பெண்கள் தங்கள் கனவை எப்போதும் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது! ஃபர்கா சையத், ஃபேஷன் டிசைனர்

 








ஃபர்கா சையத்

ஃபேஷன் டிசைனர்

சிறுவயதிலிருந்து பொம்மைகளுக்கு துணிகளை பொருத்திப் பார்த்து தைத்துக் கொண்டிருந்தவர், இன்று ஃபேஷன் டிசைனராக மாறியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லைதான். சிறிய நிறுவனமான தனது தொழிலைத் தொடங்கியவர் இன்று எஃப் எஸ் குளோசட் என்ற நிறுவனமாக வளர்ந்திருக்கிறார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தனது ஃபேஷன் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் ஃபர்கா. 

தனது திறமையால் இன்று இந்தி திரைப்பட உலகிலும் நுழையவிருக்கிறார். அவரிடம் பேசினோம். 

ஃபேஷன் டிசைனிங் துறைக்குள் வர உங்களைத் தூண்டியது எது?

எனக்கு சிறுவயதில் இருந்தே இத்துறையில் ஆர்வம் இருந்தது. எனது டிசைன் சார்ந்த வணிகத்தை 2018இல் தொடங்கினேன். எனக்குப் பிடித்ததை சரியாக செய்யவேண்டும் என்பதுதான் லட்சியம். எனது பிராண்டை பிரபலப்படுத்த நான் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். இன்று என்னுடைய பிராண்ட் பலருக்கும் தெரியும் விதமாக மாறியிருக்கிறது. 

இத்துறையில் உங்களுக்கு ஊக்கம் கொடுத்தது யார்?

சிக்கலான சவால்களை சமாளித்து தங்களை காத்துக்கொள்ள முன்னிலைப்படுத்திக்கொள்ள போராடும் அனைத்து பெண்களுமே எனக்கு ஊக்கம் கொடுத்தவர்கள் தான். அவர்கள் தங்கள் கனவை விட்டுக்கொடுக்காமல் விடாமுயற்சியோடு போராடி வருகிறார்கள்.  இத்தகைய பெண்கள்தான் என்னுடைய கனவை நிறைவேற்ற இன்னும் காலமிருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள். 

தொழிலில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள நாம் தயாராக திறந்த மனதோடு இருப்பது முக்கியம். உங்களுக்கு வயது 15 அல்லது 50 என இருப்பது முக்கியமல்ல. கற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதே முக்கிய அம்சம். விடாமுயற்சியோடு உங்கள் கனவை பின்தொடர்வது முக்கியம். 

பெண் தொழில்முனைவோர்க்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

சவால்களை சந்தியுங்கள்.உங்கள் கனவை சாதிக்க போராடுங்கள். முக்கியமான விஷயமாக கனவை எப்போதும் விட்டுக் கொடுத்துவிடாதீர்கள். 

Femina





கருத்துகள்