இந்தியர்கள் பெருமைப்படுவதற்கான ஓர் நூல்!- இந்துத்துவா நேசர்களுக்கான நூல்




பத்ரி சேஷாத்ரி: January 2011





நம்பக்கூடாத கடவுள் - ஹிந்துத்துவா சிந்தனைகள்

அரவிந்த் நீலகண்டன்

கிழக்கு பதிப்பகம்


வரலாற்றில் மொகலாயர்கள் படையெடுப்பு இந்துக்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தியது? அசோகர் மரம் நட்டார், பிற மதங்களை போஷித்தார் என்பவர்கள் இந்து மன்னர்களைப் பற்றி(வீர சிவாஜி) ஏன் எதுவும் பேசமாட்டேன்கிறார்கள், இந்தியா எனும் பன்மைச் சமுதாயத்திலுள்ள பல்வேறு பொக்கிஷங்களை அழித்தவர்கள், திருடியவர்கள் யார், மொகலாயர்களின் வரி, பிற மத மன்னர்களின் சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகள் இன்றும் இந்தியர்களின் மனதில் உண்டு.

அத்தனை கேள்விகளுக்கும் அரவிந்தன் நீலகண்டன் இந்த நூலில் பதில் எழுதியுள்ளார். இந்நூலில் 60 பக்கங்கள் வரை மேற்சொன்ன விஷயங்கள் பேசப்படுகிறது. பின்னர் அப்படியே தடம் மாறி மேற்கத்திய அரசுகள் இந்திய கலாசாரப் பொக்கிஷங்களை மூலிகைகளை எப்படி திருடுகிறார்கள், அதைத் தடுக்கும் அவசியம் என தடம் மாறுகிறது.

இந்த இடம் நூலில் பொருந்தாமல் இருக்கிறது. முழுக்க இந்துத்துவ கருத்துகள் என்று படிப்பவர்களுக்கும், இந்த இடம் பார்த்திபன் படம் போல புரியாமல் போக அதிக வாய்ப்பு உண்டு. 

அயோத்தி ராமர் கோவில் தீர்ப்பு தொடங்கி ஒரிசா பாரம்பரிய அரிசி ரகங்கள் சேமிப்புவரை விலாவரியாக பல விஷயங்களை பேசியிருக்கிற அரவிந்தனின் அறிவு, வியக்க வைக்கிறது. சில கட்டுரைகள் தவறுதலாக நூலில் இடம்பெற்றதோ என ரசிக்கும்படி எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்குலகில் கண்டுகொள்ளப்படாத தாவரவியலாளர்கள் மற்றும் சூழலியலாளர்கள் பற்றி எழுதியது பிரமாதம்,

இந்துத்துவ சிந்தனைகள் என தலைப்பில் போட்டுவிட்டதால் ஆசிரியர் மார்க்சிய சிந்தனைகளை அடித்து ஆடுகிறார். மாவோ கால சீனா, இயற்கை சூறையாடிய சோவியத் யூனியன், இந்தியாவை கேவலமாக பேசி பிரிட்டிஷ் ஆட்சி நமக்கு கலாசாரத்தைக் கற்றுக்கொடுத்தது என கார்ல் மார்க்ஸ் பேசியது என படிக்கும் யாருக்கும் அவர்கள் மீது கோபம் தோன்றாமல் இராது. அப்படியொரு வெறுப்பு அனல் தகிக்கிறது எழுத்துக்களில்.

இயற்கை நேயமான கட்டுப்பாடுகள் விதிக்காத இந்து மதம் மக்களுக்கு உவப்பாக இருப்பது எப்படி, ஆனால் இதற்கு எதிர்மறையாக ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாமியம் எப்படி இயற்கையை அங்குலம் அங்குலமாக நுகர்ந்து அழிக்கிறது என்பதையும் ஆசிரியர் திடமாக பதிவு செய்துள்ளார். மனிதருக்குப் பிறகே இயற்கை எனும் அம்மத நூல்களின் அடிப்படையை தீவிரமாக விமர்சிக்கிறார் ஆசிரியர்.

அதிக விளைச்சல் தரும் மரபணு மாற்ற பயிர்களுக்கு எதிரான கட்டுரை பிரமாதமாக தொடங்கி எழுதப்பட்டுள்ளது. அதிலும இயான் மால்கம் பற்றிய எடுத்துக்காட்டு கட்டுரையின் முழு உண்மையையும் சொல்லி விடுகிறது.

கஜினி முகமது, ராஜராஜசோழன் எடுத்துக்காட்டு, ஆர்எஸ் எஸ் நூற்றாண்டு விழாவில் பேசப்படலாம். அந்தளவு கூர்மையாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. அனைத்து கட்டுரைகளுக்கும் பிரமாதமான பின்னிணைப்பு ஆதாரங்கள் உள்ளன. அதனால், தயக்கமின்றி அதனைப்படிக்கலாம்.

இந்தியராக நீங்கள் உங்களைப் பற்றி பெருமைப்பட எதுவுமில்லையே என வருத்தப்படுகிறீர்களா? உங்களுக்காகத்தான் இந்த நூலை எழுதியிருக்கிறார்கள். காஷ்மீரை இந்தியாவுடன் தயவுதாட்யணமின்றி இணைத்த வேளையில் உங்களுக்கு இந்த நூல் பெருமிதத்தைத் தரும். அறியப்படாத சில அறிவியல் தகவல்களையும் இந்த நூல் தருகிறது.

கோமாளிமேடை டீம்