இந்தியன் பினாமி லீக்! -கொழிக்கும் ஹவாலா பணம்



Image result for ipl caricatures



இந்தியன் பினாமி லீக்!- .அன்பரசு


Related image



ஐபிஎல்லை அப்படித்தான் சொல்லவேண்டும். இந்திய,பாரீன் வீரர்களின் பங்களிப்போடு 2008 ஆம் ஆண்டு ஜே ஜே என சரவெடியோடு தொடங்கிய டிவென்டி -20 கிரிக்கெட்டின் கிளாமர் வெர்ஷனுக்கு 11 ஆவது சீசனை வெற்றிகரமாக கொண்டாடி நிறைவு செய்துள்ளது. 

உள்ளூர் திறமைக்கு மரியாதை என ஐபிஎல் அணி ஓனர்கள் ஜபர்தஸ்தாக பேட்டி தட்டினாலும் உண்மை என்னவோ இதில் கொட்டும் காசு மழைதான் ஐபிஎல் இன்டர்வெல் விடாமல் ஆண்டுதோறும் நடைபெற சிம்பிள் காரணம். ரசிகர்களுக்கு அதிரடி ரன்கள், டாப் கியர் ஸ்கோர்,சியர்ஸ் லீடர் கிளுகிளுப்பு என ஃபுல் மீல்ஸ் ட்ரீட் கிடைத்தாலும் கிரிக்கெட்டின் உடன்பிறப்பான ஊழல் சர்ச்சைகளுக்கும் இதில் பஞ்சமில்லை. 'THIN DIVIDING LINE' என்ற பெயரில் ஐபிஎல் பற்றிய திரைமறைவு உண்மைகளை வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் எழுத்தாளர் பரஞ்ஜாய் குஹா தாக்குர்தா.


ஜென்டில்மேன் கேம் என உலகெங்கும் கருதப்பட்ட கிரிக்கெட் 2008 ஆம் ஆண்டில் ஐபிஎல் என பரிணாமவளர்ச்சியாக அப்டேட் ஆனது. லீக் போட்டிகள்(NBA) என்பது அமெரிக்காவிலிருந்து அப்படியே இறக்குமதியான ஸ்போர்ட்ஸ் மாடல். அதேநேரம் கிரிக்கெட்டின் மாறாத பிரச்னைகளான நிதி,பாலியல் முறைகேடு, ஸ்பாட் ஃபிக்சிங் ஆகியவையும் ஐபிஎல்லை அனகோண்டாவாக சுற்றி வளைத்தன. இதில் இன்றும் மாறாதது, வரியற்ற சொர்க்கமான மொரிஷியஸ், பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளிலிருந்து அணிகளுக்கு குவியும் கரன்சிதான். அணியின் உரிமையாளர் என பினாமியாக ஒருவர் நமக்கு காட்டப்பட்டாலும், முதலீடு அடிப்படையில் அதன் அசல் ஓனர் வேறு ஒருவர் இருப்பார்.


2010 ஆம் ஆண்டு டைம்ஸ் நவ் மற்றும் அவுட்லுக் பத்திரிகை(2011), மொரிஷியசிலிருந்து அந்நிய முதலீடுகளை ஐபிஎல் அணிகள் பெற்றது பற்றிய செய்திகளை வெளியிட விளையாட்டு வட்டாரமே ஷாக் ஆனது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரான ஜெய்ப்பூர் ஐபிஎல் லிட்.டுக்கு இஎம் ஸ்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் லிட்(99.9%), இங்கிலாந்திலுள்ள எமெர்ஜிங் மீடியா(0.1%), ட்ரெஸ்கோ இன்டர்நேஷனல்(பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள்) ஆகிய நிறுவனங்கள் முதலீட்டை அளிக்கின்றன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி(KPH Dream Cricket), பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளில் இயங்கும் பன்ட்ரீ இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திலிருந்து முதலீடுகளைப் பெறுகிறது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கான முதலீடு, தொழிலதிபரான ஜெய் மேத்தாவின் சீ ஐலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் லிட்.லிருந்து அடைமழையாக கொட்டுகிறது. .

பிசிசிஐ/ஐபிஎல் ஆகியவற்றின் நிதிமுறைகேடுகளை நாடாளுமன்ற குழு தீவிரமாக என்கொயரி செய்யத்தொடங்கியதுதான் பிரச்னையின் பிள்ளையார் சுழி. RBI,FIPB ஆகிய அமைப்புகள், FEMA(1999 சட்டம்) ஆகியவற்றை அப்பட்டமாக மீறி ராஜஸ்தான் ராயல்ஸ்,நைட்ரைடர்ஸ்,கிங்ஸ் லெவன்,மும்பை இந்தியன்ஸ் ஆகிய டீம்கள் செயல்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் அணிகளின் பங்குகளை விற்பதில் பிசிசிஐயின் விதிகளும் கண்டுகொள்ளப்படாதது பின்னர்தான் அனைவருக்குமே புரிபட்டது

இந்திய கிரிக்கெட் வாரியம், ஐபிஎல்லை தன் குழந்தை போல கருதி ஊழல், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளிலிருந்து கவனமாக பாதுகாத்தது. 2009-10 ஆம் ஆண்டில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 7.34% பங்குகள் ராஜ் குந்த்ராவின் கூகி இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிட். மற்றும் 3.64% பங்குகள் எம் ஸ்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் லிட்.டுக்கு முறைகேடாக பரிமாறப்பட்டன. இது அப்படியே மும்பை இந்தியன்ஸ்,கிங்ஸ் லெவன்,நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கும் பொருந்தும். இந்த வரி ஏய்ப்பு விதிமீறலை கிரிக்கெட் போர்டிலிருந்த அனைவரும் கவனித்தாலும் கமுக்கமாக கள்ள மௌனம் சாதித்தனர் என்பதோடு, மோசடிகளையும் குறைத்து காண்பித்தனர் என்பதே ஆய்வு செய்த நாடாளுமன்றக்குழுவினரின் குற்றச்சாட்டு.


