சானிடரி பேடுக்கு வரி - தான்சானியாவின் புதுமை!









கடந்த ஜூன் 13 அன்று தான்சானியா, நிதி அமைச்சகம் பெண்கள் பயன்படுத்தும் சானிடரி பேடுக்கு புதிதாக வரி விதித்துள்ளது. கடந்த ஆண்டு சானிடரி பேடுக்கு வரி கிடையாது என்று அறிவித்த அமைச்சர் பிலிப்பியோ பாங்கோ, திடீரென தடம் மாறியுள்ளார்.


நான் முன்பு வரி இல்லை என்று சானிடரி பேடுக்கு அறிவித்தது உண்மைதான். ஆனால் அதன் விளைவாக அதன் விலைகள் குறையும் என்று நினைத்தேன். எதிர்பார்த்த விளைவுகள் நடைபெறவில்லை எனவேதான் இந்த முடிவு என மனம் திறந்திருக்கிறார்.

வணிகம் என்பது அனைத்து நாடுகளிலும் ஒன்றுபோலத்தானே. அமைச்சர் வரியைக் குறைத்தவுடன் குஷியான உற்பத்தியாளர்கள், லாபம் சம்பாதிக்க முயற்சித்தார்களே ஒழிய மக்களுக்கு ஒரு ரூபாய் கூட குறைக்கவில்லை. எனவே தற்போது அமைச்சர் அதற்கு மாற்றாக கார்ப்பரேட் வரியை 30 லிருந்து 25 ஆக குறைத்துள்ளார். இதன்விளைவாக, உள்நாட்டிலேயே சானிடரி பேடுகளை குறைவான விலையில் தயாரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என அமைச்சர் நம்புகிறார்.


அமைச்சரின் ஓராண்டு வரி விலக்கு, உற்பத்தியாளர்களுக்கு போதுமானது அல்ல என்று வர்த்தகத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கூறினாலும் அதனால் எந்த விளைவும் ஏற்படாது என பிலிப்பியோ கூறிவிட்டார். விலை குறைப்புக்காக பிலிப்போ வர்த்தகத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியும், அவர் உதவி செய்ய மறுத்துவிட்டார். சானிடரி பேடு உற்பத்தி தனது துறையின் கீழ் வராது என்று கூறி உள்ளார்.


தி சிட்டிசன் பத்திரிகை, தி நேஷன் உள்ளிட்ட பத்திரிகைகள் சானிடரி பேடை விட மென்ஸ்ட்டிரல் கப்ஸ் மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்று ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.அரசு வரி குறைத்தும் கிராமப்புறங்களில் 91 சதவீதம் சானிடரி பேடுகள் கிடைப்பதில்லை. காரணம், மக்களுக்கு வாங்கும் வசதி இல்லை என்பதோடு, அதன் அதிக விலையும் முக்கியக்காரணம்.


நன்றி: குளோபல் வாய்ஸ்  சுசி பெரியா