பொதுவாழ்வில் பெண்களை பங்கெடுக்க கற்றுத்தரும் முன்னோடிப் பெண்கள்!

 




ஏஞ்சலிகா அரிபம், அரசியல் செயல்பாட்டாளர்






உ.பி. தேர்தலில் பாஜக கட்சி வெல்வதற்கு பெண்கள் தான் முக்கியமான காரணம் என தலைமை மக்கள் சேவகர் திரு. மோடி கூறினார். இப்படி ஆண்கள் சொன்னாலும் உண்மையில் பெண்களுக்கான அரசியல் பங்கேற்பை அதிகளவில் அனுமதிப்பதில்லை. ஆனால் பெண்கள் அதற்காகவெல்லாம் விட்டுக்கொடுக்கவில்லை. அவர்கள் இதற்கென தனி அமைப்பை தொடங்கி பெண்களுக்கும், ஆர்வமுள்ளவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்கள். இதைப்பற்றியதுதான் இக்கட்டுரை. 


ஏஞ்செலிகா அரிபம், தேசிய கட்சி ஒன்றில் பெண்கள் பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் தேர்தலில் போட்டியிட இடம் கேட்டுள்ளார். ஆனால் கட்சி அவருக்கு இடம் தராமல் மனதில் மட்டும் இடம் தந்துள்ளது. அதற்காக முதலில் வருத்தப்பட்டாலும், இனி இப்படியே இருந்தால் வேலைக்காகாது என முடிவெடுத்து, பெண்களை அரசியலுக்கு பயிற்றுவிக்கும் ஃபெம்மே ஃபர்ஸ்ட் Femme first என்ற அமைப்பைத் தொடங்கினார். இத்தனைக்கும் அரிபம் பலருக்கும் அறிமுகமாக பெண் என்று கூட யாரும் சொல்லமுடியாது. அவருக்கு தேர்தலில் போட்டியிட கட்சி இடம் மறுத்தபோதுதான் போர்ப்ஸ் இதழில் 30 அண்டர் 30 என்ற பட்டியலில் இடம்பெற்றிருந்தார். 




கங்க்சி அகர்வால்.


நெற்றி(NETRI) என்ற அமைப்பும், பெண்களை அரசியலுக்கு கொண்டு வரும் பணியைச் செய்து வருகிறது. இதுவரை 400க்கும் மேற்பட்ட அரசியல் ஆர்வமுள்ள பெண்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளது. இவர்கள் அரசியல் தவிர, குறிப்பிட்ட திட்ட பிரசாரங்களையும் பொதுவெளியில் விளம்பரம் செய்வதோடு அதற்கான திட்டங்களை செய்கிறார்கள். இதன் இயக்குநர் கங்க்சி அகர்வால். 

தாரா கிருஷ்ணசாமி நடத்தும் பொலிட்டிகல் சக்தி என்ற அமைப்பும், பெண்களை பொது வாழ்க்கையில் பங்கெடுத்துக்கொள்ள ஊக்கம் தருகிறது. பெண்களுக்கான தேர்தல் இட ஒதுக்கீட்டைப் பற்றி ஆண்கள், தவறான கருத்துகளை கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் தேர்தலில் பெண்கள் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தினாலும் கூட அவர்களை வேட்பாளர்களாக்க தயங்குகிறார்கள். தடுக்கிறார்கள் என வெளிப்படையாகவே பேசுகிறார் தாரா. அரசியலமைப்பில் இதற்கான விதிகள் இருந்தாலும் கூட அரசியல் என்று வரும்போது யாரும் அதனை கண்டுகொள்வதில்லை. சரி, இப்போது அரசியல் அமைப்புச்சட்டத்தை யார்தான் நினைவில் வைத்திருக்கிறார்கள். சரிதானே?



