நூல் வாசிப்புக்கான நம்பிக்கை முனையம்! - கடிதங்கள்

 






முருகு அண்ணாவிற்கு, 

நலமறியவும், நலத்துடன் இருக்கவும் ஆவலும் வேண்டுதலும். 

தற்போது சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது 3வது அத்தியாயம் வரை படித்திருக்கிறேன். தங்களின் கடுமையான பணிநெருக்கடிகளுக்கு இடையில் நிறைய நூல்களை வாசித்து விடுகிறீர்கள். இதுதான் என்னை நூல்களை வாசிக்க செய்யும் நம்பிக்கை முனையம். 

அறச்சலூர் பிரகாஷ் அண்ணன், சில படங்களைக் கொடுத்தார். அதனை நாளொன்றுக்கு ஒருபடம் என முடிவு செய்து பார்த்து வருகிறேன்.  தி குட், தி பேட், அண்ட் தி அக்லி படத்தை நேற்று பார்த்து முடித்தேன். வறட்சியான பள்ளத்தாக்கு பகுதியில் வாழும் ஆட்களின் வாழ்க்கைதான் படம். படம் முடியும் வரை யாரெனும் ஒருவர் இன்னொருவரின் தலையிலுள்ள தொப்பி பறக்க சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். 

பிரிதிவிராஜ் அவர்களின் திருமணத்திற்கு போய் வந்ததை சகோதரர் கூற அறிந்தேன். மணப்பாறை பயணம் எப்படியிருந்தது? பயணம் ஏதாவது ஒன்றை நமக்கு கற்றுத்தரும் என நினைக்கிறேன். புதிய செய்திகளை, மக்களை அறிய பயணம் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?

வேலைக்காக ஓபிசி சான்றிதழ் வாங்கும் முயற்சிகளில் இருக்கிறேன். இதற்கும் லஞ்சப்பணத்தை ஆபீஸ் ஆட்களுக்கு தரவேண்டும். கொள்ளுக்காட்டு வலசைச் சேர்ந்த ஒருவருக்கு காசு கொடுத்தால்தான் சான்றிதழ் கிடைக்கும். இங்குதான் பள்ளிக்காலத்தில் என்னுடன் படித்த கோபிநாத் என்ற நண்பரும் இருக்கிறார். அந்த இடத்திற்கு செல்லும்போதுதான் அவர் வீட்டிற்கு வந்த நினைவு வந்தது. 

புதிய நூல்களை அறிந்தால், படித்தால் அவை பற்றிய பரிந்துரைகளை எழுதவும். 

சாலையை கடக்கும் நேரம், போக்குவரத்தில் நிற்கும் நேரம் மழைக்காக பிரார்த்தியுங்கள். 

நன்றி!

ச.அன்பரசு

4.3.2013


கருத்துகள்