வான் ஒளியும் மண் இருளும் கொண்ட நூல் ! யாத்ரீகனின் பாதை - வினோத் பாலுச்சாமி- ஒளிப்பட பயணக்கதை

 

 

 

பழங்குடி இனச்சிறுவன் புகைப்படம்- வினோத்

 

 

 

 

 

யாத்ரீகனின் பாதை

வினோத் பாலுச்சாமி

ப. 150 விலை ரூ. 500


மதுரை காரியாப்பட்டியைச் சேர்ந்தவர் வினோத். விகடனின் மாணவர் பத்திரிக்கையாளராக  செயல்பட்டவர். தற்போது திருவண்ணாமலையில் வாழ்கிறார். அவர் எழுதியுள்ள நூல்தான் யாத்ரீகனின் பாதை.

அவர் தேர்ந்த எழுத்தாளர் அல்ல என்பதை ஆசிரியர் உரையில் நிரூபித்துவிட்டார். எனவே அவர் தனது மன உணர்வுகளை எந்தளவு வெளிப்படுத்தியுள்ளார் என்பதை மட்டுமே பார்த்து இந்த நூலை பார்த்து படித்து ரசிக்கலாம். 

தனது ஆதர்ச வழிகாட்டி பீட்டர் ஜெயராஜ் உடன் (தொப்பி அணிந்தவர்)



ஏறத்தாழ இதில் எழுதியுள்ள புகைப்படம் அருகிலுள்ள எழுத்துகள் யாவுமே நமக்கு டைரிக்குறிப்புகள் போலத்தான் படுகிறது. இதன் அர்த்தம், அவை அதே தரத்தில் உள்ளன என்பதல்ல. சுய அனுபவத் தொனியில் எழுதப்பட்டாலும், புகைப்படத்தின் உணர்வுகளை வாசிப்பவர்களின் மனத்திற்கு கடத்துவதில் நூல் மகத்தான வெற்றி கண்டிருக்கிறது.

சில அத்தியாயங்களில் நாம் மனதில் நினைத்து்க்கொள்ள பல வாக்கியங்கள் உள்ளன. அறிமுகமில்லாமல் ரபீந்திரனை சந்திக்கச்செல்வது, அச்சூழ்நிலையில் எளிதாக மனிதர்கள் பிற மனிதர்களை நம்புகிறார்கள் என்று எழுதியுள்ள வார்த்தை. கிராமத்தை இரவில் சென்று பார்க்கவேண்டு்ம் என்று கூறுவது.மனிதர்கள் கைகளை நீட்டி உதவ காத்திருக்கிறார்கள் என்ற வாக்கியம். பழங்குடி கிராமத்தில் வரும் மின்சாரம் பற்றி வர்ண்ணனை, ரயில் பற்றி கவித்துவமான மனவோட்டம், எளிமை பற்றி கூறப்ப்டும் இடம். இந்த இடத்தில் பழங்குடி மக்கள் ஆசிரியருக்கு உணவு தருகிறார்கள். அதை சாப்பிடும்போது அவர் தனது உணவு பற்றி நினைத்துப்பார்க்கும் இடம் என ரசித்துப்படிக்கலாம். 

மேற்சொன்னவை சில மாதிரிகள்தான். நூல் முழுக்க படித்தால் உண்மையில் இந்தியா முழுக்க குறுக்கும் நெடுக்கும் அலைந்த அனுபவமும்  அயர்வும் உங்களுக்கு வந்து சேரும்.

இந்த தருணத்தில் நூலை நம்மோடு இணைத்துப் பார்க்க வேதாந்தா நிறுவனம் இருக்கிறது. மக்களின் போராட்டம் அப்படியே தொடர்கிறது. என்ன மத்திய அரசு, மக்களுக்காக போராடிய நிறுவனங்கள் செயல்படமுடியாதபடி நிதியை தடை செய்துவிட்டது. பல்வேறு புகார்களை அடுக்கி போராட்டக்காரர்களை சிறையில் தள்ளிவிட்டது. அல்லது மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வழக்குகளை தொடர்ந்து வருகிறது என எதுவுமே இந்தியாவில் மாறவில்லை. போராட்டங்கள்  அதிகரித்துள்ளன என்பது நாம் அறிந்து மகிழ்வதற்கான செய்தி.

வினோத் பாலுச்சாமி எழுதியது பாதி என்றால் அவர் எடுத்த ஒளிப்படங்கள் மீதி விஷயங்களை பேசுகின்றன. எனவே அனுபவப் பகிர்வு என்பதால் அதனை சிறப்பாகவே வாசகருக்கு கடத்தியிருக்கிறார்.

யாத்ரீகன் எப்படி உலகை, மக்களை, காடுகளை, பறவைகளை, விலங்குகளை வெறுக்க முடியும்? நீங்கள் இந்த நூலை படித்தால் உங்கள் மனதிலும் இயற்கை மீதான, மனிதர்கள் மீதான நேசம் பெருகும் என்பது உண்மை.

வான் ஒளியும் மண் இருள் கொண்ட நூல்

கோமாளிமேடை டீம் 

மேலும் புகைப்படங்கள், வினோத் பாலுச்சாமி எழுதியவற்றை வாசிக்க அவரது வலைத்தளத்தை நாடுங்கள்.

vinodh website

http://yaastudio.in/
 
 



 

கருத்துகள்