கதைகளுக்கு ஏற்றபடி டோனை மாற்றி வரைவதுதான் எனக்கு பிடிக்கும்!- விருது பெற்ற காமிக்ஸ் ஓவியர்

 







ஆனந்த் ராதாகிருஷ்ணன் என்ற காமிக்ஸ் இல்லஸ்டிரேட்டர் காமிக்ஸ் நூல்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருதான வில் ஐஸ்னர் விருதை வென்றுள்ளார். ராம் வி என்பவரின் ப்ளூ இன் க்ரீன் என்ற கிராபிக் நாவலுக்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இவருடன் கலரிஸ்ட்டான ஜான் பியர்சனும் இந்த விருதைப் பகிர்ந்துகொள்கிறார். 



விருதை வென்றது எப்படியிருக்கிறது ஆனந்த்?

விருது அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்தான் இதற்கான விண்ணப்பங்களை அனுப்பினோம். எனவே, விருதுக்கான போட்டியில் நாங்கள் இருக்கிறோம் என்று உறுதியாக தெரியும். எனவே, விருது பெற்றதில் பெரிய அதிர்ச்சி கிடையாது. நாங்கள் விருதை வென்றது நன்றாக இருக்கிறது. 

நீங்கள் விருது வென்ற பிரிவு பற்றி சொல்லுங்கள்?

சிறந்த ஓவியர், மல்டிமீடியா கலைஞருக்கான விருது. இந்த பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. பென்சில், இங்க், கலரிஸ்ட் ஆகியவற்றில் சிறந்தவர்களுக்கான பரிசு இது. 1980 மற்றும் 1990களில் காமிக்ஸை ஓவியமாக வரைவது என்பது பெரிய விஷயம். ஜான் பியர்சன் ஓவியங்களுக்கான வண்ணத்தை டிஜிட்டலில் செய்தார். அதுதான் பரிசுகொடுப்பதற்கான முக்கியமான அம்சமாக இருக்கும் என நினைக்கிறேன். 

முன்னர் நீங்கள் கொடுத்த நேர்காணலில் புதிய காமிக்ஸ் நூலை எழுதும்போது வித்தியாசமாக முயற்சி செய்வதாக கூறியிருந்தீர்கள். திரும்ப ஒரேமாதிரி வரைவதை பிடிக்கவில்லை என்று சொன்னீர்கள். காமிக்ஸில் வேலை செய்யும்போது உங்கள் மனதிற்கு கேட்கும் தனிப்பட்ட குரல்களைப் பற்றி சொல்லுங்கள்.

நான் மும்பையில் ஜேஜே இன்ஸ்டிடியூட்டில் அப்ளைடு ஆர்ட்ஸ் படிப்பை படித்தேன். அங்கு விளம்பரங்களுக்கு வரைவதைக் கற்றேன். நான் இந்த மாற்றங்களை எப்படி புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொள்கிறேன் என்பதே முக்கியமானது. நான் கதையை வெவ்வேறு முறைகளில் சொல்ல முயல்கிறேன். அதற்கு வெவ்வேறு நிறங்களைப் பயன்படுத்துகிறேன். 

நான் என்னுடைய ஸ்கெட்ச் புக்கில் ஒருநாள் திகில் படத்தை வரைந்தால், அடுத்த நாள் காதல் படத்தை வரைகிறேன். ஒரேவிதமாக படங்களை வரைய விரும்பவில்லை.  நான் ஒரு காமிக்ஸை எழுதும்போது அதற்காக ஆராய்ச்சி செய்தபின்னரே வேலை செய்கிறேன். கிராபிட்டிஸ் வால்  என்பது மும்பையைச் சேர்ந்த நான்கு இளைஞர்களை மையமாக கொண்டது. ஒருவரின் வாழ்க்கை பற்றிய கதை. கேலிச்சித்திரம் போல எளிமையாக, அதேசமயம் வேடிக்கையாகவும் நூல் அமைந்தது. 

ப்ளூ இன் க்ரீன் என்ற நாவல், மன அழுத்தம் பற்றியது. இதில் எளிமையான டோனைப் பயன்படுத்தவில்லை. நூலுக்கு எந்த விதமான டோன் தேவை என்பதை ராம் வெங்கடேஷனும் நானும் நிறைய முறை விவாதித்து முடிவெடுத்தோம். 



ப்ளூ இன் க்ரீன் நூல் முழுக்க வெளிநாட்டில் நடப்பது. ஆனால் எப்படி அதனை துல்லியமாக வரைந்தீர்கள்?

எழுத்தாளர் ராம் சில ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி பொறியியல் படித்தார். அவருக்கு அங்குள்ள ஜாஸ் இசை பற்றிய சூழல் தெரியும். எனக்கு இதுபற்றி ஏதும் தெரியாது. நான் கல்லூரி படிக்கும்போது ஜாஸ் இசையை பின்தொடர்ந்தாலும் அது அதிக காலம் நீடிக்கவில்லை. 

