இதயத்துடிப்பை சொல்லும் முகம்!




Image result for women heartbeat



முகம் சொல்லும் இதயத்துடிப்பு!

வீடியோ கேமரா மூலம் ஹார்ட்பீட்டை கணிக்கும் முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் அமெரிக்காவைச்சேர்ந்த உடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.


வீடியோ கேமராவில் பயன்படுத்தும் குறிப்பிட்ட சாப்ட்வேர் மூலம் இதயத்துடிப்பை ஜேக் குந்தர் மற்றும் அவரது முன்னாள் மாணவரான நாடே ரூபன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர். "இதயத்திலிருந்து நரம்புகளுக்கு ரத்தம் செல்வதை தோலின் நிறத்தை வைத்தே வீடியோ கேமரா கண்டறிந்துவிடும். இதனை கேமராவில் மட்டுமே காணமுடியும்" என்கிறார் பேராசிரியர் ஜேக் குந்தர். இதில் பச்சை, சிவப்பு, நீலம் ஆகிய நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதயத்திலிருந்து நரம்புகளுக்கு பாயும் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினை கேமராவிலுள்ள பச்சை நிறம் காட்டுகிறது. முகம், கழுத்து,தோள் ஆகிய இடங்களிலுள்ள டேட்டாவை இதில் பரிசீலித்து தீர்வு காண்கிறார்கள். 2012 ஆம் ஆண்டில் ரூபனின் குழந்தையின் மூச்சுவிடுதலை செக் செய்ய உருவாக்கிய ஐடியாவின் அப்டேட் இது.

2

 பசுமை மியூசியம்!

சீனாவின் சுஹோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் விரைவில் பசுமை கொஞ்சி விளையாடப்போகிறது. ஷாங்காய் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை தொடர்ந்து இங்கேயும் அதே பசுமை முயற்சிகள் தொடரவிருக்கின்றன.

அறுபதாயிரம் ச.அடியில் மலைத்தொடர் அருகே இந்த சுஹோ மியூசியம் அமையவிருக்கிறது. இயற்கையான சூரிய ஒளியை பிரதிபலிக்கும் உலோக பளபளப்பில் மியூசியத்தின் உட்புறம் லாந்தெர்ன் விளக்கு போல மின்னும். பார்வையாளர்கள் நீர் நிறைந்த தடாகம் வழியாக மியூசியத்தின் உள்ளே வரமுடியும். கட்டுமானத்தின் மத்தியில் உலக உருண்டை வைக்கப்பட்டிருக்கும். கூரைகள் முழுக்க பசுமைத் தாவரங்கள் போர்த்தியிருக்குபடியான வடிவமைப்பில் மியூசியம் உருவாகவிருக்கிறது.


3

கற்கால பெண்ணின் முகம்!

ஏதென்ஸ் மற்றும் ஸ்வீடன் அகழ்வராய்ச்சியாளர்கள் கற்கால பெண்ணின் முகத்தை கண்டறிந்து உருவாக்கியுள்ளனர்.

 கிரீக்கின் தியோபெட்ரா குகையில் கண்டறியப்பட்ட Dawn என்ற கற்காலப் பெண்ணின் படிமங்கள் கண்டறியப்பட்டன. ஏறத்தாழ இது 9 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானவை. 1993 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட படிமங்கள் அக்ரோபோலிஸ் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளனபதினெட்டு வயதுக்குள் இருக்கும் இப்பெண்ணின் உருவத்தை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறையினரும் ஆராய்ந்து யூகமாக உருவாக்கி 3டி முறையில் உருவம் கொடுத்துள்ளனர். ரத்தசோகை, ஈறுகளில் ரத்தக்கசிவு ஆகிய பிரச்னைகள் இப்பெண்ணுக்கு இருந்திருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் கூறுகின்றனர்.

 தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்