அலர்ஜிக்கான மருந்துகளும், இயற்கை மருத்துவ முறையும்!

 







மாஸ்ட் செல் ஸ்டேபிலைசர்ஸ் 

உடலில் வீக்கத்தை குறைத்து ஹிஸ்டாமைனின் சுரப்பைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கியமான நோக்கம். மூக்கில் அதிக சளி உருவாவதை தடுக்கவே பெரும்பாலும் பயன்படுகிறது. குரோமோலின், நெடோகுரோமில், லோடோஸாமினா ஆகியவை இந்த வகையைச் சேர்ந்த மருந்துகளாகும். இவற்றை மூக்கில் இன்ஹேலர்
வழியாக உறிஞ்சலாம். அல்லது கண்ணில் மருந்தாக பயன்படுத்தலாம். மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை இரண்டு வாரம் பயன்படுத்தினால் போதும். பயன்களை பார்க்க முடியும். தூக்கம், அரிப்பு, கண்களில் கண்ணீர் அதிகம் வருவது, எரிச்சல் ஆகியவை இந்த மருந்தை பயன்படுத்தினால் ஏற்படும் பக்கவிளைவுகளாகும். 

ஆன்டிலியோகோட்ரைன்ஸ்

இந்த மருந்து மூச்சுக்குழாயில் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது. இந்த மருந்து ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அவர்களின் நுரையீரலில் உள்ள நீர்மத்தை குறைக்கிறது. இவை மூக்கில் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பை சரி செய்ய உதவுகிறது. 

புரோன்சோடிலேட்டர்ஸ்

ஒருவருக்கு மூச்சு விடுவதில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க உதவுகிற மருந்து இது. இதனை காப்பாற்றும் மருந்து என்று அழைக்கின்றனர். அறிகுறி தெரிந்தவுடனே மருந்தை உடலில் செலுத்தினால் அதே வேகத்தில் மருந்தும் வேலை செய்யும் என்பது முக்கியமான சிறப்பு அம்சம். 

பீட்டா அகோனிஸ்ட்ஸ்

அல்பியூடெரால், சால்மெட்டொரல், ஃபார்மோடெரால் ஆகிய மருந்துகள் ஆஸ்துமா பாதிப்பை பெருமளவு கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனை பயன்படுத்துவதால் பக்கவிளைவாக, பதற்றம், இதயத்துடிப்பு அதிகரிப்பு, தலைவலி ஆகியவை ஏற்படுகின்றன. 

தியோபைலைன்

மாத்திரை, கேப்ஸ்யூல், ஊசி மருந்தாக இதனைப் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்துவர், தனது ரத்தத்தை சோதித்து பார்க்க வேண்டும். இதன் பக்க விளைவாக, தலைவலி, படபடப்பு, செரிமானப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

ஆன்டிசோலினெர்ஜிஸ்

இன்ஹேலர், மாத்திரை, ஊசி மருந்தாக இதனை பயன்படுத்தலாம். பீட்டா அகோனிஸ்ட் சார்ந்த காம்பினேஷன் மருந்து. பக்கவிளைவாக, இருமல், தலைவலி ஏற்படுகிறது. 

ஓமாலிஸூமாப்

2003ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைமுறைக்கு வந்த மருந்து. ஐரோப்பாவில் 2005ஆம் ஆண்டு பயன்படுத்த தொடங்கினர். 

பனிரெண்டு வயதுக்கு மேற்பட்டவர்கள், வயது வந்தோர் பயன்படுத்தலாம். 

கடுமையான ஆஸ்துமா, ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு. இந்த மருந்து உடலில் வெளியாகும் இம்யூனோகுளோபிலின்களை தடுக்கிறது. சாதாரண மருத்துவ முறையில் எந்த பயனும் இல்லாத நிலையில் இதனை ஒருவர் பயன்படுத்தலாம். 

தடுப்பூசி

ஒருவருக்கு மேற்சொன்ன மருந்துகள் பயன் தராதபோது வேறுவழியில்லை தடுப்பூசிகளை பயன்படுத்தலாம். குறிப்பிட்ட ஒவ்வாமை தரும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில் இதுதான் சிறந்த வழி. தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்திக்கான தெரபிகளை பயன்படுத்தலாம்.  ஒவ்வாமை ஏற்படுத்தும் பல்வேறு பொருட்களை உடலில் செலுத்தி சோதிக்கிறார்கள். இந்த மருத்துவ சிகிச்சைக்கான குறைந்தபட்ச நேரம் ஓராண்டு. அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள். 

இந்த முறையில் ஒருவரின் ஒவ்வாமைக்கு காரணமான பிரச்னைகளில் இரண்டு, மூன்றை முழுமையாக தீர்த்துவிடமுடியும். இன்று நவீனமாக மாறியதால் புரத த்தில் உள்ள அலர்ஜென் பதுகியை மட்டும் உடலில் செலுத்துகிறார்கள். ஐந்து வயதுக்கு குறைந்தவர்கள், கர்ப்பிணிகள், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், இதயநோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு இந்த சிகிச்சை பயன்படாது. 

தடுப்பூசியில் ஒவ்வாமைக்கான பொருட்கள் இருப்பதால், இதனை செலுத்தியவுடன் ஒருவர் மயங்கி விழவும், ஒவ்வாமை அறிகுறிகளான குமட்டல், வாந்தி, ரத்தம் அழுத்தம் குறைவு, நாடித்துடிப்பு குறைவதும் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

இயற்கை மருத்துவ முறையில் மருந்துகளை விட மனநிலையை முக்கியமாக கருதுகிறார்கள். இதன்படி உடலையும் மனதையும் அவர்கள் ஒன்றாகவே நினைக்கிறார்கள். எனவே, வாழ்க்கை முறையை மாற்றுவது, ஊட்டச்சத்தான உணவுகள், மூலிகை மருந்துகள் என உடலையும், மனதையும் திரும்ப உயிரூட்டுவதற்கான முயற்சிகளை செய்கிறார்கள். மனதிலுள்ள மன அழுத்தத்தை நீக்குவதும் இதில் முக்கியமானது. இந்த முறையில் எந்த பக்கவிளைவுகளும் கிடையாது. 

தொகுப்பு - அரசு கார்த்திக் 




கருத்துகள்