மிருதங்க கைவினைஞர்களின் தாழ்வுணர்ச்சி கொண்ட வாழ்க்கை! - செபாஸ்டியன் குடும்பக்கலை - டிஎம் கிருஷ்ணா தமிழில் அரவிந்தன்

 





செபாஸ்டியன் குடும்பக்கலை - காலச்சுவடு


செபாஸ்டியன் குடும்பக்கலை

டிஎம் கிருஷ்ணா

தமிழில் டிஐ அரவிந்தன்

காலச்சுவடு பதிப்பகம்

195 ரூபாய்


டிஎம் கிருஷ்ணா புகழ்பெற்ற வாய்ப்பாட்டு கலைஞர். கர்நாடக இசை உலகில் பலரும் இவரது பாடல்களை அறிவார்கள். பாடல்களை சபாக்களைக்  கடந்து பாடும் இடங்களும் கிருஷ்ணாவின் புகழ் பரப்பின. சூழலுக்கு ஆதரவான பாடல்களை பாடும் ஆர்வமும் திறனும் கொண்டவர். அவர், மிருதங்க கைவினைஞர்களைப் பற்றி ஆய்வுகள் செய்து, நான்கு ஆண்டுகள் உழைத்து எழுதிய நூல்தான் இது. 

ஆங்கிலத்தில் வெளியான நூலின் தமிழ் வடிவம். நூலின் வெளியீடு மார்ச் 3 அன்று வெளியாகிறது. சென்னை புத்தகத் திருவிழாவில் நூலை வேகமாக அச்சிட்டு கொண்டு வந்திருக்கிறார்கள். நூலின் ஆராய்ச்சி தகவல்கள், ரோஹினி மணியின் ஓவியங்கள், கூறுப்படும் பல்வேறு சாதி பற்றிய ஆய்வுத் தகவல்கள் வாசகர்களை வியக்க வைக்கிறது. 

பறையர்கள் எனும் சாதியினர் சாதிக் கொடுமை தாங்காமல் கிறிஸ்தவர்களாக மாறுகிறார்கள். இவர்கள்தான் மாடு, எருமை, ஆடு ஆகிய விலங்குகளின் தோல்களை வாங்கி மிருதங்கங்களை உருவாக்குகிறார்கள். இதனை வாசிக்கும் பிராமணர்கள், இசைவேளாளர்கள் இதற்கான அங்கீகாரத்தை மிருதங்க கைவினைகளுக்குத் தருவதில்லை. அவர்களும் பிராமணர்கள் சாதி அமைப்பில் உச்சாணிக் கொம்பில் உள்ளனர். நம்மைப் போன்றவர்களை வீட்டின் அழைத்து சோறு போடுவதே தம்புரான் புண்ணியம் என நெகிழ்ந்து போய் வேலை செய்கிறார்கள். இப்படி வேலை செய்வது வரையில் மட்டுமே மிருதங்க கலைஞர்கள் அக்கறையாக நடந்துகொள்கிறார்கள். அடுத்த தலைமுறையையும் இப்படி மிருதங்க கைவினைஞர்களாக மாற்றி முயலும் முயற்சி பற்றியும் எழுத்தாளர் டிஎம் கிருஷ்ணா பேசியுள்ளார். 

நூலின் தொடக்கமே நங்கநல்லூரில் உள்ள மிருதங்க கைவினைஞர்களைத் தேடிப்போவதாக அமைந்துள்ளது. இப்படி பயணத்தின் வழியாக அவர், மெல்ல அவர்களின் வாழ்க்கையையும் இவர்களை வேறுவழியின்றி சகித்துக்கொள்ளும் பாலக்காடு மணி அய்யர், இசை வேளாளரான பழனி சுப்பிரமணியம் பிள்ளை, உமையாள்புரம் சிவராமன், கிருஷ்ணமூர்த்தி, டி.வி. கோபாலகிருஷ்ணன், முருகபூபதி என பல்வேறு மிருதங்க கலைஞர்களின் வாழ்க்கையையும் இணைத்து பேசுகிறார். 

