மகிழ்ச்சிக்கென பள்ளிகளில் வகுப்புகள் தொடக்கம்.!


happy வகுப்புகள்!


Image result for happy illustration


இந்தியத் தலைநகரான டெல்லியில் ஆயிரத்து ஐநூறு பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. கதை சொல்வது, குடும்ப உறுப்பினர்களில் பிடித்தவர்களை பற்றி எழுதுவது உள்ளிட்டவையே மாணவர்களுக்கான டாஸ்க்குகள். மகிழ்ச்சிக்கென எதற்கு வகுப்பு? என்று கேட்டால் உலகை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றே அர்த்தம்.
மாணவர்களுக்கு தேர்வு, பணியாளர்களுக்கு வேலை, தொழிலதிபர்களுக்கு பிஸினஸ் என மூளையைத் தின்னும் பட்டியலிடப்பட்ட வேலைகள்தான் பிரச்னை.

 இதிலிருந்து காக்கவே டெல்லி கல்வி இயக்குநரகம் அரசு பள்ளிகளில் மகிழ்ச்சி வகுப்புகளை தொடங்கி போட்டித்தேர்வு, உச்சமதிப்பெண்கள் என தடுமாறும் மாணவர்களை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்க முயற்சித்து வருகின்றன.
கல்வி மட்டுமல்ல கார்ப்பரேட் தொழில்துறையினரும் பணியாளர்களின் மனச்சோர்வை குறைத்து கிரியேட்டிவிட்டியை அதிகரிக்க மகிழ்ச்சி வகுப்புகளை ஹேப்பி ஹோ (அ) கார்ப்பரேட் குருக்களின் நிறுவனங்களை அழைத்து வந்து நடத்துகிறார்கள். 

இந்தியாவில் முதல் மாநிலமாக மத்தியப்பிரதேசம், பூடான், அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலிலிருந்து ஆலோசகர்களை அழைத்து வந்து மகிழ்ச்சி துறையை தொடங்கி நிகழ்ச்சிகளை வடிவமைத்து வருகிறது. இதில் விளையாட்டு, நடனம் உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளை கொண்ட ஒருவார நிகழ்வான ஆனந்த் உற்சவ் குறிப்பிடத்தக்கது. ஆந்திராவும் சும்மாவா? மகிழ்ச்சி கமிஷன் தொடங்கி மகிழ்ச்சி அலைகளை மாநிலமெங்கும் பரப்ப திட்டங்களை வகுத்து வருகிறது.  

வளர்ச்சியடைந்த நாடுகளான டென்மார்க், ஸ்வீடன், க்ரீன்லாந்து உள்ளிட்ட நார்டிக் நாடுகளில் மகிழ்ச்சி பற்றாக்குறைவு அளவு 12.3% உள்ளது என கோபன்ஹேகனிலுள்ள மகிழ்ச்சிக் கழகத்தின் ஆகஸ்ட்மாத ஆய்வறிக்கை தகவல் கூறுகிறது. நிஜ உலகில் நண்பர்களை பெற முடியாத பலருக்கும் சமூகவலைதளங்கள் கருத்தையொத்த நண்பர்களை பெறவும் உலகை அறியும் ஜன்னல்களாக உள்ளன. “ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் மகிழ்ச்சிக்கான போட்டியை செயற்கையாக ஏற்படுத்தி வன்முறை, கோபத்தை உளவியல்ரீதியில் தூண்டுகின்றன” என்கிறார்  சமூகவியலாளரான டேவிஸ்.

2013 ஆம் ஆண்டிலிருந்து ஐ.நா. சபை ஆண்டுதோறும் மார்ச் 20  ஆம் தேதியை மகிழ்ச்சி தினமாக அனுசரிக்கிறது.  இவ்வாண்டிற்கான மகிழ்ச்சிப்பட்டியலில் பங்கேற்ற 156 நாடுகளில் ஃபின்லாந்துக்கு முதலிடம். இந்தியாவின் இடம் 133. “வாழ்வின் வழியாக பெற வேண்டிய மகிழ்ச்சி, உலகமயம், மிதமிஞ்சிய நுகர்வு காரணமான அடையவேண்டிய லட்சியமாகிவிட்டது வேதனை” என்கிறார் உளவியலாளரான ஸ்வர்னிமா பார்க்கவா. மனம் திறந்து பேசுவது மனசுக்கு நல்லது!

ஆக்கம்: ச.அன்பரசு
தொகுப்பு: கார்த்திக் ஜெயமணி, கா.சி.வின்சென்ட்