வாசிப்பு நோக்கத்தை பாழாக்கும் தேர்வு! - கடிதங்கள்

 







காகித மலர்கள் - ஆதவன்


அன்புத்தோழர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். 

நலமாக இருக்க இறையைப் பிரார்த்திக்கிறேன். 

இன்றுதான் ஆதவன் எழுதிய காகித மலர்கள் நூலைப் படித்து முடித்தேன். நாவலில் வரும் கேள்விகளுக்கு இறுதியில் பதில் சொல்லியிருக்கிறார்  ஆசிரியர். வாசிக்க நல்ல நூல்தான் என்பதில் சந்தேகமில்லை. 

அறையில் சமைத்து சாப்பிட முயற்சிகளைச் செய்து வருகிறேன். கடைகளில் அசைவப் பிரியர்களுக்கான விஷயங்களே அதிகம் உள்ளன. 

ஹிட் ரெஃப்ரெஷ் - சத்யா நாதெள்ளா எழுதிய நூலைப் படித்து வருகிறேன். கணினித் துறை வளர்ச்சி, தனது மூளைவாதம் கொண்ட குழந்தையின் பராமரிப்பு, தொழில் தடைகள் என பல்வேறு விஷயங்களை நூலில் தெளிவாகப் பேசியுள்ளார். அலுவலகத்தில் இப்போது மாதம்தோறும் ஒரு நூலைப் பற்றி பேச சொல்லுகிறார்கள். அந்த வரிசையில் சத்யாவின் நூலைப்பற்றி பேசலாம் என யோசித்து வருகிறேன். எதைப்படித்தாலும் சரி, அதைப்பற்றி தேர்வு வைத்தால் வாசிப்பு நோக்கம் பாழாகப் போய்விடும் என்பது எனது கருத்து. 

சாவி எழுதிய நவகாளி யாத்திரை, இந்திய சுயராஜ்யம் ஆகிய நூல்களை வாசிக்கவேண்டும். தேசியம் பற்றிய கட்டுரையில் உங்கள் உதவி தேவை என்று நினைக்கிறேன்.

 ஜோடி -2019 என்ற தெலுங்குப் படத்தைப் பார்த்தேன். வில்லனாக நடிக்கும் சாய்குமாரின் மகன் ஆதி நடித்துள்ள படம். கிரிக்கெட் பெட்டிங்கால் பாதிக்கப்படும் குடும்பங்களின் கதை. விஷயம் சீரியஸ்தான் என்றாலும் எடுத்த விதம் நன்றாக இருக்கிறது. கிரிக்கெட் பெட்டிங் மீது பைத்தியமாக இருக்கும் அப்பாவை மகன் எப்படி மீட்கிறார், அப்பாவால் கெட்டுப்போன தனது பெயரை மீட்டு மாமனாரை சமாதானப்படுத்தி கல்யாணத்தை எப்படி செய்கிறார் என்பதுதான் கதை. ரிலாக்ஸாக பார்க்க வேண்டிய படம். பாடல்களை பானி கல்யாண் மீண்டும் மீண்டும் கேட்கும்படி செய்திருக்கிறார். 

நன்றி

ச.அன்பரசு

17.9.2019

கருத்துகள்