மிளகைத் தேடி!









சென்னை சீக்ரெட்ஸ்!-பிகே

மிளகைத் தேடி

ஆகஸ்ட் 22ம் தேதி, ஆண்டுதோறும் சென்னையின் பிறந்த தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏன் தெரியுமா? இதேநாளில்தான் 1639ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மதராசப்பட்டிணத்தில் இடம் வாங்கி புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினர். ஆங்கிலேயரின் கடவுள் புனித ஜார்ஜின் கையிலுள்ள சிலுவைச் சின்னமே இங்கிலாந்தின் கொடி.

  சரி. ஆங்கிலேயர்கள் எதற்காக இங்கே வந்தனர்?
மிளகுக்காகவும், பருத்தித் துணிகளுக்காகவும். 15ம் நூற்றாண்டில் ஐரோப்பிய வணிகத்தில் மாபெரும் புரட்சி நிகழ்ந்தது. போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல் வழியைக் கண்டறிய போர்த்துகீசியர்கள் வணிகத்தில் கிடுகிடுவென முன்னேறினர். இதை அறிந்த டச்சுக்காரர்கள் கிழக்கிந்தியாவுக்குச் செல்ல கப்பல் பூட்டினர். இந்தியாவில் போர்த்துகீசியர்கள் இருந்ததால் டச்சுக்காரர்கள் இந்தோனேஷியா தீவுக்கூட்டங்களுக்கு நகர்ந்தனர். அங்கிருந்து ஏலக்காய், சாதிக்காய், இலங்கம், மிளகு போன்றவற்றை ஏற்றுமதி செய்து வணிகத்தில் வெற்றிக்கொடி கட்டினர். ஐரோப்பிய மார்க்கெட்டில் டச்சு வணிகர்கள் மிளகின் விலையை இஷ்டத்திற்கு உயர்த்தி விற்க, விலை கட்டுபடியாகாத பிரிட்டிஷ் வணிகர்கள், மேப்பில் இந்தியாவை கழுகு பார்வை பார்த்தனர்.