ஹோம் ஸ்கூலிங்கை விட அன்ஸ்கூலிங்குக்கு கூடுது மவுசு!




Image result for unschooling




இந்தியப் பெற்றோர்கள், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதைவிட மாற்றுவழிக் கல்வி வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.


காலையில் பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பி வைத்து, பின் மாலையில் டியூசன் முடித்து அவர்களை இரவில் வீட்டுக்கு கூட்டிவருவது  இனி தொடரப்போவதில்லை. தற்போது பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் அமைந்தால் மட்டுமே மாணவர்கள் நல்ல கல்வி அறிவுடன் உருவாவது சாத்தியம். இந்தியாவிலுள்ள பெற்றோர்கள் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள்  மீதான நம்பிக்கையினமை அதிகரித்து வருகிறது. இதனால், வீட்டிலேயே பாடங்களைக் கற்பிப்பது (Homeschooling), அனுபவங்கள் மூலமாக குழந்தைகளை சுதந்திரமாக கற்க அனுமதிப்பது (unschooling) ஆகிய முறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர்.

வீட்டில் பெற்றோர்கள் ஆசிரியர்களாக மாறி பாடம் சொல்லித் தருவதிலும் பாடத்திட்டம் உண்டு. அதில் வேலைவாய்ப்புக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெற முடியும். அதேசமயம் அனுபவங்கள் மூலம் கல்வியைக் கற்றுவரும் குழந்தைகள் பெரும்பாலும் வேலைவாய்ப்பு என்ற நெருக்கடியைச் சந்திப்பதில்லை. இதற்கு காரணம் அவர்களின் பெற்றோரின் பொருளாதார பலம்தான்.  இவர்களும் விரும்பினால் தேர்வு எழுதி சான்றிதழ் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு.

அனுபவக்கல்வி முறை எப்படி சிறப்பு வாய்ந்தது? கிராமத்திலுள்ள விவசாய வேலைகளைச் செய்யும் பெரியவர்கள், வேலை செய்வதிலுள்ள நுணுக்கமான விஷயங்களைப் பேசும்போது காது கொடுத்து கேட்டால் வியந்துபோவீர்கள். பொறியியலாளருக்கான அறிவுடன் மனத்தில் கணக்குப்போட்டு பணியைச் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த அறிவை அவர்கள் பள்ளி மூலம் பெறவில்லை. சிறுவயதிலிருந்து பணிக்குச்சென்று பிறருடன் பழகி அறிவைச் சேகரித்திருக்கிறார்கள். ஆம். இதுதான் அனுபவக்கல்வியை இன்றைய பெற்றோர் தேர்ந்தெடுக்கவும் காரணம்.

”நான் பள்ளிக்கு ஏழுவயதில் அம்மாவுடன் சென்றிருக்கிறேன். அங்கு அறையில் உட்கார்ந்து பலரும் படித்துக்கொண்டிருந்ததைப் பார்தேன். ஆனால், நான் பாடங்களை அலைந்து திரிந்துதான் படிப்பேன்” என்றார் அகமதாபாத்தைச் சேர்ந்த அனுபவக்கல்வி மாணவரான க்வாட்ரேட். இம்முறையில் குழந்தைகளுக்கு எந்தெந்த நேரத்தில் என்னென்ன படிக்கவேண்டும் என்பதற்கு, பெற்றோர் தொடக்கத்தில் உதவலாம். பின்னர் குழந்தைகளே நேரத்தை முடிவு செய்து, அவர்களின் ஆர்வத்தைப் பொறுத்து கற்பார்கள். வீட்டில் குழந்தைகள் கல்வி கற்பதால், அவர்களுக்கு சமூகத்தோடு இணைந்து பழகும் வாய்ப்பு இல்லாமல் போகிறது என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர்.
அனுபவக்கல்வி முறையில் இம்மாணவர்களுக்கென பல்வேறு முகாம்கள், பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகின்றனர். அவர்களில் இருபது ஆண்டுகளாக ஷிக் ஷாந்தார் (ShikShantar) எனும் பெயரில் முகாம்களை நடத்திவரும் விதி ஜெயின் முக்கியமானவர்.  "பள்ளிகளில் வேலைக்காக கல்வி, பட்டப்படிப்பு என்று சொல்லி விரட்டுகின்றனர். இதனால், மாணவர்களின் கற்கும் திறன் மழுங்குகிறது. கல்வி அறிவின் சாட்சியாக நீங்கள் பெற்ற பட்டச்சான்றிதழ் இனி உங்களுக்கு உதவாது” என பளீரென பேசுகிறார் விதி ஜெயின்.

க்வாட்ரேட் வயது மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்துகொண்டிருக்கின்றனர். அவர் இப்போது திரைப்பட உருவாக்கம், ஓவியம், ஓரிகாமி ஆகியவற்றைக் கற்று வருகிறார். தனக்கென தனி யூட்யூப் சானல் வைத்திருக்கிறார். தற்போது இசை பற்றிக் கற்க முடிவெடுத்துள்ளார். அதேசமயம் இம்முறையை அனைவரும் பின்பற்ற முடியாது என்பதும் உண்மை. கல்வியில் சுதந்திரம் தேவை என்று நம்பும் பொருளாதார பலமுள்ளவர்கள் இம்முறையை நம்புகின்றன.

 இவர்களுக்கு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூல் அல்லு ஐஜி சிஎஸ்இ கேம்ப்ரிட்ஜ் ஆகிய அமைப்புகளின் தேர்வுகளை எழுதினால் சான்றிதழ் கிடைத்துவிடும். தேர்வு வேண்டாம் என்றாலும் சரிதான். தனக்கான நேரத்தைத் தானே வடிவமைத்து தீவிரமாக கல்வி கற்பது என்பது அனைவருக்கும் சிறுவயதில் கைவராது. காலப்போக்கில் அது சாத்தியமாகலாம். தற்போது இந்தியாவில் இம்முறை புகழ்பெற்று வருகிறது.

நன்றி: TOI

வெளியீட்டு அனுசரணை- தினமலர் பட்டம்
படம்- ஏபிசி