இருவேளை உணவுக்காக நான் ஏராளமான வேலைகளை செய்துள்ளேன்! - எழுத்தாளர் மனோரஞ்சன் பியாபாரி

 








மனோரஞ்சன் பியாபாரி

எழுத்தாளர், அரசியல்வாதி

இமான் என்று வெளியாகியுள்ள நூல் நீங்கள் எழுதிய வரிசையில் 25ஆவது நூல்தானே?

இல்லை 26 ஆவது நூல். வங்காளத்தில் இந்த நூலை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினேன். சீரா சீரா ஜீபோன் என்பது அதன் பெயர். இப்போது மொழிபெயர்க்கப்பட்டு இமான் என்றாகியுள்ளது. 

அருணாவா சின்காவின் மொழிபெயர்ப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

எனக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியாது. ஆனால் மொழிபெயர்த்துள்ள அருணாவாவின் பணி மீது பெரும் மரியாதை வைத்துள்ளேன்.  அவர் என்னுடைய தேர் ஈஸ் கன்பவுடர் இன் தி ஏர் என்ற நூலை மொழிபெயர்த்தார். அந்த நூலை வாசித்தவர்களுக்கு அனைவருக்கும் பிடித்திருந்தது. அவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர். நூலின் அடிப்படை உணர்ச்சிகளை உள்வாங்கி மொழிபெயர்க்கும் திறன் கொண்டவர். 

நாவலை எழுத எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டீர்கள்?

நான் மிக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். 

வங்காள மொழியில் மட்டும் முதலில் உங்கள் நூல்கள் வெளியாகின. இப்போது மொழிபெயர்ப்பு காரணமாக பிற மொழிகளிலும் வாசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அருணாவா அவர்களுக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும். இப்போது எனது நூல்கள் வழியாக எனது பெயரை நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்களும் தெரிந்துகொள்வார்கள். என்னுடைய நூல்கள் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும். என் நூலை வாசித்து மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்களா என்பதை அறிய விரும்புகிறேன். இமான் நூல் எப்படி ஏற்கப்பட்டது என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. இமான் என்ற நூலை எழுதியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதயத்திற்கு நெருக்கமான நூல் என்று இதனைக் கூறுவேன். 

உங்களுக்கு இந்து நிறுவனத்தின் இலக்கியப் பரிசு கிடைத்த பிறகு வாழ்க்கை எப்படி இருந்தது?

நான் அப்போது பள்ளி ஒன்றில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தேன். இந்து இலக்கியப் பரிசு எனக்கு கிடைத்தபோது, பார்த்துக்கொண்டிருந்த வேலையை இழந்திருந்தேன். பதினேழு மாதங்களாக வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தேன். வேறு வேலைகள் என்று செய்வதற்கு ஏதுமில்லை. எனவே, அந்த நேரத்தில் முழுக்க எழுதிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் எழுதிய நூல்கள்தான் இப்போது மெல்ல பதிப்புக்கு வந்துகொண்டிருக்கிறது. 

உங்களது தொடக்க கால வாழ்க்கை கடினமானது. வங்க தேசத்திலிருந்து அகதியாக  வந்த பெற்றோர்களைக் கூட சிறிது காலத்திலேயே இழந்துவிட்டீர்கள் அல்லவா?

எனது சிறுவயதில் இருவேளை சாப்பிட ஏராளமான வேலைகளை செய்து வந்துள்ளேன். நான் ரிக்ஷா ஓட்டியுள்ளேன். சமையல்காரராக வேலை பார்த்துள்ளேன். துப்புரவு வேலைகளைக் கூட செய்துள்ளேன். தொழிலாளியாக, பாதுகாவலராக கூட இருந்துள்ளேன். 1980ஆம் ஆண்டு எனக்கு நக்சல்பாரி ஆட்களோடு தொடர்பு கிடைத்த.அவர்களது ஏழைகளுக்கு உதவும் கருத்து எனக்கு பிடித்திருந்தது. சிலமுறை நான் சிறைகளுக்கும் சென்று வந்துள்ளேன். 

ஃபிரன்ட்லைன் 

ஸியா அஸ் சலாம்

image - newslaundary
















கருத்துகள்