ஆங்கிலேயரிடம் மாட்டிய சென்னை!





Image result for chennai old photos


சென்னை சீக்ரெட்ஸ்! -பிகே

ஆங்கிலேயரிடம் மாட்டிய சென்னை!

ஆங்கிலேயர்களும், டச்சுக்காரர்களைப் போல இந்தோனேஷியா பக்கமே சென்றனர். தாங்கள் கொண்டு வந்திருந்த துணிகள், தகரம், ஈயம், கண்ணாடி, தட்டுகள் போன்றவற்றை இறக்குமதி செய்துவிட்டு மிளகு உள்ளிட்ட மசாலா ஐட்டங்களையும் நறுமணப் பொருட்களையும் ஏற்றுமதி செய்தனர்.

அப்போது இந்தியாவின் காலிகோ துணிகளுக்கு கிராக்கி இருப்பது தெரியவர, சூரத் நகருக்கு முதன்முதலாக வந்து சேர்ந்தனர். இங்கிலாந்தில் வசதியானவர்கள் சில்க் மற்றும் லினன் துணிகளை அணிந்தனர். ஆனால், ஏழைகளின் துணி பருத்திதான். அவை அதிகம் கிடைக்கும் பகுதி தென்னிந்தியா என்பதும் ஆங்கிலேயர்களை இந்தியாவுக்கு வரவழைத்தது.

கோரமண்டல் கடற்கரையிலிருந்த மசூலிப்பட்டிணத்தில் கோல்கொண்டா சுல்தானின் ஆதரவுடன் ஆங்கிலேயர்கள் முதன்முதலாக வியாபாரத்தை தொடங்கினர். போட்டியாளர்களான டச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் அருகில் இருக்க, ஆங்கிலேயர்களால் வியாபாரத்தில் டாப்பாக வரமுடியவில்லை.

பிறகு, மசூலிப்பட்டிணத்திலிருந்து சற்று உள்ளே தள்ளியிருந்த ஆர்மகான்என்ற இடத்தில் கம்பெனியும், கோட்டையும் நிர்மாணித்தனர். ஆர்மகானின் தலைவரும், கம்பெனியின் ஏஜென்டுமான பிரான்சிஸ் டே, வணிகத்திற்கு ஏற்ற இடம் தேடி தெற்கில் கடலையொட்டி கண்டறிந்த பெரிய மணல்திட்டுதான் இன்றைய தலைமைச் செயலகம். அதைச் சுற்றி உருவானதே மெட்ராஸ் () சென்னை!.