பிடித்திருக்கிறது என்பதற்கான உடனே நூலை வாங்கினால் கஷ்டம்! - கடிதங்கள்

 






அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம்.

 நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். லைபாக்லை ஆன்ட்டி வடகிழக்கு சிறுகதைகள் தொகுப்பு படித்தேன். மொழிபெயர்ப்பும் தொகுப்பும் சுப்பாராவ். நூலை வாங்கி படித்துக் கொண்டிருந்தபோது, அலுவலக நண்பர் பாலபாரதியிடம்  எழுத்தாளர் பற்றிக் கேட்டேன். அவர்,  சுப்பாராவ் சரியான மொழிபெயர்ப்பாளர் கிடையாது என்று சொன்னார். கூகுள் ட்ரான்ஸ்லேட் வழியாக அவர் மொழிபெயர்த்த நூல் ஒன்றை வாங்கி படாதபாடு பட்டதாக கூறினார்.  தொழில்நுட்பத்தை தனது வேலைக்காக பயன்படுத்திக்கொள்கிறார் போல என்று நினைத்துக்கொண்டேன். புதிய புத்தகம் பேசுது இதழில் நூல்களைப் பற்றி சுப்பாராவ் எழுதுவதை சில ஆண்டுகளாக நூலகத்தில் படித்திருக்கிறேன். 

வடகிழக்கு தொடர்பான கதைகளை படிக்கவேண்டும் என நினைத்து புத்தக கண்காட்சியில் சுப்பாராவின் நூலை வாங்கினேன். மொத்தம் பதினான்கு கதைகள் இருந்தது. அதில் நான்கு கதைகள் மட்டுமே மாநிலத்திலுள்ள மக்களின் தன்மையை, பிரச்னையை, அரசியல் சிக்கல்களை பேசும்படி இருந்தது.  பிடித்திருக்கிறது என்ற காரணத்திற்காக உடனே நூலை வாங்கக் கூடாது என்பதற்கு லைபாக்லை ஆன்ட்டி சரியான உதாரணம். 

எலிஸா பே எழுதிய இந்திய பயணக் கடிதங்கள் நூலை அக்களூர் ரவி மொழிபெயர்ப்பில் படித்து வருகிறேன். கணியம் சீனிவாசன் சாரிடம் இரவல் வாங்கி வந்தேன். கடிதங்கள் வழியாக அவர் பயணம் செய்த அனுபவங்களை  படித்துக்கொண்டிருக்கிறேன். 

உங்கள் கையில் ஏற்பட்ட காயம் ஆறியிருக்கும் என நினைக்கிறேன். ரத்தமகுடம் இல்லாத குங்குமத்தை படிக்க விரும்பவில்லை. சரித்திர கதையை தொடர்கதையாக எழுதி சுவாரசியம் தந்த கதைகள் குறைவுதான். இந்த வகையில் எழுதப்படும் காலத்தைப் பொறுத்து ரத்தமகுடம் முக்கியமான தொடர்கதை. பின்னாளில் நாவலாகவும் சிறப்பாக விற்பனை பெறும் என நினைக்கிறேன். 

வரும் வாரம் ஊருக்கு சென்று அம்மாவைப் பார்த்து வரவேண்டும். ஒவ்வாமைக்கான மருந்துகள் தீர்ந்துவிட்டன. அதையும் சேர்த்து வாங்கி வரவேண்டும். அம்மாவுக்கும் நரம்புரீதியாக ஏதோ பிரச்னை. மனநிலையும் சரியாக இல்லை. மனம் தளர்ந்தால் உடலும் பலவீனமாகிவிடுகிறது இயற்கைதானே?

 நன்றி!

ச.அன்பரசு

6.3.2021

கருத்துகள்