காமன்வெல்த் அமைப்பில் இந்தியாவின் பங்கு 50 சதவீதம் ஆகும்! - பேட்ரிசியா ஸ்காட்லாந்து , காமன்வெல்த் செயலாளர்


Earth, Globe, Water, Wave, Sea, Lake, Setting
pixabay



காமன்வெல்த் அமைப்பு தனது உறுப்பினர் நாடுகளில் வெப்பமயமாதலுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் பொதுச்செயலாளர் பேட்ரிசியா ஸ்காட்லாந்தை சந்தித்துப் பேசினோம்.

ஆங்கிலத்தில்: மன்கா பேஹ்ல்

பெருந்தொற்று பாதிப்பு உலகமெங்கும் இருக்கிறது. இதற்கும் வெப்பமயமாதலுக்கும் தொடர்பு இருக்கிறதா?

வெப்பமயமாதல் பாதிப்பு இப்போதும் இருக்கிறது. இப்போது திடீரென ஏற்பட்டுள்ள கோவிட் -19 பாதிப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையை மிக தீவிரமாக பாதித்துள்ளது. இந்த சூழ்நிலை தெற்காசியா, கரீபியன் பகுதிகளின் வாழ்நிலையை கடுமையாக பாதித்துள்ளது. பெருந்தொற்று பாதிப்பால் வெப்பமயமாதலுக்கான பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகளை எங்களால் எடுக்க முடியவில்லை. அனைத்து நாடுகளுக்கும் பொதுவான திட்டம் ஒன்றின் மூலம் பல்வேறு அம்சங்களை இணைக்க முயன்று வருகிறோம்.

வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதில் காமன்வெல்த் அமைப்பின் பங்கு என்ன?

காமன்வெல்த் அமைப்பில் தற்போது 54 நாடுகள் உள்ளன. மக்கள்தொகை 2.4 பில்லியன். அறுபது சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முப்பது வயதிற்கும் உட்பட்டோர். 32 நாடுகள் சிறிய நாடுகள் என்றும், அதில் 24 தீவு நாடுகள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. எங்கள் அமைப்பிற்கு சூழலைக்காக்கும் முயற்சியில் நீண்ட வரலாறு உள்ளது. 1989ஆம் ஆண்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் பசுமை இல்ல வாயு வெளியீட்டுக்கு எதிராகவும், காடுகளை அழிப்பதற்கு எதிராகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளன.

இதில் இந்தியாவின் பங்கு என்ன?

காமன்வெல்த் அமைப்பில் இந்தியாவின் பங்கு 50 சதவீதம். இந்தியாவுக்கு சொந்தமாக இரண்டு தீவுகள் உள்ளன. மேலும் கடற்கரை பிரதேசங்கள், பாலைவனங்கள், பருவக்காடுகள், ஆறுகள் ஆகியவை உள்ளன.  இங்குள்ள கங்கை ஆற்றுக்கு என்ன ஆனது? இமாலயத்தில் ஏற்படும் பருவச்சூழல் பாதிப்புகள் ஆகியவை முக்கியமாக உலகில் கவனிக்கப்படுகின்றன. மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரிக்கும்போது, பன்மைத்துவ சூழலை இந்தியா பேணி வருவது சவாலான ஒன்று.

இந்த அமைப்பில் முக்கியமான நாடுகள் என்று எவற்றைச் சொல்லுவீர்கள்?

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து  2050க்குள் ஜீரோ கார்பன் வெளியீடு என்ற லட்சியத்தை நோக்கி செயல்பட்டு வருகிறார்கள். கார்பன் வெளியீட்டைக் குறைப்பதன் மூலம் வெப்பமயமாதல் பாதிப்பை தடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன். எனவே இந்த அமைப்பிலுள்ள மேற்சொன்ன இருநாடுகளின் செயல்பாடுகளை நான் பாராட்டுகிறேன்.

ஐ.நா அமைப்பு காப்26 என்ற மாநாட்டை ஒத்தி வைத்துள்ளது. இதனால் பருவச்சூழலைக் காக்கும் செயல்பாட்டில் தேக்கம் ஏற்படுமா?

உண்மைதான். இதுபோன்ற மாநாடு பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுவது எங்களது செயல்பாட்டில் நிச்சயமாக தேக்கம் ஏற்படுத்தும். இதற்கு மாற்றாக, விர்ச்சுவல் முறையில் மாநாட்டை நடத்துவதற்கான செயல்பாட்டில் இருக்கிறோம். இம்முறையில் மாநாட்டை நடத்துவதால் கார்பன் வெளியீடும் ஏற்படாது என்பதால் இந்த வழியை நாங்கள் எதிர்காலத்தில் கடைபிடிக்க இருக்கிறோம்.

பாரிஸ் சூழல் ஒப்பந்தத்தில் காமன்வெல்த் அமைப்பின் பங்கு என்ன?

எங்களது உறுப்பு நாடுகள் பாரிஸ் சூழல் ஒப்பந்த இலக்குகளை எட்ட நாங்களும் பல்வேறு திட்டங்களை தீட்டி உதவுகிறோம். கடல் நீர் மட்டம் உயர்வதை அறிய ப்ளூ சார்ட் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இதுபோலவே எங்களிடம் கார்பன் வெளியீட்டை தடுக்கும் பல்வேறு திட்டங்கள் உள்ளன. இவற்றை நாங்கள் உறுப்பு நாடுகளிடம் நிதியுதவி பெற்று செய்து வருகிறோம். பாரிஸ் இலக்கை எட்டுவது ஒன்றும் கனவல்ல. சரியாக திட்டமிட்டு இலக்கை எட்ட முடிந்தால் அந்த இலக்கு பெரிய பிரச்னையாக இருக்காது. பல்வேறு நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த உதவும்.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா மே 6, 2020

 

கருத்துகள்