தனக்கு கீழே ஒருவர் இருந்தால்தான், தான் மேலே இருக்க முடியும் என்ற கருத்து, பிராமண கலைஞர்கள் அனைவரது பேச்சிலும் தெரிவது முக்கியமானது. இந்த வகையில் உமையாள்புரம் சிவராமன் பேச்சு அதிர்ச்சி அளிக்க கூடியது. குறிப்பாக, இவர் மிருதங்க கைவினைஞர்களை தலித் கிறிஸ்தவர்கள் என்று அழுத்தி சொல்லும் இடம். இதுபற்றி நிறைய கலைஞர்கள் பேசுவது அவர்களின் மனநிலையைத் துல்லியமாக காட்டுகிறது. 

செபாஸ்டியன் குடும்பத்தைச் சேர்ந்த செல்வராஜ், பர்லாந்து, அந்தோணி ஆகியோர்தான் இன்றுவரையிலும் சென்னையில் உள்ள மிருதங்க கைவினைஞர்களுக்கு ஆதர்சம். தற்போது சென்னையில் அந்தோணியின் குடும்பம் கோலோச்சுகிறது. வேறு ஆட்கள் இத்தொழிலை செய்தாலும் கூட நேர்த்தி கைகூடியது. மேலே சொன்ன மூவருக்குத்தான். 

மிருதங்க கைவினைஞர்களின் வாழ்க்கையை அன்று தொடங்கி இன்றுவரை எப்படி இருக்கிறார்கள், அவர்களின் தொழில் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று ஆவணப்படுத்தியிருப்பது முக்கியமானது. இதுபோல ஒரு ஆய்வை கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் செய்வது ஆச்சரியமானது. இதனை கேரளத்தில் உள்ள மிருதங்க கைவினைஞரான காசுமணி நேரடியாகவே கேட்டுவிட்டு நம்பிக்கை கொண்டு பிறகுதான் முக்கியமான தகவல்களை சொல்லுகிறார். 

மிருதங்க கைவினைஞர்களின் வாழ்க்கை, சாதிமுறை, தற்போதையை வாழ்நிலை பற்றி பேசுவதோடு மிருதங்கத்தை எப்படி செய்கிறார்கள் என்பதை சென்னை நகரை மையமாக வைத்து தீர்க்கமாக சொல்லியிருக்கிறார் கிருஷ்ணா. இதன் செய்முறை கடுமையான உடல் உழைப்பை உள்ளடக்கியது. இதனால் அதனை செய்து சோதித்து பார்ப்பவர்கள், கை கரடுமுரடாகிவிடுகிறது. இதன் காரணமாகவே அவர்கள் மிருதங்கத்தை இசைக்கும் திறனை இழந்துவிடுகிறார்கள். கூடவே கற்றாலும் அரங்கேற்றத்திற்கு சாதி தடையாக நிற்பதையும் கிருஷ்ணா, சொல்லவேண்டிய இடங்களில் சரியாக சொல்லி வருகிறார். 

மிருதங்க கைவினைஞர்கள் பற்றி பலரும் கண்டுகொள்வதில்லை. மிருதங்க கலைஞர்களின் கைவண்ணத்தால்தான் அதற்கு பெருமை கிடைக்கிறது என கூறுகிறார்கள். தோல் நாதம், கை நாதம், மர நாதம் என மூன்று விஷயங்களை மிருதங்க கைவினைஞர் ஒருவர் சொல்லுகிறார். ஆனால் தங்களது உழைப்பை அவர்கள் குறைத்து மதிப்பிடுவதை டிஎம் கிருஷ்ணா சிறப்பாக உள்வாங்கி எழுதியிருக்கிறார். இந்நூலை எழுதுவதில் தனக்கு  இருந்த சாதி சார்ந்த அனுகூலங்களையும் எழுத்தாளர் கிருஷ்ணா கூறியது முக்கியமான கூற்று. 

நூலில் இருநூறு பக்கங்களுக்கு மேல் தாண்டியபிறகு, ஒரு பக்கத்தில் ஒரே பாரா  திரும்பத் திரும்ப வருகிறது. கிட்டங்கல் --- கட்டங்கல் என மாறுகிறது. என சில தவறுகள் வருகின்றன. மற்றபடி நூல் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு உருவாகியுள்ளது. 





கருத்துகள்