அதிர்ச்சியால் ஒருவருக்கு தலைமுடி நரைத்துபோகலாம்! - உண்மையா? பொய்யா?

 

 

 

 Portrait, Facial Hair, People, Beard, Mustache, Adult


1.ஒருவருக்கு திடீரென ஏற்படும் அதிர்ச்சியால் ஓரிரவில் முடி வெள்ளையாக வாய்ப்புள்ளது.

ரியல்: இந்த ரீலுக்கான ஆதாரம் 1793ஆம் ஆண்டு பிரான்சில் நடந்த புரட்சியில் அடங்கியுள்ளது. அப்போது ராணி சிறைபிடிக்கப்பட்டார். அடுத்தநாள் கில்லட்டினால் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது, அவரின் தலைமுடி முழுவதும் வெள்ளிக்காசு போல நரைத்துப் போயிருந்தது. இதைக் காரணம் காட்டி அதிர்ச்சியால் தலைமுடி ஓரிரவில் நரைக்கலாம் என்கிறார்கள். அது சாத்தியமல்ல.

நம் உடலுக்கு வயதாகும்போது தலைமுடியின் கருப்பு நிறத்திற்கு காரணமான மெலனின் சுரப்பு குறைகிறது. இதனால்தான் சால்ட் அண்ட் பெப்பர் லுக் சிலருக்கு ஏற்படுகிறது. இந்த எண்ணிக்கை அதிகரித்தால், ஒருவரின் தலைமுடி முழுக்க வெள்ளையாகும். இந்நிலைக்கு கனிடைஸ் சப்டிடா (Canities Subita) என்று பெயர். மெலனின், ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற வேதிப்பொருளையும் உருவாக்குவதால், முடியை வெளுத்துப்போகச்செய்வதில் அதன் பங்கும் உண்டு. ஆனால் இது ஓரிரவில் நடக்காது.

2.சாலை விபத்துகளை வாகனங்களிலுள்ள விளக்குகள் தடுக்கின்றன.

ரியல்: உண்மை. பல்வேறு பருவ காலங்களிலும், இரவுகளிலும் விளக்குகளை சரியாக எரியவிடாததன் காரணமாக பெருமளவு சாலை விபத்துகள் நடக்கின்றன. 70 கி.மீ. வேகத்திற்கு மேல் கனரக வாகனங்கள் செல்லும்போது, ஓட்டுநர்களால் சாலையில் எதிர்வரும் வாகனங்களைப் சரியாக பார்க்கமுடியாது. இதனால், வண்டியிலுள்ள முன்விளக்குகளின் ஒளிச்செறிவை குறைப்பதிலும் அதிகரிப்பதிலும் தடுமாறுகின்றனர். இப்பிரச்னைக்கு ஸ்மார்ட் பீம் எனும் தொழில்நுட்பம் தீர்வு தருகிறது. இதன்படி, வாகனத்தின் முன்பகுதியில் பொருத்தப்படும் கேமரா, சென்சார், எதிர்வரும் வாகனத்தின் விளக்கொளியைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப விளக்கின் ஒளிச்செறிவை தானாகவே மாற்றிக்கொள்கிறது. இத்தொழில்நுட்பம் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் கார்களில் பொருத்தப்பட்டுள்ளது.

3.நம் கண்களால் நான்காவது பரிமாணத்தைப் பார்க்க முடியும்.

ரியல்: இயற்பியலாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட பரிமாணங்கள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் நம்மால் மூன்று பரிமாணங்களைத் தாண்டுவது மிகவும் கடினம். காரணம், அதனை நம் மூளை எப்படி புரிந்துகொள்ளும் என்பது யாருக்கும் தெரியாது. 2டி படங்களை டிவியில் தியேட்டரில் பார்த்திருப்பீர்கள். இதில் படங்கள் தட்டையாக இருக்கும். இவற்றை 3டிக்கு மாற்றினால் அவற்றின் வடிவில் மாற்றங்கள் ஏற்படும். அதில் ஏற்படும் அடர்த்தியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் அனைத்து உருவங்களும் உங்களுக்கு நெருக்கமாக இருப்பது போல தோன்றும். சார்பியல் தியரிப்படி ஐன்ஸ்டீன் கூறிய நேரம் என்பது நான்காவது பரிமாணம் என்றாலும் இந்த அம்சம், விண்வெளியில் பிரிக்கமுடியாதபடி உள்ளது. இவற்றை மூளை உணர முடியாது. காரணம், மூளைக்கு அவை இன்னும் பழகவில்லை. எதிர்காலத்தில் இவற்றை இயற்பியலாளர்களும், கணித மேதைகளும் இவற்றை உருவாக்கலாம்.

