இந்தியாவை மாற்றிய பிஎன்போஸ்!- போற்றவேண்டிய அறிவியல் ஆளுமை!





Image result for PN Bose

தொழில்புரட்சி நாயகன்!


Image result for PN Bose
1965 ஆம் ஆண்டு. "இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த அறிவியலாளரான பிரமாதநாத் போஸின் நூறாவது பிறந்தநாளை கொண்டாடுவது மகிழ்ச்சி. புவியியல், அறிவியல் குறித்து புரிந்துணர்வோடு ஆழமாக இன்று நாம் பேசுவதற்கு காரணம், அறிவியல் பற்றி கூரிய கவனமில்லாத பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் புவியியலாளரான பிஎன் போஸ், செய்த ஆய்வுகளும் அதுகுறித்த குறிப்புகளும்தான்" என பிஎன் போஸின் நூற்றாண்டு விழாவில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவரை புகழ்ந்து பேசினார். யார் இந்த பிஎன் போஸ்?
இன்றைய இந்தியா உலகளவில் கனிமச் சந்தை பிஸினஸில் முன்னணியில் திகழ, பிரமாதநாத் போஸின் மூளையிலுள்ள நியூரான்களின் அபரிமித உழைப்பும் அதன் விளைவாக உருவான கண்டுபிடிப்புகளும் முக்கியக் காரணம்.

மேற்கு வங்காளத்தின் கைபூரில் 1855 ஆம் ஆண்டு மே 12 அன்று பிறந்த பிஎன்போஸ், தன் பதினைந்தாம் வயதிலேயே கிரிஷ்நகர் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை எழுதிய அட்டகாச அறிவாளி. அங்கு இரண்டு ஆண்டுகள் படித்தவர், மூன்றாம் ஆண்டில் புனித சேவியர் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அப்போது கிடைத்த கில்கிறிஸ்ட் கல்வி உதவித்தொகை மூலம் 1874 ஆம் ஆண்டு லண்டன் பல்கலையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 1877 ஆம் ஆண்டு சுரங்கம் குறித்த படிப்பை ராயல் கல்லூரியில் பயின்றார். படிப்பை முடித்தவருக்கு இரண்டு சாய்ஸ்கள் இருந்தன. ஒன்று இங்கிலாந்தில் வேலைதேடி செட்டிலாவது அல்லது பூர்விகமான இந்தியாவுக்கு சென்று ஆசிரியராவது. பிஎன்போஸ் இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தெடுத்தார்  என்பதை நாம் சொல்லவும் வேண்டுமா?
இந்தியாவிலுள்ள புவியியல் ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பித்தார்.ஆனால் ஆங்கிலேய அரசு அவரை இங்கிலாந்திலேயே பணி கொடுத்து தங்கவைக்க விரும்பியது. பிஎன்போஸின் வேண்டுகோளை புறக்கணித்த ஆங்கில அரசு, இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தாதாபாய் நௌரோஜி அனந்தமோகன் போஸ் ஆகியோர் உறுப்பினராக இருந்த இந்தியா சங்கத்தில் இணைந்து போராடத் தொடங்கியதும் உஷாரானது. உடனே பிஎன்போஸூக்கு பணிநியமனம் வழங்கி இந்தியாவுக்கு அனுப்பியது.