2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஐபிஎல் இயக்குநரான லலித்மோடி மீது டிவி உரிமை,இணையதள உரிமை, அணியின் பங்கு விற்பனை ஆகியவற்றில் ஊழல் குற்றம்சாட்டி, அவரை டிஸ்மிஸ் செய்தார் பிசிசிஐயின் முன்னாள் தலைவரான சசாங் மனோகர். அதன்பின்னர் அவர் லண்டனில் தலைமறைவாகிவிட்டார். இவர் என்ன மோசடி செய்தார்? ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மறைமுக உரிமையாளர் என்பது குற்றச்சாட்டு. ராஜஸ்தான் அணியின் எமெர்ஜிங் மீடியா ஸ்போர்டிங் ஹோல்டிங்ஸை இயக்கும் நபர்களில் ஒருவரான சுரேஷ் செல்லரம் லலித்தின் சகோதரர்.  இவரிடம் 44.15% சதவிகித பங்குகளும், லலித் மோடியோடு தொடர்புடைய மனோஜ் படலே 32.4% சதவிகித பங்குகளும் வைத்திருந்தனர். இதில் 11.7% சதவிகித பங்குகளை வைத்திருந்த ராஜ் குந்த்ராவின் தகிடுதத்தங்கள் வெளியாகி பிசிசிஐக்கு தலைவலி கொடுக்க, அணியின் உரிமம் கேன்சலாகி, விளையாட்டில் பங்குகொள்ள முடியாமல் போனது. தற்போது சீசன் 11 இல் ரீஎன்ட்ரி ஆகவிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ்.

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் பாலிவுட்டின் பாட்ஷா ஷாரூக்கானும் தப்பவில்லை. இவரின் நைட்ரைடர்ஸ்(KRSPL) அணிக்கு ஏராளமான பினாமி ஒனர்கள். 9900 பங்குகளில் ஷாருக்கின் மனைவி கௌரிக்கு நூறு பங்குகள். மார்ச் 31 2009 இல் 20 மில்லியன் பங்குகளில் சீ ஐலேண்ட் நிறுவனம் 5 மில்லியன் பங்குகளும், நடிகை ஜூகி சாவ்லா மேதா 4 மில்லியன் பங்குகளும், மிச்சமுள்ள 11 மில்லியன் பங்குகளும் ரெட் சில்லீஸ் எண்டர்டெய்ன்மென்ட் வசம் இருந்தன. ஒரு பங்கு ரூ.10 என்ற வகையில் ரைடர் அணி பங்குகள் சீ ஐலேண்ட் நிறுவனத்துக்கு( மார்ச் 7 ,2009) மாற்றப்பட்டுள்ளன மார்ச் 14, 2009 அன்று, ஜூகி சாவ்லாவின் கணவர் ஜெய் மேதாவின் சிட்டி பேங்க் கணக்கிலிருந்து நைட் ரைடர்ஸ் கணக்குக்கு 6.06 கோடி கைமாறியுள்ளது. பின்னர் 2010 ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று ஜூகி சாவ்லா தனது பங்குகளை சீ ஐலேண்ட் நிறுவனத்துக்கு விற்று ரைடர் நிறுவனத்தின் உரிமையிலிருந்து விலகி கொண்டுள்ளதை அமலாக்கத்துறை ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளது. நீதிமன்றத்தின் சொல்லில்தான் வாய்மை வெல்லும் வாய்ப்புள்ளது.


கொட்டும் விளம்பரக்காசு!

ஐபிஎல் சீசன் 1 - 400 கோடி
சீசன் 2 - 1,200 கோடி
சீசன் 3 - 2,200 கோடி
ஸ்டார்டிவி உரிமத்தொகை - 16,347 கோடி(ஒரு போட்டிக்கு 55 கோடி)
டைட்டில் ஸ்பான்சர் - 2,199 கோடி
(ஸ்டார் இந்தியா தகவல்படி)

ஐபிஎல் தொடக்கம்!

2007 ஆம் ஆண்டு ஜீ என்டர்டெயின்மென்ட்டின் ஐடியா ஐசிஎல். ஆனால் இதில் விளையாட வீரர்களுக்கு பிசிசிஐ தடை விதித்ததோடு லலித்மோடியை இயக்குநராக கொண்டு ஐபிஎல்லை செப்.2007 அன்று தொடங்கியது. ஐசிஎல்லின் ஐடியாவை காப்பியடித்து ஐபிஎல்லை வலுவாக்கினார். அன்று பிசிசிஐயின் துணைத்தலைவராக இருந்த லலித்மோடி. போட்டிகள் ஏப்.2008 இல் தொடங்கின. 2010 ஆம் ஆண்டு யூட்யூபில் ஒளிபரப்பாகத்தொடங்கிய முதல் விளையாட்டுப் போட்டியான ஐபிஎல்லின் பிராண்ட் மதிப்பு 5.3 பில்லியன்(2017).