4. விர்ச்சுவல் முறையில் உருவாக்கப்படும் சிமுலேட்டர்கள் சாலை விபத்துகளை தடுக்க உதவுகின்றன.

இன்று அனைவருமே வாகன உரிமத்தை எளிதாகப் பெறமுடிகிறது. ஆனால், நம்மில் பலரும் பல்வேறு பருவச்சூழல்களுக்கும், மோசமான சாலைகளுக்கும் ஏற்ப, வாகனங்களை ஓட்ட முடியாமல் தடுமாறி வருகிறோம். இதன் காரணமாகவே, ஏராளமான விபத்துகள் நேருகின்றன. சிமுலேட்டர்கள் முதலில் விமானத்துறை பயிற்சிக்காக உருவாக்கப்பட்டன.

தற்போது வாகனங்களை ஓட்டுபவர்களின் இயல்புகளைக் கண்டுபிடிக்க விர்ச்சுவல் முறையில் சிமுலேட்டர் கருவிகள் பயன்படுகின்றன. குறிப்பிட்ட வாகன மாடலில் கார் இருக்கைகள், ஸ்டீயரியங் வீல் கிளட்ச், கியர், பிரேக் ஆகியவையும் இருக்கும். விஆர் கருவியைக் கண்களில் பொருத்திக்கொண்டு கணினி விளையாட்டு போல விளையாட வேண்டியதுதான். சாலைகள், சூழல்கள் மட்டும் கணினியால் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் பல்வேறு கடினமான கட்டங்களில் வாகனங்களை ஒருவர் எப்படி கையாள்கிறார் என்பதை அறியமுடிகிறது. இதன்மூலம் ஒருவரின் வாகனம் கையாளும் திறனை சிறப்பாக கணிக்க முடியும். ஆனால் இச்சோதனைக்கான கட்டணம் அதிகம். டோட்டல் வெகிள் டைனமிக்ஸ் என்ற இச்சோதனைக் கருவியை அமெரிக்காவைச் சேர்ந்த அஸீம் எஸ்காண்டிரியன் என்பவர் வடிவமைத்தார். ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இக்கருவியை அமெரிக்கா போக்குவரத்து துறை அங்கீகரித்துள்ளது.

5. புதைகுழியில் எடை அதிகமுள்ளவரே விரைவில் மூழ்குவார்.

புதைகுழி மணல் மிகவும் வேறுபட்ட மணல் வகை அல்ல. நாம் கடற்கரையில் பார்க்கும் மணல் வகைதான். அதில் மேலே மட்டும் ஈரப்பதமான தன்மையுடன் இருக்கும். உள்ளே பொலபொலவென மணல் நிறைந்திருக்கும். மணல் இதுபோல மாறுவதற்கு இயற்கையாக இரு காரணங்கள் உண்டு. நிலநடுக்கம் ஏற்பட்டு நிலைத்தன்மை இன்றி குழியாக மாறுவது, அடுத்து, அந்த இடத்தில் நீர் தேங்கி காலப்போக்கில் மணல் கூழ் போல மாறுவது எனலாம்.

ஒருவர் புதைகுழியில் மூழ்கி இறப்பது முழுக்க அவரது பயத்தினாலும், கை,கால்களை வேகமாக உதைத்து வெளியேற முயல்வதாலும்தான். பருமனான உடல் கொண்டவர் புதைகுழியில் மூழ்க வாய்ப்பு குறைவு. உடலிலுள்ள கொழுப்பின் தன்மையால் அவர் மிதப்பார். கைகளை மேலே தூக்கி அதிக அசைவுகள் இன்றி இருந்தால் மூழ்குவது குறையும். பின்னர் உதவி கோரி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.




கருத்துகள்