நான் கதை அமெரிக்காவில் நடப்பதால் பெரிதாக ஆராய்ச்சி செய்யவில்லை. வேலை நேரத்தில் ஜாஸ் இசையைக் கேட்டுக்கொண்டு வேலை செய்வேன். முன்னமே பார், இசைச்சூழல், அங்குள்ள மனிதர்களின் முகம் என நிறைய தகவல்களை ராம் கூறியிருந்தார். அவையெல்லாம் படங்களை வரையும்போது உதவியது. மீதி நேரத்தில் ஆடியோ நூல்களை கேட்டுக்கொண்டிருந்தேன். 

முழுக்கதையையும் கொடுத்துவிட்டு அதற்கு படம் வரைவது இயல்பு. ஆனால் நாங்கள் ஒரு காட்சியை வரைந்தபிறகு, அடுத்த பக்கத்தை ராம் எப்படியிருக்கும் என்று சொல்லுவார். இப்படி நாங்கள் வரைந்து வேலை செய்தபிறகு அதனை மேம்படுத்த முடியும். 

படங்களில் சிலது மட்டும் கூர்மையாக இருக்கிறது. சிலது, மங்கலானது போல இருக்கிறது. எதற்காக இந்த பாணியை கடைபிடித்தீர்கள்?

கடந்தகாலம், நிகழ்காலம் என இரண்டு வடிவங்களுக்கும் இரண்டு வித பாணிகள் உண்டு. ஒன்று கிராபைட், இங்க் கலந்த கலவை. அடுத்து அக்ரிலிக் மற்றும் டிஜிட்டல் கலரில் உருவாக்கினோம். 

நீங்கள் வேலை செய்யும் முறை எப்படிப்பட்டது?

முதலில் படங்களுக்கான ரஃப் வேலைகளை செய்வேன். பிறகு தேவையான ஆய்வுகளை செய்துவிட்டு ரஃப் படங்களுக்கான பென்சில், இங்க் படங்களை வரைவேன். பிறகு வண்ணம் தீட்டும் பணி தொடங்கும். பல்வேறு நாவல்களுக்கு பல்வேறு வித பாணிகளை பின்பற்றுவேன். 

இப்போது ரேடியோ அபோகலிப்ஸ் எனும் நாவலுக்கு ராமுடன் பணியாற்றி வருகிறேன். அபோகலிப்ஸ் காலத்தில் தாக்குப்பிடிக்கும் ரேடியோ நிலையம் பற்றி வரைந்துள்ளேன். லைன் ஆர்ட் முறையில் ரியலிஸ்ட் வகையில் படத்தை வரைந்துள்ளேன். 

ஸ்கெட்ச் புக்கை செல்லும் இடமெங்கும் கொண்டு செல்வது எப்படி இருக்கிறது?

நான் சாப்பிட ரெஸ்டாரெண்ட் செல்லும்போது அங்கு சலிப்பு ஏற்பட்டால் உடனே படம் வரையத் தொடங்கிவிடுவேன். ஸ்கெட்ச்புக்கில் எனது ஐடியா, கதைகள் என பல்வேறு விஷயங்களை எழுதி வைப்பேன். அதனை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்வது வழக்கம். 

ஸ்கெட்ச்புக் என்பது அந்தரங்கமானதாக பாதுகாக்கிறேன். அதனை பிறர் எடுத்து பார்க்க எனது அனுமதி தேவை. அதில் உள்ளவை அனைத்தும் சிறந்த படைப்புகள் கிடையாது. அதில் உள்ளவற்றை தனிப்பட்ட படைப்புகளாக எடுத்துக்கொள்ள முடியாது. 

சமூக வலைத்தளத்தை பின்பற்றுகிறீர்களா?

ஃபேஸ்புக் பிரபலமானபோது அதில் இணைந்தேன். இப்போது இன்ஸ்டாகிராமில் நான் பதிவுகளை இடுகிறேன். அதிலும் வேலை தொடர்பான படங்களே இருக்கும். எனது தனிப்பட்ட வாழ்க்கை, ஸ்கெட்ச்புக் விஷயங்களை அதில் பதிவு செய்வதில்லை. இன்ஸ்டாகிராமை நம்பி நான் வாழ்க்கையை நடத்தவில்லை என்பதால் அதிலுள்ள பிரஷர் என்னை பாதிக்கவில்லை. சமூக வலைத்தளத்தை தாண்டிய உலகில்தான் காமிக்ஸை வரைகிறேன். 






உதேசி பாசு 

ஸ்க்ரோல்


கருத்துகள்