நுட்பமான கதாபாத்திர விவரிப்புகளைக் கொண்ட நகுலனின் கதைகள்! - கடிதங்கள்

 








அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.  

எங்கள் நாளிதழுக்கான பதிப்பக வேலைகளை செய்து வருகிறேன். கூட்டுறவு வங்கி பற்றிய தகவல்களை சேகரித்து எழுதி வருகிறேன். ஐந்து வாரங்களில் மினி தொடராக எழுதியதை தொகுத்து பத்து அத்தியாயங்களாக மாற்றியுள்ளேன். தினசரி இதழுக்கான இலக்கணம், பதிப்பக நூலுக்கான இலக்கணம் என்பதை ஒன்றாக வைத்துக்கொள்வதா, தனியாக உருவாக்கிக்கொள்வதா என்பதில் குழப்பம் உள்ளது. வறட்சியான மொழியில் எழுதி நூல்களை எப்படி விற்பனை செய்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இப்படியே நூல்களை தொகுத்தால் இன்னும் சில தொடர்களை விரிவாக்கலாம். ஆனால் அதன் வடிவங்களை நிறைய மாற்றவேண்டும். 

மயிலாப்பூர் காரணீஸ்வர் கோயில் அருகே எப்போதும் தட்டடைதான் வாங்குவேன். ஆனால் இன்று அங்கு முத்து மாரியம்மன் என்ற பழைய புத்தக கடையைப் பார்த்தேன். நகுலன் கதைகள் - காவ்யா பிரசுரம் வைத்திருந்தார் கடைக்காரர். விலையைக் கேட்டதற்கு காவ்யா ஓனரே கண்முன் நிற்பது போல நூலை புரட்டிப் பார்த்துவிட்டு நாற்பது ரூபாய் என்றார். அவரது உடல்மொழி இருக்கிறதே அபாரம்.... 

நகுலனின் கதைகளை முன்னர் திருப்பூர் ந ந்தகுமார் படிப்பதை பார்த்திருக்கிறேன். கொஞ்சம் நுணுக்கமான சொல்லியதை விட சொல்லாத விஷயங்களை யோசிக்க வைக்கும் விதமாக கதைகளை எழுதியிருக்கிறார். ஒருநாள், ஒரு ராத்தல் இறைச்சி கதைகளை நன்கு யோசித்துத்தான் படிக்க வேண்டியிருந்தது. பாத்திரங்களின் குணங்களும், தன்மைகளும் கூட வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. 

குங்குமம் இதழில் தொடர்ச்சியாக அமைச்சர்களை பேட்டி எடுத்து அன்னம் அரசு சார் எழுதுவது நன்றாக இருக்கிறது. பள்ளி தொடங்கும் அறிவிப்பு வந்துவிட்டதால், தினசரி இதழைத் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. இப்போது கணினியில் போனில் பிடிஎப் நூல்களை படிப்பதில்லை. கண் விரைவாக வறண்டுபோவதுதான் இதற்கு காரணம். பழைய புத்தக கடையில் நூலாக வாங்கி படித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். 

நன்றி!

ச.அன்பரசு

24.8.2021




கருத்துகள்