மதிப்பெண்ணை அள்ளி வழங்கிய ஆசிரியர்!





Image result for 100 out of 100

பிச்சை எடுக்கும் தடகள வீரர்!

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர், அரசு வேலை தராமல் புறக்கணித்ததால் தெருவில் பிச்சை எடுக்கும் பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளார்.
ம.பியைச் சேர்ந்த மன்மோகன்சிங் லோதி, மாற்றுத்திறனாளி தடகள வீரர். கடந்தாண்டு குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியின் நூறு மீட்டர் போட்டியில் ஓடி வெள்ளி வென்றுள்ளார். “பத்து ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் எனது வலது கையை இழந்துவிட்டேன். அரசு வேலை கிடைத்தால் எனது குடும்பத்தை காப்பாற்றமுடியும்” என மெல்லிய குரலில் பேசுகிறார் லோதி. அரசின் இரவுக்காப்பகங்களில் தங்கி அரசின் வேலைக்கு முயற்சித்தவர், முதல்வர் சிவராஜ்சிங் சௌகானை பலமுறை சந்தித்து மனுகொடுத்தும் வேலை கிடைக்கவில்லையாம். “எங்களுடைய துறை விதிப்படி லோதிக்கு வேலை தருவது இயலாத ஒன்று. சமூகநீதித்துறையில் அவர் முயற்சிக்கலாம்.” என்கிறார் விளையாட்டுத்துறையின் கூடுதல் இயக்குநர் வினோத் பிரதான். திறமைக்கு இதுதான் அங்கீகாரமா?


2


இஸ்‌ரோவின் 19 திட்டங்கள்!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்‌ரோவின் லட்சியத்திற்கு தூரம் அதிகம். அடுத்து வரும் ஏழு மாதங்களில் பத்தொன்பது திட்டங்களை தடதட வேகத்தில் மேற்கொள்ளவிருக்கிறது இஸ்‌ரோ குழு. இதில் சந்திரயான் 2, ஜிஎஸ்எல்வி MK111-D2(பாகுபலி) திட்டங்களும் உண்டு.
இந்தியா சந்திரயான்-2 வை அடுத்தாண்டு ஜன.3-பிப்.16 தேதிக்குள் விண்ணில் ஏவிவிட முயற்சித்து வருகிறது. அதேநேரம் இந்தியாவோடு இஸ்‌ரேலும் போட்டியிட்டு தன் செயற்கைக்கோளை நிலவில் நிறுத்தவிருக்கிறது. “பத்தொன்பது திட்டங்களில் பத்து செயற்கைக்கோள்கள், ஒன்பது செயற்கைக்கோள் வாகனங்களை இவ்வாண்டின் செப்டம்பர் முதல் அடுத்தாண்டின் மார்ச் வரையிலான காலகட்டத்தில் சோதித்து பார்க்கவிருக்கிறோம். முப்பது நாட்களில் இரண்டு செயற்கைக்கோள்களை இதுவரை இஸ்ரோ ஏவியதில்லை” என உறுதியாக பேசுகிறார் இஸ்‌ரோ தலைவரான கே.சிவன். இதில் கார்டோசாட்-3,  ரிசாட்-2BR1, ரிசாட்-2B ஆகிய செயற்கைக்கோள்கள், இந்தியாவின் பாதுகாப்பிற்காகவும், ஜிசாட் 7A, இந்திய வான்படை தளங்கள், ராடார் நிலையங்களை ஒருங்கிணைக்கவும் உதவும். ஆகமொத்தம் விண்ணிலும் அதிரடி ரேஸ் தொடங்கியாச்சு!   
3

