வீட்டுப்பூனைகளால் காட்டுயிர்கள் அழிந்து வரும் அவலம்!- மேற்கு நாடுகளில் மக்களுக்கும் சூழலியலாளர்களுக்கும் வலுக்கும் மோதல்!

 

 

 

 

 Cat, Pet, Animal, Tabby Cat, Domestic Cat, Feline

 

 


காட்டு விலங்குகளை அழிக்கும் வீட்டுப்பூனைகள்!


நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தில் பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஆரி ட்ரோபோர்ஸ்ட். இவர், அண்மையில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் காட்டில் உள்ள சிறுவிலங்குகளை வேட்டையாடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதுவரை ஓநாய்களின் அழிவு, விலங்குகளை வேட்டையாடுவதற்கு அரசு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையாண்டவர் ட்ரோபோர்ஸ்ட். ஆனால் அதைவிட பூனைகளைப் பற்றி இவர் எழுதிய ஆய்வறிக்கைக்கு கொலைமிரட்டல்களை சந்தித்து வருகிறார்.


ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பூனைகளை வளர்ப்பவர்களும், சூழலியலாளர்களு்ம இதுதொடர்பாக தீவிரமாக மோதி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் பூனைகள் வேட்டையாடுவதை அனுமதிக்கும் சட்டத்தை மாற்றவேண்டி சூழலியாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் வீட்டுப்பூனைகளால் 630 கோடி சிறு காட்டு விலங்குகளும், 130 கோடி பறவைகள் பலியாகியுள்ளன என்பதை ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. நெதர்லாந்தில் செய்த ஆய்வில் இதைப்போல இருமடங்கு காட்டு உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.


பூனைகளின் இயல்பான வேட்டையாடும் குணத்தை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அதனால் காடுகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து இப்போதுதான் உலகிற்கு தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் பறவைகளை பாதுகாக்கும் ராயல்சொசைட்டி அமைப்பு, பலவீனமான, நோயுற்ற பறவைகளை பூனைகள் குறிவைத்து வேட்டையாடுவதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று கூறியுள்ளது. இதற்கு தீர்வாக நியூசிலாந்து நாட்டின் வன உயிரின பாதுகாப்பு அமைச்சகத்தின் எடித் மெக்னால்டுடன், கலிபோர்னியான பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் வேய்ன் லிங்க்லேட்டர் பணிபுரிந்துவருகிறார். இவர்கள், பூனைகளை எதிர்ப்பவர்களுக்கு அணுகி பல்வேறு பரிந்துரைகளை கேட்டனர். அவர்கள், வீட்டுக்குள்ளேயே பூனைகளை வளர்ப்பது, உடலில் மைக்ரோசிப் பொருத்துவது, வனத்திற்குள் செல்லமுடியாதபடி கம்பிவேலி அமைப்பது ஆகியவற்றை குறிப்பிட்டனர். பூனைகளை வளர்ப்பவர்கள் மேற்கூறியவற்றுக்கு எதிரானவற்றை தங்கள் விருப்பமாக அமைச்சகத்திடம் தெரிவித்தனர்.


இதில் பூனைகளை காட்டுயிர்களுக்கு பாதிப்பு இல்லாமல் வளர்க்க அமைச்சகத்திடம் ஒப்புதல் தெரிவித்தவர்களின் அளவு 14 சதவீதம் மட்டும்தான். எனவே அரசு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தது. இதற்காக ''இரவில் செல்லப்பூனையை என் படுக்கையில் படுக்கவைக்கிறேன். வெளியில் விடுவதில்லை'’ என்று சிறுமி கூறுவது போன்ற உரையாடல் கொண்ட நோட்டீஸ்களை பிரசுரித்து விநியோகித்தனர். இரண்டாவதாக உருவாக்கிய நோட்டீசில் ''இரவில் வெளியே வரும் பூனைகளுக்கு கார்களால் ஆபத்து. அதனை பாதுகாப்பாக வைத்திருங்கள்'’ என்று கூறியிருந்தனர். இதன்பிறகு ஆய்வாளர்கள் ஆராய்ந்ததில், இரவில் பூனைகளை வெளியேவிடுவது 10 சதவீதம் குறைந்திருந்தது.


இதுபோலவே இங்கிலாந்திலும் சாங்பேர்ட் சர்வைவல் என்ற அமைப்பும், சமூக அறிவியலாளர் சாரா க்ரவ்லி ஆகியோரும் இணைந்து போராடி வருகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த கிராண்ட் சைஸ்மோர், அமெரிக்க பறவைகள் பாதுகாப்பகத்தைச் சேர்ந்தவர். இவர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூனைகள் வளர்ப்போரிடம், பூனைகளை வீட்டிற்குள் வைத்திருப்பதற்கான உறுதிமொழியைப் பெற்றுள்ளார். காட்டு உயிரினங்களை பூனைகளிடமிருந்து காப்பாற்றுவதில் பூனைகளை வளர்ப்போரின் ஒத்துழைப்பு முக்கியமானது. அவர்களின் மாற்றம் மெதுவாக நடப்பதால், சில நாடுகளில் காட்டுயிர்களை காக்க பூனைகளை கட்டுப்படுத்துவது சட்டமாகவும் உருவாகலாம்.


தகவல்

New scientist


New scientist 31.10.2020

Aisling Irwin















கருத்துகள்