அறிவியலுக்கும் எட்டாத விஷயங்கள்



Laughter: Still a scientific mystery



அறிவியலுக்கும் எட்டாத விஷயங்கள்!

கண்ணீர்

பொதுவாக கண்ணீர் எதற்கு வருகிறது? காதலி பிரிந்துபோனால், வேலையிலிருந்து துரத்தினால், நாம் தின்றுகொண்டிருக்க பானிபூரியை நண்பன் பிடிங்கித் தின்றால், ஆஃபரில் வாங்கிய துணி ஆறே மாதத்தில் கிழிந்தால் என நாம் அழ நிறைய காரணங்கள் உண்டு. ஆனால் அறிவியலில் கண்ணீர் என்பதற்கு கெமிக்கல் கலவை என கண்ணீரை ஆராய்கிறார்களே தவிர கண்ணீருக்கான காரணத்தை முழுமையாக ஆராய முடியவில்லை. கண்களுக்கு நல்லது, மனதை அழுத்தத்திலிருந்து காப்பாற்றுகிறது என எழுதி ஆராய்ச்சிக்கட்டுரைகளை பறக்கவிட்டாலும் எவையும் நிரூபணமாகவில்லை.

விக்கல்

ப்ரெண்டு திட்டுறான், அம்மா கரிச்சு கொட்டுறா, பக்கத்து வீட்டுக்காரன் பொறாமை என ஆயிரம் காரணம் சொன்னாலும் விக்கல் எதற்கு? ஏன் வருகிறது? எப்படி குணமாக்குவது என்றால் அறிவியல் உலகம் அமைதியாக பார்த்தபடி அடுத்த கேள்விக்கு நகர்ந்துவிடுகிறது. பதில் தெரிந்தால்தானே சொல்லுவதற்கு?

கைமருத்துவமாக சர்க்கரையை தின்பது, அதிர்ச்சி செய்து விக்கலை திருத்துவது, லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பது என பல விஷயங்களை முயற்சித்து விக்கலை சரி செய்கிறது உலகம்.


அனஸ்தீசியா

மூளைக்கு வலி உணர்வை கடத்தும் நரம்பு செல்களை அனஸ்தீசியா மட்டுப்படுத்துவது உண்மை. ஆனால் எப்படி என்பது அனஸ்தீசியாவை நமக்கு கொடுக்கும் மருத்துவருக்கே தெரியாது. ஒருவருக்கு எவ்வளவு அனஸ்தீசியா கொடுப்பது என்பதும் குத்துமதிப்பாகவே உள்ளது.

வலி நிவாரணிகள்

ஆஸ்பிரின், இபுபுரோஃபேன் எப்படி உடலின் வலியை கட்டுப்படுத்துகிறது என்பது கம்பெனிக்கே தெரியாத ரகசியம். முதுகெலும்பிலுள்ள நரம்பு செல்களை கட்டுப்படுத்தி வலியை குறைக்கிறது என விளக்கம் தந்தாலும் எப்படி என்றால் டாக்டர்கள் முழிப்பது பேய்முழி.