இனி ஒன்றையும் மறைக்க முடியாது - பரவும் அரசின் கண்காணிப்பு பயங்கரவாதம்






Hands, Smartphone, Porn, Sex, Naked, Woman, Tube, Icon





கோவிட் -19 தொற்று மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்து பொருளாதாரத்தை உடைத்து நொறுக்கியுள்ளது. ஆனால் பல்வேறு நாட்டு அரசுகளுக்கு இதைப்போன்ற கண்காணிப்புகளை பலப்படுத்தும் சந்தர்ப்பம் வேறு எப்போதும் கிடைத்துவிடாது. எனவே பல்வேறு நாட்டு அரசுகளும் கண்காணிப்பு சார்ந்த செயலிகளை வேகமாக அமல்படுத்தி மக்களை கம்பி வேலிக்குள் அடைத்து வருகின்றன.

ஃபேஸ்புக் நிறுவனர் இணையக் கட்டுப்பாடுகளை கொண்டுள்ள சீனாவில் தன் தொழிலை கொண்டு செல்லமுடியவில்லை என மனம் குமுறியுள்ளார். உண்மையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு இணையான மென்பொருட்களை சீனர்கள் உருவாக்கி பயன்படுத்தி வருகின்றனர். சீனாவில் நிலவிவரும் நிலவரம் சரியா தவறா என்பதல்ல. மேற்கத்திய ஜனநாயக முறை என்பதை மார்க் பேசும் விதத்தில் புரிந்துகொள்ள வேண்டுமெனில், வணிகத்தை அமெரிக்கர்கள், இங்கிலாந்துக்காரர்கள் செய்யவேண்டும். அதற்கு பயனாளர்களாக ஆசிய கண்டம் இருக்கவேண்டும் என்பதைத்தான் அவரது பேச்சு மறைமுகமாக குறிப்பிடுகிறது.

இனிவரும் பத்தாண்டுகளுக்குள் நாம் வைத்திருக்கும் ஆண்ட்ராய்டு போன், அதில் செயல்படும் பல்வேறு செயலிகள் மூலம் நம் தினசரி நடவடிக்கைகளை அரசு மட்டுமல்ல தனியார் நிறுவனங்களும் கண்காணித்து வரும். காதலிக்கு அனுப்பும் செக்ஸ் குறுஞ்செய்திகள், கஃபே ஃபிரஷ்ஷில் பருகும் பலூடா, மெட்ராஸ் கஃபேயில் ஆர்டர் செய்த ஸ்பெஷல் டீ, சிட்டி சென்டரில் பார்க்க முன்பதிவு செய்த சினிமா, உங்களுடைய சம்பளம், இஎம்ஐ விவரங்கள் என அனைத்து இனி சந்தையில் நடைபெறும் போக்குவரத்து போல வெட்டவெளிச்சமாகிவிடும். இணையம் சார்ந்த செயல்பாட்டுக்கு பெருமளவு தனிப்பட்ட தகவல்களை விட்டுக்கொடுத்தால்தான் நம்மால் அதில் இயங்கவே முடியும். நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போனில் பல்வேறு செயலிகளை இயக்கும்போது கவனித்திருப்பீர்கள். பலவற்றுக்கும் அக்ரி என இசைந்தால் மட்டுமே அந்த செயலியை பயன்படுத்தவே முடியும். இலவசமாக இயங்கும் பல்வேறு செயலிகள் அதற்கு பதிலாக மைக், கேமரா உள்ளிட்டவற்றை இயக்கி தேவையானபோது நம்மைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதுபற்றிய தகவல்கள் சூசன் ஸ்பிரிட்ஸ் நாவலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு, ஆதார் மூலம் ஏற்கெனவே மக்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து வைக்கத் தொடங்கிவிட்டது. பெருந்தொற்று காலத்தில் மக்களை  முழுமையாக கண்காணிக்க ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் என்று சொல்லி வருகிறது. விரைவில் இந்த ஆப்பும் ஆதார் போல நீதிமன்றங்கள் கட்டுப்படுத்தமுடியாதபடி மாறலாம். 