கல்வித்துறை செயலருக்கு கீழ் பணியிடம் ஒதுக்கப்பட்டாலும் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தையே தேர்ந்தெடுத்து துணை சூப்பரிடெண்டாக பணிக்கு சேர்ந்தார். அப்பணியிடத்தில் பணியாற்றிய முதல் இந்தியரும் பிஎன் போஸ்தான். 1880-1887 ஆம் ஆண்டுவரை மத்தியப்பிரதேசத்தில் களப்பணி செய்த பிஎன்போஸ், ஆராய்ச்சி அறிக்கையை ஆறுமாதங்கள் செலவழித்து துல்லியமாக எழுதினார். 1890 ஆம் ஆண்டு மேற்கு வங்காள அரசின் உத்தரவின் பேரில், டார்ஜிலிங் பகுதியை ஆராய்ந்து நிலக்கரி இருப்பதை ஆராய்ந்து சொல்லி பாராட்டுக்களை அள்ளினார் பி.என்.போஸ். இவரின் திறமையை அறிந்த ஒடிஷா திவான் மோகினி மோகன்தார், அங்குள்ள மாயூர்பான்ஞ் மாவட்டத்திலுள்ள கனிமங்களை ஆய்வு செய்யக்கோரினார்.1903 ஆம் ஆண்டு போஸ் எழுதிய புவியியல் தரவுகள்தான் அப்பகுதியிலுள்ள இரும்புத்தாது குறித்த முதல் ஆவணம். குருமகிஷானி மலைத்தொடரில் போஸ் கண்டறிந்த இரும்புத்தாது பற்றிய தகவல், இந்தியாவின் தொழிற்புரட்சியை தொடங்கிவைக்கப்போகிறது என அன்று யாரும் நம்பியிருக்கவில்லை போஸைத் தவிர.

"இங்குள்ள அபரிமிதமான இரும்புத்தாது வளத்தை தீர்க்கமான கணிப்பது கடினம். ஆனால் நிறைய இரும்பு உருக்காலைகளுக்கு பல ஆண்டுகளுக்கு தேவையான இரும்பு இந்நிலத்தில் உள்ளது உறுதி" என குறிப்பில் எழுதியுள்ளார் பிஎன்போஸ். அறிக்கை வெளியானவுடன் ஜாம்ஷெட்ஜி டாடா ஒடிஷாவில் புதிதாக இரும்பு உருக்காலையைத் தொடங்கினார். தி ஸ்டேட்ஸ்மேன் உள்ளிட்ட பத்திரிகைகள் புவியியலாளர் பிஎன் போஸூக்கு புகழாரம் சூட்டின. ஒடிஷா இன்று நாட்டிலேயே முன்னணி கனிம ஏற்றுமதி மாநிலமாக இருக்கப்போவதை அன்றே கணித்தவர் பி.என்.போஸ்.

கனிம ஆராய்ச்சி மட்டுமல்லாது அறிவியல் தொழில்நுட்பங்களிலும் இந்தியா முதலிடத்தில் நிற்க ஏதுவாக நேஷனல் பெங்கால் இன்ஸ்டிடியூட்டை(இன்று ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்) தொடங்கிய பிஎன்போஸ், இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தில் சூப்பரிடெண்டாக பணிபுரிந்தாக முதல் இந்தியர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். 1934 ஆம் ஆண்டு மறைந்த பிரமாதபோஸ் இன்றைய நவீன கனிமம் மற்றும் எண்ணெய் துறைகளின் வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டிய தலைமகன்.


சாதனை இந்தியர் போஸ்!

சூரிய ஒளி, காற்று, நீர், உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு ஆகியவைதான் சிறந்த மருத்துவர்கள் என்பது பி.என்.போஸின் அனுபவமொழி. வங்காள தத்துவவியலாளர் கேஷப் சந்திரசென் இவரது வழிகாட்டி..Abkash Kusum  என்ற தலைப்பில் பி.என்.போஸ் எழுதிய 6 கவிதைகள் பிரசுரமாயுள்ளன. அசாமில் பெட்ரோலியம், ஜபல்பூரில் மாங்கனீசு, டார்ஜிலிங்கில் நிலக்கரி, சிக்கிமில் காப்பர் ஆகிய கனிமவளங்களை கண்டறிந்தார். புவியியல் ஆய்வுப்பணியை விட்டு விலகிய போஸ், மாயூர்பாஞ்ச் மாகாணத்தில் பணிபுரிந்தார். அப்போது ஜே.என். டாடாவை தொழிற்சாலை அமைக்கத் தூண்டினார். எளியமக்களுக்கு இயற்கை வரலாற்றை வங்காள மொழியில் எழுதி வெளியிட்டவர், A history of Hindu Civilization under British Rule" என்று நூலை மூன்றுபாகங்களாக எழுதி வெளியிட்டார்.


.அன்பரசுதொகுப்பு: கார்த்திக் ஜெயமணி