அன்பின் ஈரம் குறையாத சிறுகதைகள்! - நாபிக்கமலம் - வண்ணதாசன்

 

 

 

 

வண்ணதாசன்... காலத்தின் தடங்களை சொல் வண்ணங்களால் குழைத்த ஓவியன்! # ...

 

 

நாபிக்கமலம்


வண்ணதாசன்


இந்த தொகுப்பில் மொத்தம் பதிமூன்று கதைகள் உள்ளன. இதில் வண்ணதாசன் கதைகளில் இல்லாத சிறப்பு என்னவென்றால், இதில் இடம்பெறும் பாத்திரங்கள் முன்னர் தங்களுக்கு ஏற்பட்ட நிலைகளுக்கு யாரையும் குறை சொல்லமாட்டார்கள். ஆனால் இத்தொகுப்பில் உள்ள கதைகளில் மனிதர்கள் தங்களுக்கு பிடித்ததைப் போலவே பிடிக்காத விஷயங்களையும் பகிர்கிறார்கள்.


அடுத்தவர்களுக்கு அது புரிகிறதோ இல்லையோ தங்கள் மனதிலுள்ளதை வெளிப்படுத்த நினைக்கிறார்கள். ஒருவரின் உலகில் ஒருவர் மட்டுமே இருந்தால் போதுமா என நாபிக்கமலத்தில் சங்கரபாதம் கேட்கும் கேள்வி முக்கியமானது. அவரது மனைவி அவரின் தோழிகளின் மீதும், அவர் மீதும சந்தேகப்படுவதால் அவரது வாழ்க்கை நரகமாகிறது அதனை அவர் எங்கும் வெளிப்படுத்த முடியவில்லை என்றாலும் அவரது வாழ்க்கை சுதந்திரமானதாக இல்லை. வருத்தம் தொய்ந்ததாக மாறுகிறது.


காசிராஜன், தாயம்மளா, அகஸ்திய அத்தை, தனுஷ்கோடி அண்ணன், பிரேமா, சரவணன் என பல்வேறு கதாபாத்திரங்கள் உறவுகளுக்கு ஏங்குபவர்களாகவும், ஒருவரின் கரம் பற்றி பேசுவதில் தங்கள் ஆன்மாவை மறக்கிறவர்களாகவும் உள்ளனர்.


வண்ணதாசன் சிறுகதைகள் மென்மையானவை என்று கூறப்படுவதுண்டு.. மென்மையான மொழியிலும் வலிமையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எழுத்துகள் இத்தொகுப்பின் பெரும்பலம்.


ஒருவர் மீது மற்றொருவர் கொள்ளும் பிரியத்தை கதைகளில் எந்த பாத்திரங்களும் மறைப்பதில்லை. வெயில் போல , காற்றுபோல அதுவும் இயல்பாகவே இருக்கிறது. கதைகளை படிப்பதில் பெரும் ஆர்வம் தரும் விஷயம் கூட இதுவேதான். வயதாகும்போது, பொறுப்புகள் கூடும்போதும் இதுபோல பிரியமான மனிதர்களை எப்படி கையாள்கிறார்கள் என்பது படிக்கும்போது நன்றாக இருக்கிறது. மொத்தமுள்ள அனைத்து கதைகளுமே வாசிக்க சிறப்பாக உள்ளன. வெறும் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாது, வீடுகளிலுள்ள செடி கொடிகளும் கூட பாத்திரங்களோ என தோன்றும்படி அழகாக எழுதியுள்ளார் வண்ணதாசன்.


உலகம் அன்பால் ஆனது என உணர வைக்கிற சிறுகதைத் தொகுப்பு


கோமாளிமேடை டீம்.




கருத்துகள்