அழகுக்கும் வரி உண்டு!-ரோனி
ஆயிரம் நாடுகளை வானில் சுற்றி வந்து சம்பாதித்தாலும் கஸ்டம்ஸ் ஆபீசர்களை ஏமாற்ற முடியுமா? தென்னாப்பிரிக்கா அழகியை 4 லட்ச ரூபாய் வரி கட்டவைத்திருக்கிறார்கள் மும்பை ஆபீசர்ஸ்.
2017 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற தென்னாப்பிரிக்க பெண, டெமி லெய் நெல்பீட்டர்ஸ் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மும்பைக்கு விமானத்தில் வந்தார். நெல்பீட்டர்ஸ் கையில் வைத்திருந்த மிகிமோடோ கிரீடம் சுங்கத்துறையை உறுத்தியது. உடனே ரூமில் கிரீடத்திற்கு வரி ஆமாவா? இல்லையா? என ஆலோசித்து 40 சதவிகித வரியை விதித்து 4 லட்சரூபாய் என பில் தீட்டிவிட்டனர். உலக அழகி பட்டம் வென்ற நெல்பீட்டர்ஸ் பெற்ற மிகிமோடோ கிரீடத்தின் மதிப்பு 1.77 கோடி. அழகு, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றின் சிம்பிள் குறியீடான மிகிமோடோ கிரீடம் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட பெருமைக்குரிய அடையாளமாகும்.  


4

ஆர்டிஐ சட்டத்திற்கும் ஜிஎஸ்டி வரி!

ம.பியைச் சேர்ந்த தகவல் ஆர்வலர், தகவலறியும் உரிமைச்சட்டத்தில் கேட்ட தகவலுக்கு ஜிஎஸ்டி வரி கட்டச்சொல்லி அதிர்ச்சி அளித்துள்ளது மாநில அரசின் வீட்டுவசதி வாரியம்.

மத்தியப்பிரதேசத்திலுள்ள ஊழல் எதிர்ப்பு செயல்பாட்டாளரான அஜய் துபே, ரியல்எஸ்டேட் வாரியத்தின் அலுவலக புதுப்பிப்பு செலவு  விவரங்களை தகவலறியும் உரிமைச்சட்டத்தின் மூலமாக கேட்டிருந்தார். அதற்கு அரசு, ஜிஎஸ்டி வரியும் கட்டி வாங்கிக்கொள்ளுங்கள் என ஆவணங்களை வழங்கியுள்ளது. 18 பக்க போட்டோ நகல்களுக்கு ரூ.36, மத்திய, மாநில ஜிஎஸ்டி வரிகள் ரூ.7 சேர்த்து ரூ.43 கட்டி ஆவணங்களை பெற்றுள்ளார் அஜய் துபே. “ஆர்டிஐ சட்டப்படி தகவல் கேட்பதற்கு ஜிஎஸ்டி வரியா? இதற்கு எதிராக போராடப்போகிறேன்” என்கிறார் அஜய் துபே. சிஐசி(CIC) கமிஷனர் ஸ்ரீதர் ஆச்சார்யுலு, தகவல்களை வழங்குவது சேவையல்ல; அதற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தவறு என கண்டனம் தெரிவித்துள்ளார்.

5

80/50 மாணவனின் சாதனை!

குஜராத்தின் மேல்நிலைப்பள்ளி தேர்வுகளில் நிகழ்ந்த மதிப்பெண் குளறுபடி மாநில அரசுக்கு தீராத தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவரின் கணித விடைத்தாளுக்கு 50 மதிப்பெண்களுக்கு பதிலாக 80 மதிப்பெண்களை தவறுதலாக வழங்கிய ஆசிரியரின் சொதப்பல் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. “50 மதிப்பெண்ணுக்கு பதிலாக 80 மதிப்பெண்களை ஆசிரியர் கவனக்குறைவாக வழங்கியது தவறு. மாணவர் கணித விடைத்தாளில் பெற்றது 8 மதிப்பெண்கள் மட்டுமே” என புகார்களுக்கு பதில் அளித்துள்ளார் கல்வித்துறை அதிகாரி எம்.எம். பதான். 3 ஆயிரத்து 200 ஆசிரியர்களுக்கு இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அதில் 657 பேர் பத்து மதிப்பெண் கேள்விகளில் தவறு இழைத்தது உறுதியாகியுள்ளது. கணித விடைத்தாள்களோடு அறிவியல் தேர்வுகளிலும் மதிப்பெண் குளறுபடி நடைபெற்றுள்ளது. “அரிதாக நடைபெறும் பிரச்னை இது. ஆசிரியர்களும், ஒருங்கிணைப்பாளரும் எப்படி அலட்சியமாக இருந்தார்கள் என்று புரியவில்லை.” என பதிலளித்துள்ளார் தேர்வுத்துறை செயலர் ஆர்.ஹெச். ஜூனாகியா.