இந்திய அரசின் புதிய தனித்துவமான ஸ்மார்ட்போன் ஓஎஸ்!

 









ஸ்மார்ட்போன்களுக்கான புதிய ஓஎஸ் - எப்படி இருக்கும்?


மத்திய அரசு இந்தியாவிற்கென தனித்துவ  ஸ்மார்ட்போன் இயக்க முறைமையைத் (OS) தயாரிக்க உள்ளது. இந்த இயக்க முறைமை, கூகுளின் ஆண்ட்ராய்ட், ஆப்பிளின் ஐஓஎஸ் ஆகிய இயக்கமுறைமைகளுக்கு மாற்றாக இருக்கும். இதுபற்றிய செய்தியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார். 




இந்தியாவின் பிராண்ட்!

தற்போது இந்தியச் சந்தையில் பன்னாட்டு நிறுவனமான கூகுளும், ஆப்பிளும்  ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மென்பொருள் மட்டுமன்றி, வன்பொருள் சந்தையையும் கட்டுப்படுத்தி வருகின்றன. இதற்கு நிகரான திறன் கொண்ட ஓஎஸ்ஸை தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தகவல்தொடர்பு அமைச்சகம் வல்லுநர்களிடம் கருத்து கேட்டுள்ளது.  

புதிய இயக்கமுறைமையை இந்தியா உருவாக்கினால், அது இந்தியாவின் வணிக பிராண்டாக மாறும் என அரசு எதிர்பார்க்கிறது. மக்களுக்கு இரண்டு இயக்கமுறைமைகளைக் கடந்து மூன்றாவது வாய்ப்பாகவும் இது அமையும்.  ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களின் ஆதரவு மற்றும் உதவியால் ஸ்மார்ட்போன் இயக்கமுறைமையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.




 “மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகவும் இந்திய அரசும் இதுபற்றிய ஆர்வத்தைக் கொண்டுள்ளது. இதற்கான பேச்சுகள் நடந்துவருகின்றன. விரைவில் இயக்கமுறைமைக்கான கொள்கையை வெளியிடுவோம் ” என அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறினார். 

ஸ்மார்ட்போன்களுக்கான இயக்கமுறைமையை உருவாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் மென்பொருள், வன்பொருள் சந்தையில் இந்திய பிராண்டின் சந்தை மதிப்பு அதிகரிக்கும். 2026ஆம் ஆண்டிற்குள் மின்னணு சந்தையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கேற்ப  பல்வேறு கொள்கைகளை, திட்டங்களை மத்திய அரசு மாற்றியமைக்க உள்ளது. 

லினக்ஸ் ஓஎஸ்!

புதிய ஸ்மார்ட்போன் இயக்க முறைமை ஓபன்சோர்ஸ் முறையில் அமைய வாய்ப்புள்ளது. கடந்த 2007இல் இந்தியக் கணினிகளுக்கான பாஸ் லினக்ஸ் இயக்க முறைமை (BOSS Linux) வெளியானது. இதனை 19 மொழிகளில் பயன்படுத்துப்படி மத்திய கணினி மேம்பாட்டு அமைப்பு (C - DAC) உருவாக்கியது. இந்த அமைப்பு, மின்னணு மற்றும் தகவல்தொடர்புத்துறை அமைச்சகத்தில் வழிகாட்டலில் இயங்குகிறது.

விண்டோஸ் இயக்க முறைமை பயன்படுத்தியவர்கள், எளிதாக பாஸ் லினக்ஸை பயன்படுத்தும்படி வசதிகளை உருவாக்கியிருந்தனர். பெரும்பாலானோர் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் இயக்க முறைமை, லினக்ஸை அடிப்படையாக கொண்டது . எனவே, இந்திய அரசு உருவாக்கும் இயக்கமுறைமை அதன் எளிய அம்சங்களைக் கொண்டுள்ளதாக(மொழி, செயலி) லினக்ஸில் உருவாக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.  

தகவல்

https://www.livemint.com/news/india/govt-working-on-policy-to-facilitate-creation-of-indigenous-mobile-os-minister-11643041175276.html

pinterest

கருத்துகள்