சிங்கிள்ஷாட்டில் முழுசினிமா!


சிங்கிள் ஷாட் சினிமா - ச.அன்பரசு




Image result for bimba movie



சினிமாவில் கதை யோசித்து திரைக்கதை எழுதி படமாக்க எவ்வளவு நாட்கள் தேவைப்படும்? சராசரியாக மூன்று மாதங்கள் தேவை. ரைட்! அண்மையில் கன்னடத்தில் உருவாகியுள்ள பிம்பா என்ற படம் 90 நிமிடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரே லொக்கேஷனில் ஒரு நடிகரை மட்டுமே வைத்து 90 நிமிடங்களில் ஒரே ஷாட்டில் படம் தொடங்கி நிறைவடைகிறது என்பது சொல்ல ஈஸி என்றாலும் சாத்தியப்படுத்துவது எளிதான காரியமல்ல. இருபதாம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் வாழ்ந்த இலக்கிய ஆளுமையான கவிஞர் சாம்சாவின்(சாமி வெங்கடாத்ரி ஐயர்) வாழ்வை கூறும் கதையே பிம்பா.  

சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்று போலீசாரால் கைதுசெய்யப்பட்ட கவிஞர் சாம்சா, கடுமையான சித்திரவதைகளால் மனம் பிறழ்ந்தார். போலீஸ் தன்னை மீண்டும் கைது செய்துவிடும் என அஞ்சியே வாழ்ந்தவர் ஐந்தாவது முறை செய்த தற்கொலை முயற்சிக்கு பலியானார். “பதினைந்துக்கு பதினைந்து அடி அறையில் 90 நிமிடங்களுக்குள் படத்தைக் கொண்டுவர ரிகர்சல் செய்து படம்பிடித்தோம்.” என்று பேசுகிறார் துணை இயக்குநர், தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசன் பிரபு. பிம்பா படத்தில்  சாம்சாவாக உயிரோட்டமாக நடித்துள்ள ஸ்ரீனிவாசன் பிரபு 2013 ஆம் ஆண்டு பிம்பா பட இயக்குநர் மூர்த்தியின் கைவண்ணத்தில் கன்னட எழுத்தாளர் சாம்சாவாக நாடக அரங்கில் மாறி நடித்த அனுபவம் படத்திலும் நடிக்க உதவியுள்ளது.  

முதல்முறை படம்பிடித்தபோது நூற்றுபத்து நிமிடங்கள் படமாகியும், இரண்டாம் முறை கேமரா சூடாகி கடைசி 20 நிமிடங்கள் திரும்ப நடிக்கவேண்டிய சங்கடங்கள் வந்தாலும் தன் முயற்சியில் மனம் தளராத மூர்த்தி -– ஸ்ரீனிவாசன் பிரபு பிம்பா படத்தை துல்லிய நேர்த்தியில் தொகுப்பாக்கி உருவாக்கியுள்ளனர். “படம்பிடித்த இருநாட்களிலும் பெரும்பாலான நேரங்களில் கேமராவை தோளில் வைத்து படமாக்கியதில் கைகளை இருநாட்களை அசைக்கமுடியாமல் வலி பின்னியது” என படத்தின் ரஷ் பார்த்தபடி பேசுகிறார் கேமராமேன் பி.கே.ஹெச்.தாஸ். படத்தின் தனித்தன்மையைக் காட்ட ஒரே ஒரு இசைக்கருவியாக புல்லாங்குழலை மட்டுமே பயன்படுத்தியுள்ளார் இந்துஸ்தானி இசைக்கலைஞர் பிரவீன் காதிந்தி.

சினிமா கிளப் மற்றும் திரைப்பட விழாக்களுக்கு பிம்பா படத்தை திரையிட சப்-டைட்டில் தயாரிக்கும் பணியில் பிம்பா திரைப்படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறது. இப்பணிகளுக்கு பின்னர் வணிகரீதியாக படத்தை வெளியிடும் முயற்சி தொடங்கும் என்கிறது படத்தயாரிப்புக்குழு.