அதிசயங்கள் இல்லாத மனிதரின் வாழ்க்கை கதை! கடிதங்கள்

 






அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

நீங்கள் ஃபேஸ்புக்கில் எழுதும் பதிவுகளை படித்து வருகிறேன். அரசின் விதிகள் பற்றியும் அதன் செயலின்மை பற்றியும் பகடியாக எழுதுவது நன்றாக இருக்கிறது. வீடியோக்களைப் பார்க்கவில்லை. எழுத்துகளை மட்டுமே படித்தேன். 

எங்கள் பத்திரிகைக்கான வேலைகளை வீட்டிலிருந்தே செய்து வருகிறேன். இந்த வேலை எத்தனை நாட்கள் இருக்கும் என்று தெரியவில்லை. வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறைக்கு இன்னும் உடல், மனம் இரண்டுமே பழகவில்லை. 

பூனாச்சி - பெருமாள் முருகன் எழுதிய நாவலைப் படித்தேன். ஆடு தன்னுடைய பார்வையில் உலகைப் பார்த்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் நாவல் எழுதப்பட்டுள்ளது.  ஆட்டுக்கு காது குத்தி எண் பதிவது என்ற முறையில் அரசின் செயல்பாடுகளை கடுமையாக பகடி செய்கிறார் ஆசிரியர். இப்படி செல்லும் சில இடங்கள் அதிகமாக நீள்கிறதோ என்று தோன்றுகிறது. குறிப்பாக ஏழு குட்டிகளை ஆடு ஈன்றபிறகு அதைப்பற்றி அரசு அதிகாரிகள் கேள்வி கேட்கும் இடம்.

குருதேவ் எனும் பானுமதி நரசிம்மன் எழுதிய ரவிஷங்கரின் சுயசரிதையைப் படித்தேன். நூல் எளிமையாக ரவிஷங்கர் அவர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. அதிசயங்கள் என்று சொல்லாமல் ஞானம், அறிவு, தியானம் என்று வேறு வகையாக எழுதப்பட்டுள்ளது. வெஸ்ட்லேண்ட் பதிப்பகத்தின் தமிழ்வெளியீட்டில் ஏராளமான எழுத்துப்பிழைகள் உள்ளன. மொழிபெயர்ப்பு நேர்காணல், கடித நூல் என இரு நூல்களை எழுதி தொகுத்து வருகிறேன். விரைவில் வேலைகளை நிறைவு செய்வேன் என்று நினைக்கிறேன். நன்றி!

சந்திப்போம். 

ச.அன்பரசு

16.5.2020


கருத்துகள்