மனமறிய ஆவல்! - கடிதங்கள்- துயரம் துரத்துதே ஏன்?




Unhappy, Man, Mask, Sad, Face, Sitting, Depressed
pixabay



முன்னமே கூறினேனே திடீரென எழுதும்போது உணர்ச்சிகளைக் கொட்டிவிட்டு வெறுமனே காலியாக உட்கார்ந்திருப்பது என் வழக்கமென. வின்சென்ட் கூட திட்டுவான். இப்படி சட்டென உணர்ச்சி வசப்படுவது சரியல்லவென. என்ன செய்வது என் இயல்பு அப்படி ஆகிவிட்டது.

ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பது போல திடீரென காலங்களில் பின்னால் கடிகாரத்தை திருப்பி வைத்துச் சென்றபோது கடும் விரக்தி ஏற்பட்டது. அந்தநேரத்தில் அஞ்சல் அட்டை கையில் கிடைத்தது துரதிர்ஷ்டம். உடனே எழுதி அப்போதே முருகானந்தம் அவர்களுக்கு அனுப்பிவிட்டேன். இன்று படித்தால் உண்மையில் ஏன் இப்படி எழுதினேன். என்ன பிரச்னை என எனக்கே புரியவில்லை.இப்படி நெருங்கிய நண்பர்களுக்கு எழுதி பின்னர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். நட்பில் அதெல்லாம் சாதாரணமப்பா என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.  சரி, எழுதியதை மறைக்க முடியாது. படியுங்கள்.






3

1.3.2013

அன்பு சகோதரருக்கு, வணக்கம்.

நலமாக இருக்கிறீர்களா? உங்கள் நான் என்றும் உடன்பிறவாத சகோதரராகவே பாவிக்கிறேன். இனிமேலும் அப்படித்தான். தங்களது அறிவிற்கும் சிந்தனைக்கும் கி.மீ. தூரத்திலுள்ள என்னோடு உரையாடினீர்கள். தங்களது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டது எனக்கு பெரும் மகிழ்ச்சி. முன்னர் கடிதங்களையும் எழுதினீர்கள். வாய்ப்பு கிடைக்கும்போது நேரிலும் சந்தித்து பேசினீர்கள்.

நான் உண்மையில் பேறு பெற்றவன். இல்லையென்றால் உங்களைச் சந்தித்து இந்த விஷயங்களைப் பெற்றிருக்க மாட்டேன். இன்றுவரையிலும் நீங்கள் பரிந்துரைக்கும் நூல்கள் எனக்கு பல்வேறு விஷயங்களிலும் உதவுகின்றன. காந்தி மட்டுமல்ல, சங்கப்பாடல்கள் வரை தங்களது அறிவும் ரசனையும் ஒவ்வொரு முறையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது.

சிலப்பதிகாரப் பாடல்களை தாராபுர சாலைகளில் பைக்கில் செல்லும்போது நீங்கள் சொன்னது என்னால் மறக்கமுடியாத ஒன்று. உங்களையும் உயர்த்திக்கொண்டதோடு, உங்கள் அறிவிற்கு இணையாக நினைத்து நிறைய செய்திகளைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
தங்களது பணிகளுக்கிடையே இனி நான் தலையிட விரும்பவில்லை. தங்களது பணிகளுக்கிடையே எனக்கு எழுதிய கடிதங்கள் பெரும் மகிழ்ச்சி அளித்தன. நன்றி.

எந்த புதிய நூலைப் பார்க்கும்போதும் எனக்கு உங்கள் நினைவு வராமல் போகாது. நன்றி முருகு அண்ணா.

சந்திப்போம்.
ச.அன்பரசு.

?