தாரா கிருஷ்ணசாமி


மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் வர்ஷா நிகாம். இவர், கிராம பகுதிகளில் மக்களுக்கு ஏராளமான சமூக செயல்பாடுகளை செய்து உதவி வருகிறார். ஆனால் இப்படி செய்யும் செயல்களை இன்னும் அதிகமாக செய்யலாம் என தேர்தலில் போட்டியிட கட்சியிடம் வாய்ப்பு கேட்டபோது, வேண்டுகோள் மறுக்கப்பட்டது. காரணம் எளிமையானதுதான். பணம். இன்று தேர்தலில் புழங்கும் அதிகளவு பணத்தை எதிர்கொண்டு பெண்களை நிறுத்தி வெல்வது கடினம் என அரசியல் கட்சிகள் நிறுத்துகின்றனர். இதில், பெண்களுக்கு காட்பாதர்களும் தேவைப்படுகிறார்கள். வர்ஷா, ஃபெம்மே ஃபர்ஸ்ட் அமைப்பில் அரசியல் படிப்பை முடித்துள்ளது அண்மையில்தான். 

வர்ஷா, அவரது கிராம பகுதியில் சானிட்டரி நாப்கின்கள் கிடைக்காமல் மாணவிகள் மாதவிலக்கு வரத்தொடங்கியதும் தர்மசங்கடத்துடன் பள்ளிப்படிப்பை கைவிடுவதை கவனித்தார். இந்த வகையில் 30 சதவீத மாணவிகள் படிப்பை நிறுத்துவதை அறிந்தார். இதனை தடுக்கும் செயல்பாடாக இலவசமாக நாப்கின்களை வழங்கி வருகிறார். எம்எல்ஏ ஆவதுதான் இவரது கனவாக உள்ளது. என்றாவது ஒருநாள் அவரது கனவை அவர் அடைவார் என நம்பலாம். 


வர்ஷா நிகாம், மகாராஷ்டிரா


பீகாரில் சகிரி மகிளா விகாஸ் சன்ஸ்தான் என்ற அமைப்பு, பெண்களுக்கு அரசியல் பயிற்றுவிக்கிறது. இவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் எப்படி பெண்கள் கலந்துகொள்வது, தலைவருக்கான உரிமைகள், எப்படி செயல்படுவது என பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறார்கள். தலைவராக பெண்கள் வென்றாலும் கூட அவர்களின் பெயரில் அவர்களது தந்தை, சகோதரன், கணவன் என உரிமை எடுத்துக்கொண்டு கையெழுத்தைக் கூட போலியாக போட்டுக்கொள்வது நடந்துவருவதை அரசியல் பயிற்சி வழங்கும் அனைத்து தலைவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். 


ஊர்மிளா சிங், சகிரி மகிளா விகாஸ் சன்ஸ்தன்


அதிக தூரமாக வட மாநிலங்களுக்கு கூட செல்லவேண்டாம். கேரளத்தில் உள்ள முன்னாள் கேரள மகிளா காங்கிரஸ் அமைப்பின் தலைவராக இருந்தவர், லலிதா சுபாஷ். இவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டபோது, உடனே தலைமை மறுத்துவிட்டது. தற்போது இவர் கேரள வன மேம்பாட்டு கார்ப்பரேஷனில் தலைவராக உள்ளார். இப்படி மறுக்கப்பட்டபோது அவர் மனநிலை எப்படியிருக்கும்? பெண்கள் அமைப்பின் தலைவராக இருப்பவருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் பிற பெண்களை எப்படி நடத்துவார்கள், பெண்களிடம் என்ன சொல்லி அமைப்பில் உறுப்பினராக சேர்ப்பது என லலிதா சங்கடப்பட்டிருப்பார் அல்லவா?

அதேதான். விஷயம். 

பெண்களை அரசியலில் பங்கெடுக்க விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளை ஆண்கள் செய்கிறார்கள் என்பதே தேர்தல் கல்வி பயிற்றுவிக்கும் பெண் தலைவர்களின் முக்கியமான குற்றச்சாட்டு. அதையும் தாண்டி பெண்கள் வெல்வார்கள். அந்த விடாமுயற்சிதானே அவர்களின் வெற்றிக்கு அடையாளம் தருகிறது. 


 










டைம்ஸ் ஆப் இந்தியா 

கேடகி தேசாய் 

https://www.vibesofindia.com/women-in-power-dreams-of-female-village-sarpanch/

கருத்துகள்