அகதிகளின் உரிமைக்காக போராடிய மனிதர்! - பேயார்ட் ரஷ்டின்







பேயார்ட் ரஷ்டின்

அமெரிக்காவில் 1912 ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்க சமூகத்தில் மனித உரிமைகள், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான உரிமைகள் பற்றி பேசிய ஆளுமை இவர். அமெரிக்க அதிபரின் விருதைப் பெற்ற சாதனையாளரும் கூட.

1941 ஆம் ஆண்டு வாஷிங்டன் மூவ்மெண்ட் எனும் இயக்கத்தைத் தொடங்கினார். மார்ட்டின் லூதர் கிங்குடன் இணைந்து செயல்பட்டு, அகிம்சை, கருப்பினத்தவர்களுக்கான இனவேற்றுமை, வேலைவாய்ப்பு பாகுபாடு ஆகியவற்றைத் தீவிரமாக எதிர்த்தார். பென்சில்வேனியாவில் பிறந்து நியூயார்க் நகரில் இறந்த ரஷ்டின், அதுவரையிலும் மனித உரிமைகள், அகதிகளுக்கான உதவிகள் என உழைத்துக்கொண்டே இருந்தார். வியட்நாம், கம்போடியாவிலிருந்து வந்த அகதிகள், ஹைதி அகதிகள் என உழைத்த சமயத்தில்தான் உலகிலிருந்து விடைபெறும் அழைப்பும் வந்தது.


பென்சில்வேனியாவின் வெஸ்ட் செஸ்டரில் பிறந்த ரஷ்டினை வளர்த்த பொறுப்பு அவரின் தாத்தா - பாட்டியைச் சேரும். ஜூலியா ஜெனிஃபர் ரஷ்டின் தம்பதிக்கு பனிரெண்டு பிள்ளைகளில் ஒன்பதாவது பிள்ளை பேயார்ட் ரஷ்டின். அவரின் குடும்பம் உணவகம் வைத்திருந்தனர். வருமானம் வர நல்ல பெரிய வீட்டில்தான் ரஷ்டின் வளர்ந்தார். அவரின் பெற்றோர் க்வாக்கர் எனும் கிறிஸ்தவ குழுவில் இருந்தனர். இதனால், சிறுவயதிலேயே கருப்பினருக்கு எதிரான பாகுபாட்டை எதிர்க்கும் சிந்தனை அவருக்கு தேவாலயத்தில் ஊட்டப்பட்டது.

அதே தைரியம் அவரது ஆளுமையையும் செறிவூட்டியது. இதனால் தனது பாலினத்தேர்வு பற்றி பாட்டியிடம் நேரடியாக கூறிவிட்டார்.  அவர் அதனை பெரிதாக ஆட்சேபிக்கவில்லை. அதுதான் உனக்கு பிடித்திருக்கிறதா? என்ற கேள்வி மட்டும்தான் கேட்டார். தனக்கு ஆண் நண்பர்களே வாழ்க்கைக்கும் போதுமானவர்கள் என பேயார்ட் ரஷ்டின் முடிவெடுத்தே விட்டார்.

கருப்பினத்தவரின் வில்பர்ஃபோர்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தார். எங்கு சென்றாலும் அங்கு நடக்கும் உரிமை மீறல்களை ரஷ்டினால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. இவரின் மனதில் ஏ.பிலிப் ராண்டோல்ஃப் கருத்துகளும், க்வாக்கர் குழுவின் பசிஃபிஸமும், காந்தியின் அகிம்சை போராட்ட கருத்துக்களும் நிறைந்திருந்தன. வாழ்நாள் முழுக்க இவ்வழியில்தான் ரஷ்டின் நடந்து சென்றார். பல்கலையில் ஸ்ட்ரைக் நடத்துவதற்கு தலைமை தாங்கியதால் அங்கிருந்து வெளியேற்றப்பட, கவலையின்றி பென்சில்வேனியாவில் இயங்கிய செய்னெய் கல்லூரியில் சேர்ந்துவிட்டார். தனது போராட்ட செயல்பாடுகளை விட்ட இடத்திலிருந்து தொடங்கினார்.

1941 தொடங்கி 53 வரை கருப்பினத்தவரின் அடிமைத்தனம் நீக்க பல்வேறு பேரணிகள்,போராட்டங்களை அறிவித்து இயங்கினார். காந்தியின் அகிம்சை போராட்டம் அவரை இக்காலகட்டத்தில் ஈர்க்க, அதனைப் பற்றி அறிய இந்தியாவுக்கும் வந்துள்ளார் ரஷ்டின், 1948 ஆம் ஆண்டு காந்தி, இந்து அமைப்பால் சுடப்படும் முன்னரே அவரைச் சந்தித்து பேசினார். பின்னர், கானா, நைஜீரியா சென்று அங்குள்ள அகிம்சை இயக்க தலைவர்களிடம் உரையாடி தகவல்களை சேகரித்தார்.

அரசியலைப் பொறுத்தவரை கருப்பு தேசியவாதம் என்பதை உருவாக்கி தீவிரப்படுத்தினார். அதன் வழியே கருப்பர் என்ற இழிவை நீக்கி சமூகத்தை மாற்ற முடியும் என நம்பினார். போகும் இடங்களில் துரோகி, ஓரினச்சேர்க்கையாளர் என்ற வசவுகள் கேட்டாலும் மனித உரிமைகளுக்காக தன்னலமற்று போராடினார். குடலிறக்க பிரச்னையால் மரணத்தை தழுவியவரை நியூயார்க் டைம்ஸ், ஜனநாயக உரிமைகள், அகிம்சை ஆகிய கொள்கைகளுக்காக போராடிய மனிதர் என்று எழுதி அஞ்சலி செலுத்தியது. அப்போது ஆட்சியில் இருந்த ரீகன், மனித உரிமைகளை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தவர் என புகழஞ்சலி செய்தார்.

ஆங்கில மூலம் - அவுட்.காம்

தமிழில்: வின்சென்ட் காபோ