாக விவரித்திருக்கிறது கதை. 

போலியாக இருந்தாலும் அதனை கலாபூர்வமாக பிலிப்ஸ் உருவாக்குவது ஆச்சரியமாக உள்ளது. கதையை படிக்கிற வாசகனே அதில் பங்கேற்பது போன்ற தன்மை நெடுங்கதையை படிக்கும்போது உருவாகிறது. இருநூறாவது இதழ் பற்றி முழுமையாக படித்தபிறகு பலருக்கும் பல கருத்துகள் இருக்கலாம். ஆனால் அதற்கு அரவிந்தன் கட்டுரையில் பதில் இருக்கிறது. 

ஈரோட்டில் புத்தகத் திருவிழா தொடங்கிவிட்டது. நீங்கள் ஏதேனும் நூல்களை வாங்குவீர்கள் என்று நினைக்கிறேன். தி இந்துவில் ராமச்சந்திர குஹா எழுதிய கட்டுரையைப் படித்தேன். மன்மோகன்சிங், மோடி வேறுபாடுகளை அவர் அலசி ஆராய்ந்து எழுதியிருந்தார்.  முக்கியமான மொழிபெயர்ப்பாக தோன்றியது. காலச்சுவட்டில் கருத்து சுதந்திரம் பற்றிய கட்டுரை ஒன்றை குஹா எழுதியிருந்ததைப் படித்தேன். நீங்கள் வேகமான வாசிப்பாளர் என்பதால் அதனை முன்னமே படித்திருப்பீர்கள். ராஜ ஸ்ரீ வாரியர் பேட்டியும் வாசிக்க நன்றாக இருந்தது. 

நன்றி!

ச.அன்பரசு

7.8.2016

கருத்துகள்