இனி வா.மு.கோமு எழுதிய சிறுகதையின் தலைப்பான இனி ஒண்ணையும் மறைக்க முடியாது என்பது போலவே நிலைமை மாறலாம். நாம் யாரிடமும் பொய் என்ற ஒன்றை சொல்லமுடியாது. நாம் பிறரைப் பற்றி என்ன நினைக்கிறோம், அவர்கள் நம்மைப் பற்றி பிறரிடம் புறணி பேசும் விஷயங்கள், பொறாமைப்படும் பேச்சுகள், செயல்பாடுகள், ஆபீசுக்கு வராமல் பொய் சொல்லி லீவ் எடுப்பது, மனைவிக்கு தெரியாமல் காதலிகளை வளைத்து சிருங்கார லீலைகள் புரிவது என அனைத்தும் கண்ணாடி வீடு போல அனைவருக்கும் தெரிந்துவிடும்படிதான் இருக்கும். இப்படி நிலைமை மாறும்போது உளவியல் மருத்துவர் ருத்ரன், ஷாலினி போன்றோர் பரபரப்பாக இயங்குவார்கள். இதற்கு அடுத்தபடியாக சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வழக்குரைஞர்கள் பாயும்புலியாக பாய்ந்துகொண்டிருப்பார்கள்.

நன்கொடை வழங்கியபடி திரைக்கு மறைவில் தொழிலதிபர்கள் செய்யும் இருள் வேலைகள், பாலியல் உறவுகள், இரக்கமற்ற வணிகம் என அனைத்தும் அனைவருக்கும் தெரியும்படியான சூழல் ஏற்பட்டு வருகிறது. இனி வரும் காலத்தில் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்கள் என்பது அருங்காட்சியகத்தில் பார்க்கும் விஷயங்களாக மாறும். மில்லினிய இளைஞர்கள் அவர்களாக குறிப்பிட்ட காலம் வரை வாழும் இயல்பு கொண்டவர்கள் தங்கள் இணையர்களாக தேர்ந்தெடுத்துக்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனை தவிர்க்க முடியாது. இப்போது இந்தியாவில் திருமணங்களுக்கு மீறிய உறவுகளுக்கான டேட்டிங் வலைத்தளங்கள் பெருகி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கிலான இந்தியர்கள் இணைந்து வருகின்றனர் என்ற செய்தி நமக்கு என்ன சொல்கிறது?

தனக்குத்தானே சந்தோஷமாக திருப்தியாக வாழ்வதே முக்கியம் என்று நினைக்கும் தலைமுறையினர் உருவாகி வருகிறார். இந்நாள்வரை சேமிப்பில் பணக்காரராக இருந்தவர்கள் இனி குறைந்துபோக அதிக வாய்ப்புகள் உள்ளன. நன்றாக செலவழித்து சந்தோஷமாக இருக்கும் இளைஞர்களை இனி பார்க்கப்போகிறோம். சுயநலமோ, தந்திரமோ ஜெயிப்பவர்கள் நமது தலைமுறைக்கான அரசியல்வாதிகளாக இருக்க முடியும். வெற்றிதான் முக்கியமே ஒழிய அதை எப்படியேனும் அடையலாம் என்ற எண்ணப்போக்கு இப்போது அனைத்து தளங்களிலும் உருவாகி வருகிறது. தேர்தலில் நாம் வாக்களித்த கட்சி வென்றாலும் ஆட்சியமைப்பது வேறு கட்சியாக இருக்கலாம். அதனை நாம் தீர்மானிக்க முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்டவர் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள் என்ற பெரியாரின் சொல்படி நடப்பவர்களை இனி தேட வேண்டியிருக்கும். நல்லது, கெட்டது, சரி, தவறு என்பதை அதிகாரத்திலுள்ளவர்கள் முடிவு செய்வார்கள். இதனால் பெரும்பான்மையான சுதந்திர அமைப்புகள் நொறுங்கும். அவர்கள் மீது மக்களுக்கு இனி எந்த நம்பிக்கையும் இருக்காது. அவர்களுக்கும் அவர்களுக்கான அடுத்த கட்ட பதவி, உபகாரங்களுக்காகவே பணி செய்வார்கள். கடந்த காலத்தில நாம் முட்டாளாக இருந்தோம். எதிர்காலத்திலும் நாம் அப்படியே இருப்போம். மனிதர்களுக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

ஆங்கிலத்தில்: ரேகா ஜா


கருத்துகள்